மாயவரத்தானுக்கு நன்றி!
July 27, 2006“ஐயையோ.. இங்கே பாருங்க.. நம்மூரிலயும் போலீஸ் திட்டமிட்டு அவதூறு பரப்ப வெறும் அப்பாவிகளை கைது செய்திருக்காங்க. அது சம்பந்தமா இந்த்துவா செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தி :
http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=140962 ”
ஒரு பின்னூட்டத்தில் இப்படி சொன்னவர் மாயவரத்தான். கோவையில் சமீபத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் போலீஸார் சிலரைக் கைது செய்ததைக் குறித்துத்தான் மாயவரத்தான் இப்படி கமெண்ட் கொடுத்திருந்தார். இது அவரின் வழக்கமான நக்கல் என்று யாராவது நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். கீழே உள்ள ஜூனியர் விகடன் கட்டுரை மாயவரத்தான் சொன்னது நூற்றுக்கு நூறு சரி என நிரூபிக்கிறது.
*****
கோவை ‘திடுக்’…
போலீஸ் கிளப்பிய குண்டு!
கோவையில் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக, ஐந்து நபர்கள் கோவை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து, ‘அப்பாடா… ஒரு பெரிய அசம்பாவிதத்தில் இருந்து தப்பினோம்’ என்று கோவை மக்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க… ‘இது முழுக்க முழுக்க உளவுத்துறை போலீ ஸாரின் சதி வேலை. பழிவாங்கும் நடவடிக்கையாக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்’ என்று போலீஸார் மீதே குற்றச்சாட்டு அம்புகள் வீசப்படுகின்றன.
போலீஸ் தரப்பில் கூறுவதை முதலில் பார்த்துவிடுவோம். ‘‘கோவையில் குறிச்சி பிரிவு அருகே ஒரு வீட்டில் மர்ம நடவடிக்கைகள் நடப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைக்க, அந்த வீட்டை 21-ம் தேதி இரவு சந்தேகப்பட்டு சோதனை செய்தோம். அப்போது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பெயர்கள், போட்டோக்கள், வீடுகள் ஆகியவை அடங்கிய புகைப்படங்கள் கிடைத்தன. ஒரு டைரி, சி.டி. மற்றும் வேறு ஆவணங்களும் கிடைத்தன. இதையடுத்து, ஹாரூண் பாஷா அவரின் அண்ணன் மாலிக் பாஷா இருவரையும் கைது செய்தோம். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து, கோவை அரசு மருத்துவமனையில் வைப்பதற்காகத் தயார் செய்திருந்த வெடிகுண்டுகளுடன் ரவி என்ற திப்புசுல்தான் மற்றும் அத்திக்கூர் ரஹ்மான் மற்றும் சம்சுதீன் ஆகியோரை கைது செய்தோம்’’ இதுதான் போலீஸ் தரப்பு.
பிடிபட்ட ஐவரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மீது கூட்டுச் சதி மற்றும் வெடிமருந்து தடை சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருகின்றன. இந்த விஷயங்களைப் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கோவை மாநகர கமிஷனர் கரண் சின்கா மற்றும் நுண்ணறிவு பிரிவு ஏ.சி-யான ரத்தினசபாபதி இருவரும், ‘‘அந்த ஐவரும் மனித நீதி பாசறை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். ஆயுதப் பயிற்சி மேற்கொண்டவர்கள்’’ என்று சொன்னார்கள்.
இதையடுத்து, நாம் மேற்கொண்டு விசாரணையில் குதித்தோம். மாலிக் பாஷா மற்றும் ஹாரூண் பாஷா இருவரின் வீட்டுக்குப் போனோம். இவர்களின் அண்ணன் அப்துல்லா பாஷா, ‘‘நாங்கள் அண்ணன் தம்பிகள் மொத்தம் ஆறு பேர். அனைவரும் ஒரே காம்பௌண்டில் தனித்தனி வீடுகளில் இருக்கிறோம். வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நான்கைந்து ஜீப்களில் போலீஸார் எங்களது வீடுகளில் புகுந்தார்கள். என்ன ஏது என்று பதறிபோய் விசாரிக்க, ‘ஒண்ணுமில்லை, சாதாரண செக்-அப்’தான் என்று சொன்னார்கள். பிறகு, ‘போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு போங்கள்’ என்று சொல்லி, என்னையும் தம்பிகள் மாலிக் மற்றும் ஹாரூண் மூவரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டனர். மீண்டும் சில போலீஸார் எங்களது வீட்டுக்குப் போனார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழிந்த பிறகு வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். பெரியார் தொடர்பான புத்தகங்களில் இருந்து, இஸ்லாம் மார்க்கம் தொடர்பான புத்தகங்கள் வரையில் நிறைய சேகரித்து வைத்து இருக்கிறேன். அவற்றில் சிலவற்றை போலீஸார் எடுத்து வந்தார்கள். நாங்கள் கிரைண்டர் மற்றும் மிக்ஸி தொழிலில் இருப்பதால் அது தொடர்பாக கன்டன்சர்கள் மற்றும் ஒயர்கள் வீட்டில் ஏகப்பட்டது இருக்கிறது. அதிலும் சிலவற்றை எடுத்துக் கொண்டார்கள்.
