இந்துவா? முஸ்லிமா? - 2

January 7, 2006

மூர்த்தி @ முஹம்மது அப்துல்லாவின் நல்லடக்கம் குறித்த பதிவிற்கு ஆரோக்கியம் தனது பதிவில் பதிலளித்திருக்கிறார். (அடைப்புக்குறிக்குள் உள்ளது அவரது பதில்கள்)

//மரணித்தவர் ஒரு முஸ்லிம்தான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஒரு ஷரியா நீதிமன்றம் அவரை முஸ்லிம் என அறிவிக்குமா?//

(அறிவித்திருக்கிறது. )

//* அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் என நிரூபிக்க இயலாத ஒருவரை முஸ்லிம்களின் அடக்கவிடத்தில் ஒரு முஸ்லிம் போலவே அடக்கம் செய்ய ஷரியா நீதிமன்றம் சம்மதிக்குமா?//

(சம்மதிப்பது மட்டுமல்ல, அவரை முஸ்லீம் முறைப்படிதான் அடக்கம் செய்யவேண்டும் என்று போலீஸை அனுப்பி உடலை கைப்பற்றி அரசாங்க காவலோடு முஸ்லீம் அடக்கம் செய்திருக்கிறார்கள்.)

என் பதில்: ஷரியா நீதிமன்றம் ஆதாரமில்லாமல்தான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது என ஆரோக்கியம் குற்றச்சாட்டு சுமத்துவதால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கே இருக்கிறது. நிரூபிப்பாரா?

//* முஸ்லிம் என நிரூபிக்க முடியாத ஒருவரின் உடலை, முஸ்லிம் என அறிவித்து அடக்கம் செய்வதால், ஷரியா நீதிமன்றத்திற்கோ, பிற முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ ஏதாவது பயன் ஏற்படுமா?//

(பார் எல்லாரும் மரணம் அடைந்த பின்னரும் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்று உலகுக்கு காட்டுவதற்காக இருக்கலாம். முஸ்லீம் முல்லாக்களுக்கு உயிரிருந்தால் என்ன உயிரில்லாவிட்டால் என்ன? )

என் பதில்: ஆரோக்கியத்திற்கு இங்கு பதில் சொல்ல ஒன்றும் இல்லை என்பதால், வழக்கம்போலவே தனது யூகங்கள், கற்பனைகளை எடுத்து வைத்திருக்கிறார்.

திருமறை கூறுகிறது: “அந்தச் சமூகம் சென்று விட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே; அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்” (2:134)

ஒருவர் இறந்துபோன பிறகாவது அவரை முஸ்லிமாக்கித்தீர வேண்டும் என்ற கடப்பாடு எந்த ஒரு முஸ்லிமுக்கும் இல்லை என்பதை அறிந்த எந்தவொரு முஸ்லிம் முல்லாவும் இறந்துபோன ஒருவரை முஸ்லிமாக பிரகடனப்படுத்த முன்வர மாட்டார்கள். இப்படியெல்லாம் செய்துதான் மதத்தை வளர்க்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இஸ்லாம் இல்லை. இஸ்லாத்திற்கு சேவை செய்வதாக நினைத்துக்கொண்டுகூட யாரும் இவ்வாறு செய்திருக்க வழியில்லை. காரணம், அவ்வாறு செய்வதால் நிச்சயம் இஸ்லாத்திற்கு பலன் எதுவும் ஏற்படாது, மாறாக அவப்பெயர்தான் ஏற்படும் என்பதை சிறுபிள்ளைகள் கூட அறியும்.

//* இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஒரு முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரது உடலை ஒரு முஸ்லிமல்லாதவர் போல எரியூட்டுவது முறையாகுமா?//

(அவர் முஸ்லீம் அல்ல என்று கூடவே வாழ்ந்த மனைவி கூறுகிறார். கூடவே வாழ்ந்த நண்பர்கள் அவர் இந்துதான் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவரை இந்துவாக அடக்கம் செய்துவதானே அவருக்கு செலுத்தும் மரியாதை?)

என் பதில்: சந்தேகமில்லாமல் அவர் இந்துவாகத்தான் இறந்தார் என்பது நிச்சயமானது என்றால் அவரை முஸ்லிம் என்று அறிவித்து இஸ்லாத்தை இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியதில் யாருக்கு என்ன லாபம்?

(பாருங்கள் இப்னு பஷீர். கிரிஸ்துவர்கள் மத்தியில் கிரிஸ்துவ நீதிமன்றம் என்று ஏதுமில்லை. இந்துக்கள் மத்தியில் இந்து நீதிமன்றம் என்று ஏதுமில்லை. இருப்பது பொது நீதிமன்றங்கள். அதில் எல்லோரும் வாதிடலாம். ஆனால் முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களுக்கு என இஸ்லாமிய நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவைகளில் இந்துக்களோ கிரிஸ்துவர்களோ படியேற முடியாது. அதில் கொடுக்கப்படும் நீதியை கேள்வி கேட்கமுடியாது. சிவில் நீதிமன்றத்தில் நின்றால், தனக்கு அதிகாரமில்லை என்று வழக்கு தூக்கி எறியப்படுகிறது. )

