இந்துவா? முஸ்லிமா?
January 2, 2006மலேஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மூர்த்தி என்கிற முஹம்மது அப்துல்லா டிசம்பர்-20 ம் தேதி மரணமடைந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அவரது சவ அடக்கம் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மூர்த்தி சென்ற வருடம் முஸ்லிமாக மாறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மூர்த்தி மதம் மாறியதற்கு எந்த விதமான சான்றிதழும் இல்லை எனவும் அவர் மதம் மாறியதை தன்னிடம் கூறியதுகூட இல்லை எனவும் அவரது மனைவி காளியம்மாள் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத மலேஷிய ஷரியா நீதிமன்றம் முஹம்மது அப்துல்லாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி புதைக்கத்தான் வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி அதன்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புதான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
“மலேசிய நீதிமன்றங்களின் இந்தச்செயல் அந் நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத பிற சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது என கண்டனக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிற மதத்தினரின் உரிமைகளை பறிக்க நடக்கும் முயற்சி இது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என தட்ஸ்தமிழ் இணைய இதழ் தெரிவிக்கிறது.
பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் முழுமையாக இல்லாத சூழ்நிலையில் மலேசிய நீதிமன்றங்களின் மீதான இந்த குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருக்குமா என்பது குறித்து சில கேள்விகள் எழுகின்றன.
* மரணித்தவர் ஒரு முஸ்லிம்தான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஒரு ஷரியா நீதிமன்றம் அவரை முஸ்லிம் என அறிவிக்குமா?
* அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் என நிரூபிக்க இயலாத ஒருவரை முஸ்லிம்களின் அடக்கவிடத்தில் ஒரு முஸ்லிம் போலவே அடக்கம் செய்ய ஷரியா நீதிமன்றம் சம்மதிக்குமா?
* முஸ்லிம் என நிரூபிக்க முடியாத ஒருவரின் உடலை, முஸ்லிம் என அறிவித்து அடக்கம் செய்வதால், ஷரியா நீதிமன்றத்திற்கோ, பிற முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ ஏதாவது பயன் ஏற்படுமா?
* இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரது உடலை ஒரு முஸ்லிமல்லாதவர் போல எரியூட்டுவது முறையாகுமா?
பத்திரிக்கைச் செய்திகள் தெளிவாக இல்லாத சூழ்நிலையில் ஆரோக்கியம் என்பவர் வழக்கம்போல எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றும் செயலாக ஒரு பதிவிட்டிருக்கிறார். ‘ஒரு சிலரது சதியால்’ அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய முடியவில்லையாம். என்ன சதி என்பதையாவது அவர் விளக்கியிருக்கலாம். இந்துவாகிய ஒருவரை முஸ்லிம் என பெயர் சூட்டி அடக்கம் செய்வதால் யாருக்கு என்ன பயன் என்பதையும் விளக்கியிருக்கலாம்.
இது போதாதென்று ‘இதுவே வெகு விரைவில் தமிழகத்திற்கும் வரப்போகிறது’ என முன்னறிவிப்பும் செய்திருக்கிறார் ஆரோக்கியம். நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களை உயிருடனேயே கொளுத்தியவர்கள், முஸ்லிம்களின் பிரேதங்களையா கொளுத்த தயங்கப் போகிறார்கள்?

//நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களை உயிருடனேயே கொளுத்தியவர்கள், முஸ்லிம்களின் பிரேதங்களையா கொளுத்த தயங்கப் போகிறார்கள்?//
மிகச் சரியாக சொன்னீர்கள்.
Comment by ஜாபர் அலி — January 10, 2006 @ 7:06 pm