பிறகு, சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வைத்திருந்தார்கள். விசாரணை எதுவும் செய்ய வில்லை. மறுநாள் இரவு என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டு, தம்பிகள் இருவர் மீதும் வெடிகுண்டு வழக்கு போட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலின்போது சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வாசகங்களுடன் நோட்டீஸ் போட்டதாக ஹாரூண் மீது போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான். அதை மனதில் வைத்துக் கொண்டுதான், சமயம் பார்த்து அவன் மீது வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள்.
இன்னொரு தம்பி மாலிக், சற்று மனநிலை சரியில்லாதவன். அன்றைய தினம் போலீஸார் வந்த போது, அவர்களிடம் அவன் சற்று ஏடாகூடமாகப் பேசிவிட்டான். அவன் மீதும் வழக்குப் பதிவு செய்து விட்டார்கள்’’ என்றார் சோகமாக.
‘‘கைது செய்யப்பட்ட மற்ற மூவரைப் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?’’ என்றோம்.
‘‘அத்திக்கூர் ரஹ்மான் என்பவரை மட்டும் எனக்கு தெரியும். ஆறேழு மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் ஹாரூணும், ரஹ்மானும் ஒன்றாகக் கல்வி பயின்று இருக்கிறார்கள் என்ற தகவலை சொன்னார்கள். மற்ற இருவரும் யார் என்றே தெரியாது’’ என்றார்.
சிறுபான்மையினர் நல உதவி அறக்கட்டளையின் பொருளாளர் கோட்டை தங்கப்பா இதுபற்றி பேசும்போது, ‘‘முன்பு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்குகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் முஸ்லிம்கள் மீது தீவிரவாத எண்ணம் வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் புனையப்பட்டிருக்கின்றன.
போலீஸார் கைது செய்திருப்பவர்களில் அத்திக்கூர் ரஹ்மான் என்பவர், போலீஸின் இன்ஃபார்மர். அவரைத் துணையாக வைத்துக்கொண்டு அப்பாவிகளான மீதி நால்வர் மீது வழக்கு புனைந்துள்ளது போலீஸ். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தினால் உண்மை நிலவரங்கள் தெரியவரும்’’ என்றார்.
திப்புசுல்தான் மற்றும் அத்திக்கூர் ரஹ்மான் இருவரும் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றோம். வீட்டின் உரிமையாளர் ராமசாமி நம்மிடம், ‘‘பக்கத்தில் இருக்கும் கல்லூரி மாணவர் பிரபு என்பவர்தான் ரஹ்மானை அழைத்து வந்து வீட்டை வாடகைக்குப் பிடித்து தந்தான். இன்னொரு நபர் திப்புசுல்தான், பின்னர் இவனோடு வந்து தங்கி கொண்டான்’’ என்றார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, ‘‘ரஹ்மானுக்காக வீடு கேட்டு அழைத்து வந்த மாணவர் பிரபுவை நாங்கள் விசாரித்தபோது, அவர் என்னிடம் ‘போலீஸ் சி.ஐ.டி-யான நான் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒருநாள் வ.உ.சி. பூங்கா அருகே போலீஸ் ஜீப்பில் இருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். ‘அவர் இன்ஸ்பெக்டர். பெயர் இளங்கோவன்’ என்று சொன்னார். இன்னொரு நாள் போலீஸ் என்று எழுதியிருந்த ஒரு ஜீப்பில் இருந்தவரிடம் என்னை அழைத்து சென்று பேசினார். கேட்டதற்கு ‘இவர் ஏ.சி.’ என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்த நான், ‘இவர் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்பினேன்’ என்று பிரபு சொன்னான். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அவன் போலீஸோடு தொடர்புடையவனாகதான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனவே எல்லாமே முழுக்க முழுக்க போலீஸின் செட்-அப் வேலை என்றே தோன்றுகிறது’’ என்றார்கள்.