என் பதில்: ஓ.. இதுதான் உங்கள் பிரச்னையா? முஸ்லிம்கள் தமது மார்க்க விவகாரங்களுக்காக தனி நீதிமன்றம் வைத்திருப்பதுதான் உங்கள் கண்களை உறுத்துகிறதா? பல நாடுகளில் சிவில் வழக்குகளுக்காக தனி நீதிமன்றமும் கிரிமினல் வழக்குகளுக்காக தனி நீதிமன்றமும் அமைத்திருப்பார்கள். சிவில் வழக்குகளை கிரிமினல் நீதிமன்றத்திலோ, கிரிமினல் வழக்குகளை சிவில் நீதிமன்றங்களிலோ விசாரிக்க மாட்டார்கள். அது போன்றதுதான் ஷரியா நீதிமன்றங்களும்.

(இதே நிலையை முஸ்லீம்களுக்கு சற்றே கொடுத்துப்பாருங்களேன்.

கிறிஸ்துவ நீதிமன்றம் அல்லது இந்து நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது வைத்துக்கொள்வோம். அங்கு முஸ்லீம்கள் நின்று வாதிட முடியாது. அங்கு கொடுக்கப்படும் நீதியை தனக்கு பாதகமாக இருந்தாலும் ஒரு முஸ்லீம் சிவில் கோர்ட்டில் எதிர்த்து வழக்கு போட முடியாது என்று இருந்தால், எப்படி இருக்கும் உங்களுக்கு?

முஸ்லீம் பெரும்பான்மை நடுவே வாழும் இந்துக்களின் கிரிஸ்துவர்களின் அவல நிலை புரிகிறதா?

நிச்சயம் உங்களுக்கு புரியாது. ஏனெனில் உங்களது மதம் அப்படிப்பட்ட கொடூரமான மதம். மதம் உங்கள் கண்களை மறைக்கும் வரைக்கும் மற்றவர்களின் நிலைமை புரியாது. )

எனக்கு புரிகிறது. கண்களில் கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்களுக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது.

இஸ்லாத்திற்கு எதிராக 10,000 இணைய தளங்கள்!

இஸ்லாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் இழிவுபடுத்தும் ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் உள்ளதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு வருடந்தோறும் மொத்தம் ஒரு பில்லியன் டாலர் செலவழிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வித்துறைப் பேராசிரியர் டாக்டர். ஸைய்யித் மர்இ இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.

அதே சமயம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துகின்ற இணையதளங்களின் எண்ணிக்கை இருநூறைத்தாண்டவில்லை. பெரும்பாலும் அவை தனி நபர்களால் தொடங்கப்பட்டவை. தேவையான அளவில் முறைமையோ, திட்டங்களோ அதில் இல்லை. பட்ஜெட்டும் மிகக்குறைவு. இஸ்லாத்தை அறிமுகப்படுத்தவும் அதனைப்பற்றிய தவறான எண்ணங்களை நீக்கவும் இத்தகைய இணைய தளங்களுக்கு வருடம் தோறும் ஒரு மில்லியன் டாலரே ஒதுக்கப்படுகிறது.

1980-ல் இருந்தே இணைய தளத்தில் இஸ்லாமிய விரோத தளங்கள் வந்து விட்டன. இதற்குப் பிண்ணனியில் யூத குழுக்களே இருந்தன. இஸ்லாமிய விரோத தளங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இறைத்தூதரையும் இனிய தோழர்களையும் தரம் தாழ்ந்த முறையில் இழிவு படுத்துவது ஒரு வகை. வேறு சிலவற்றில் அரபி லிபியில் உள்ள குர்ஆன் வசனங்களை பன்றிகள், நாய்கள் உருவத்தில் “காலியோகிராபி” செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்த இணைய தளங்களில் குர்ஆனில் இல்லாத விதவிதமான ‘அத்தியாயங்களை’ காணலாம்.

இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தீவிரவாத சேற்றை வாரித் தூற்றும் வலைகளும் ஏராளம் உள்ளன. எந்தவொரு அடிப்படையும் இல்லாத பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை இவற்றில் காணலாம். நிர்வாணமான பெண்களுடன் புனித குர்ஆனின் வாசகங்களை சேர்த்து வைக்கும் கயவர்களும் உள்ளனர். புகழ்பெற்ற கலைஞர்களின் உடைகளிலும் சில நேரங்களில் வசனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இது ஒரு மனோரீதியான தாக்குதலும் கூட என்கிறார் ஆய்வை வெளியிட்டுள்ள டாக்டர். ஸைய்யித் மர்இ. -A.R.

நன்றி: ‘சமரசம்’ 1-15 ஜனவரி 2006

என் குறிப்பு: இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் தமிழ் இணயத்திற்கு புதிதல்ல. சமயம் கிடைக்கும்போதெல்லாம் இஸ்லாத்தை தாக்குவதற்காக சிலரும், அதையே முழு நேர கடமையாகக் கொண்டு, அதற்காகவே வலைப்பதிவுகள் நடத்திக் கொண்டிருக்கும் சிலரும் இங்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மேல் இந்த அளவுக்கு வெறுப்பு ஏற்பட என்னதான் காரணமோ?