தூக்கில் தொங்க விடுங்கள்!

July 18, 2006

ஜூனியர் விகடனில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா-வின் பேட்டி

ஒவ்வொரு முறையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடைபெறும் போது, எங்கள் இதயங்கள் சுக்குநூறாக்கப்படுகின்றன. உயிர் இழந்த அப்பாவிகளை எண்ணி இதயம் நொறுங்குகின்றது. காயமடைந்தவர்களின் அவல நிலை, இதயத்தை இறுக்குகின்றது. உறவினர்களை பயங்கரவாதச் செயல்களுக்கு பலிகொடுத்தவர்களின் கூக்குரல்கள், எமது நெஞ்சங்களை பிழிந்தெடுக்கின்றன. இதனுடன் சேர்ந்து இந்த பயங்கரவாத, மனிதகுல விரோதச் செயல்களை செய்தவர்கள் முஸ்லிம்கள் என்ற யூகங்கள், சம்பவம் நடந்த உடனே எழுப்பப்படுவது இதயத் துடிப்பையே நிறுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

இஸ்லாம் மிக தெளிவாக பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்துள்ளது. திருக்குர்ஆன் மிக தெளிவாக, ‘அப்பாவி ஒருவரின் உயிரைப் பறிப்பது முழு மனிதச் சமுதாயத்தை அழித்ததற்கு சமமானது’ என்று பறை சாற்றுகின்றது. எனவே இதுபோன்ற குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இஸ்லாத்தின் பார்வையில் மனித இனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கைளே.

உண்மை இப்படியிருக்க… இதுபோல் சம்பவங்கள் நடைபெறும்போது உடனடியாக அதனை மதத்துடன் தொடர்புபடுத்தி பேசுவது, மனிதாபிமானத்துக்கு விரோதமானதாகும். மும்பை ரயில்களில் குண்டு வெடிப்புகள் நடைபெற்ற உடனேயே அதனை நடத்தியவர்கள் முஸ்லிம் அமைப்புகள் என்று செய்திகள் உலவ தொடங்கின. ஆனால், குண்டுவெடிப்புகளில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கு இருப்பு பாதை ஒரம் வசிக்கும் ஏழை முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் முன்வந்தார்கள் என்பது மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவில்லை.

முஸ்லிம்களை நோக்கி சுட்டு விரல் நீட்டப்படும் பின்னணியில் நடைபெறும் விசாரணைகள் காரணமாக, கடந்த காலங்களில் காவல் துறையினரின் விசாரணைகளும் ஒருமுகமாக சென்றுள்ளன. உண்மையான குற்றவாளிகளும் அவர்களைப் பின் நின்று இயக்கியவர்களும் தப்பித்துக் கொள்கின்றனர். விளைவு… குண்டு வெடிப்புகள் தொடர்கதையாகின்றன.

எடுத்துக்காட்டாக, பெங்களூர் சம்பவம் தொடர்பாக கர்நாடகக் காவல் துறையினர் சென்னையில் பஷீர் என்பவரைக் கைது செய்தனர். ஆனால், தமிழக காவல்துறையில் உள்ள சில திறமைமிகுந்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, கர்நாடக காவல்துறையினரின் முடிவு தவறானது என்று நிரூபித்தனர். இதன் விளைவாக அப்பாவி பஷீர் பயங்கரவாதியாக சிறையில் தள்ளப்படுவதிலிருந்து தப்பினார். ஆனால், இதுபோன்ற பொறுப்பு உணர்வுடன் பெரும்பாலான காவல்துறையினர் நடந்துகொள்வது இல்லை. இதன் விளைவாக பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாமல் போய்விடுகின்றது.

மும்பை குண்டு வெடிப்புகள் நமது நாட்டில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கடைசி பயங்கரவாத நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனை. ‘இந்தப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள்’ என சந்தேகமற தெரிந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இதுவே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையும். எமது இதயத்தின் அமைதிக்கும் வழியாக இருக்கும்.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

நன்றி: ஜூனியர் விகடன்