‘‘சும்மா விட மாட்டோம்…’’
‘மனித நீதி பாசறை’யின் மாநில தலைவர் குலாம் முஹம்மதுவை சந்திதோம். அவர் நம்மிடம்,‘‘முஸ்லிம் மத மக்களின் மனித உரிமையைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் எங்களோட அமைப்பு. இந்த அமைப்பு, தமிழ்நாடு முழுக்க இருக்கு. இருபதாயிரம் பேர் எங்க அமைப்புல உறுப்பினரா இருக்காங்க. எல்லோருடைய முழு விவரங்களும் எங்ககிட்ட இருக்கு. கோவையில பிடிபட்ட இளைஞர்களுக்கும் எங்க அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்ல. அப்படியிருக்கும்போது இந்த விவகாரத்துல போலீஸ் எங்க பேரை சேர்க்கக் காரணம், கோவையில அசிஸ்டென்ட் கமிஷனரா இருக்கிற ரத்தினசபாபதிதான்!
கோவை சிறையில் இருக்கும் முஸ்லிம் இளைஞர் ஒருவரைப் பார்க்க அந்த இளைஞரோட அம்மாவும், சகோதரியும் போயிருக்காங்க. அப்படி போனவுங்ககிட்ட சோதனை என்ற பெயரில் போலீஸார் சொல்லவே நாகூசும் அளவுக்கு அசிங்கமா நடந்திருக்காங்க. அதோடு விடாம அவுங்க ரெண்டு பேரு பெயரிலும் போலீஸாரை தப்பான விஷயத்துக்குக் கூப்பிட்டதா கேஸ் போட்டிருக்காங்க.
இந்த விஷயம் எங்க கவனத்துக்கு வந்ததும் நாங்க தெளிவா விசாரிக்க ஆரம்பிச்சோம். அதனாலதான் போலீஸுக்கு எங்க மேல கடுப்பு. பழிவாங்க நேரம் பார்த்துட்டு இருந்த ரத்தினசபாபதி, இதைப் பயன்படுத்திக்கிட்டாரு. நாங்க இந்த விஷயத்தை சும்மா விடப்போறது இல்ல… முதல்வர் வரைக்கும் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்’’ என கண்கள் சிவக்கச் சொன்னார். - கே.ராஜா திருவேங்கடம் படம்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்
நோட்டீஸ் கொடுத்தால் பதிலடி!
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு ஏ.சி-யான ரத்தினசபாபதி யிடம் கேட்டபோது, “ஜெயிலுக்குள் நடைபெறும் சம்பவங்களுக்கும், நுண்ணறிவு பிரிவுக்கும் சிறிதளவும் தொடர்பில்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாக மனித நீதி பாசறை தலைவர் சொல்லி இருக்கிறார். அவர்களிடம் இருந்து ஒரு நோட்டீஸ்கூட எனக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து இருப்பேன்.
கைது செய்யப்பட்டவர்கள் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்கள். அதைத்தான் பிரஸ்மீட்டில் சொன்னேன். அப்போதுகூட, ‘இந்த செயலில் அதன் தலைமையகத்துக்குத் தொடர்பிருக்குமா?’ என்று கேட்டபோது, ‘விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றுதான் சொன்னேன். அதற்காக அதன் தலைவருக்கும் இந்த செயலுக்கும் நேரடி தொடர்புள்ளது என்று அவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல’’ என்றவரிடம்,
‘‘இந்த வழக்கே முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்டது என்கிறார்களே’’ என்று கேட்டோம்.
‘‘போலீஸ் இன்ஃபார்மரை வைத்து வழக்கை ஜோடித்தோம் என்றால், இன்ஃபார்மர் வீட்டில் இருந்தா வெடிகுண்டை கைப்பற்றுவோம்! அவர் வெளியில் வரும்படி சுலபமான செக்ஷன்களில் வழக்கு தொடர மாட்டோமா… சொல்பவர்கள் ஆயிரம் சொல்லத்தான் செய்வார்கள். அதையெல்லாம் பொருட் படுத்த தேவையில்லை’’ என்று முடித்தார்.
நன்றி: ஜூனியர் விகடன்
****
போலீஸார் அப்பாவிகளை கைது செய்திருக்கிறார்கள் என்பதை மிகச்சரியாக மோப்பம் பிடித்து தெரிவித்த மாயவரத்தானுக்கு நன்றி!
