மும்பை குண்டுவெடிப்பு!
July 12, 2006அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!
- எத்தனை குடும்பங்கள் தனது குடும்பத் தலைவனை இழந்தனவோ!
- எத்தனை குழந்தைகள் தம் தாயை இழந்தனவோ!
- கனவுகளை சுமந்து சென்ற எத்தனை இளைஞர்களும் யுவதிகளும் மடிந்து போனார்களோ!
- அரும்பும் வயதிலேயே எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிரைத் தொலைத்தனவோ!
சென்றவர்கள் சென்று விட்டார்களென, இருப்பவர்களுக்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்?
மும்பையில் குண்டு வெடித்த செய்தியை அறிந்தபோது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.
இக்கொடூர சம்பவத்திற்கும் உடனே மதச்சாயம் பூசி, அனுதாபங்களை கொச்சை படுத்தி, சோகங்களை ஏளனம் செய்ய ஒரு கும்பல் புறப்பட்டிருப்பது வருந்தத் தக்கது.
நேசகுமார் என்பவர் ஒரு பின்னூட்டத்தில் எழுதுகிறார்;
இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் .
எப்படி அய்யா உங்களால் இதைப் போல சிந்திக்க முடிகிறது? உங்கள் கூற்றுப்படி எந்த ‘இஸ்லாமிஸ்ட் கும்பலும்’ பிரச்சாரத்தை ஆரம்பிக்குமுன்பாகவே அவர்கள் மேல் மறைமுகமாக பழி சுமத்தி சண்டைக்கு இழுக்கும் உங்கள் இழிகுணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டீர்களா?
போனமுறை இப்படி நூற்றுக்கணக்கானவர்களைப் பலிகொண்டவர்கள் சுகமாக கராச்சியில் பாகிஸ்தான் இராணுவப் பாதுகாப்புடன் வலம்வந்து கொண்டுள்ளார்கள்.
‘இதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?’ என்று யாராவது கேட்டால், அவர்களை ‘இஸ்லாமிஸ்ட் கும்பல்’ என குற்றம் சாட்டுவீர்கள். தெரிந்ததுதானே!
கோவையில் குண்டு வைத்தவர்களின் பேட்டியை எடுத்து வலைப்பதியும் மதவெறியர்களும் இங்கே வலம்வந்து கொண்டுள்ளார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேட்டியை வலைப்பதிபவர்கள் மத வெறியர்களா? சபாஷ்..! ‘காந்தியை கொன்ற கோட்ஸே குற்றவாளியே அல்ல’ என வெட்கமே இல்லாமல் சப்பைக்கட்டு கட்டுபவர்களையும் அதற்கு ஜால்ரா தட்டுபவர்களுக்கும் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?
இதையெல்லாம் சொன்னால் பீடி பத்தவைக்கிறார்கள் என்று புகார் சொல்லும் இன்னொரு கும்பல் - முதலைக்கண்ணீர் விட்டுக்கொண்டே.
‘பீடி’ உதாரணம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ‘சுருட்டு பத்தவைக்கிறார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாமா? துளி கூட மனிதாபிமானம் இல்லாமல், அனுதாபங்களை ஏளனப்படுத்தி, சோகங்களில் கூட சுயலாபம் அடைய முயல்பவர்களை வேறு எப்படி குறிப்பிடுவது?
இதயெல்லாம் உரத்துப் பேசினால் மதங்களுக்கிடையே உரசல் ஏற்படும் என்று பதறி ஓடிவந்து வாய் பொத்தும் திம்மிக் கும்பல் ஒன்று.
உண்மைதான்.. மதங்களுக்கிடையில் உரசலை ஏற்படுத்தி, மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஈனத்தனமான கும்பலுக்கு, உரசலை தவிர்க்க யாராவது யோசனை சொன்னால் பிடிக்காதுதான்.
வேடிக்கை மனிதர்கள் நாம். விட்டில் பூச்சிகள் போல தொடர்ந்து 1400 வருடங்களாக வீழ்ந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்தும் பார்க்காதது போலவே போய்க்கொண்டிருக்கிறோம்….
என்று நிற்கும் இந்த வன்முறையின் ஜியாரத் என்றுதான் தெரியவில்லை .
பூனைக்குட்டி கடைசியாக வெளியில் வந்தே விட்டது! எங்கு எந்தப் பிரச்னை நடந்தாலும் பழியை தூக்கி இஸ்லாத்தின் மேல் போட்டு, ‘எல்லாவற்றிற்கும் இஸ்லாம்தான் காரணம்’ என்ற ஒரு மாயையை உண்டாக்க முயலும் உங்கள் உள்ளக் கிடக்கை, இதோ, வெளிப்பட்டு விட்டது. சிலையில் சேறு பூசினாலும், குண்டுவெடித்தாலும், ஏன்.. வெள்ளப்பெருக்கிற்கு கூட இஸ்லாம்தான் காரணம் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது. திருடன் தான் தப்பித்துக் கொள்வதற்காக எல்லோருக்கும் முன்பாக ‘திருடன்.. திருடன்..’ என்று கத்திக் கொண்டே ஓடும் கதைதான் நினைவிற்கு வருகிறது.
இஸ்லாத்தை நன்றாக புரிந்து அதைப் பின்பற்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இத்தகைய கொடூரச் செயலை செய்ய மாட்டான்.
குர்ஆன் சொல்கிறது;
“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (5:32)
நல்ல வேளையாக, நேசகுமார் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். தெளிந்த சிந்தனையுடனான ஒரு சிறந்த பதிவை வழங்கிய கோவி.கண்ணன் பாராட்டுதலுக்குரியவர்.
