ஏமாந்த நரிகள்!

September 17, 2006

கிருஸ்த்துவ மதத் தலைவர் 16-ம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டார். கிருஸ்த்துவ மதத்தின் உயர்ந்த பதவி வகிக்கும் போப் அவர்கள் இஸ்லாம் குறித்து இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். சில முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் போப் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தனர். இரு தரப்பிலும் உஷ்ணம் அதிகரிக்க, விவகாரம் பெரிதாக வெடித்து, இது உலகின் இரு பெரும் கலாச்சாரங்களுக்கிடையிலான போராக மாறிவிடுமோ என அனைவரும் அஞ்சும் சூழ்நிலை நிலவியது.

இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலின் பேட்டி:

“இஸ்லாம் மதம் குறித்து விமர்சிருத்திருப்பதன் மூலம் புதிய போரை ஆரம்பித்து வைத்துள்ளார் போப். வரும் நாட்களில் அது பற்றி எரியப் போகிறது.

இந்த விஷயம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலானது. இதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வி.எச்.பி.க்கு இதில் தொடர்பு இல்லை.

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நாம் அமைதியாக அதை பார்ப்போம்.”

இதைப் படித்தபோது நான் முன்பு எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்
கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!

போப் அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அசோக் சிங்கால்களின் ஆசையில் மண்ணள்ளிப் போடப்பட்டுள்ளது.