இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்?
October 16, 2006அபூமுஹை அவர்களின் ‘இறைவன் மன்னிக்காத குற்றம்’ என்ற பதிவில் ‘உண்மையான இறைத்தூதரை எப்படி அறிந்து கொண்டு அவரை பின்பற்றுவீர்கள்?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். இறைத்தூதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இரு முஸ்லிமல்லாதவர்களுக்கிடையே நடைபெற்ற கீழ்க்கண்ட உரையாடல் நல்லதொரு விளக்கமளிக்கிறது. உரையாடிய இருவரில் ஒருவர் ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்). மற்றொருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிரியாக பாவித்திருந்த அபூஸுஃப்யான்.
அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம் அது. அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)
அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.
மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?
அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.
மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.
(தனது மொழிபெயர்ப்பாளடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.
அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.
மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?
அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’.
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?
அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.
மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)
மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?
அபூஸுஃப்யான்: ஆம்!
மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?
அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.
மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.
அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:
உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ‘’அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'’ என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.
அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.
அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன்.
அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.
அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.
அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.
அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.
அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய். ‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார்.
பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.
அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ‘’எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின் பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'’ என்று அபூஸுஃப்யான் கூறினார்.
அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார்.
(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

எதிரியின் நாவிலிருந்து பிறந்த சொற்களை வைத்தே நபிகள் நாயகத்தை, இறைத்தூதர் என்று இனங்கண்டு கொண்ட மன்னர் ஹெர்குலிஸின் பொருத்தமான வரலாற்றை இங்குப் பதித்த இபுனு பஷீர் அவர்களுக்குப் பாராட்டுகள்!
Comment by அழகு — October 16, 2006 @ 7:03 pm
நன்றி அழகு அவர்களே!
Comment by இப்னு பஷீர் — October 17, 2006 @ 3:53 am
///அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன். ///
அவர் மனதுக்குள் பேசியது எப்படி வெளியில் தெரிந்தது ? நம்பக் கூடியதாக இல்லையே ?
Comment by காஃபிர் — October 17, 2006 @ 4:09 am
//அவர் மனதுக்குள் பேசியது எப்படி வெளியில் தெரிந்தது ? நம்பக் கூடியதாக இல்லையே ? //
இஸ்லாத்தின் எதிரியாக இருந்த அபூ ஸுஃப்யான் பிற்காலத்தில் முஸ்லிமாக மாறினார். மன்னர் ஹிர்கலுடனான அவரது உரையாடலை அபூஸுஃப்யானே அப்துல்லா பின் அப்பாஸ் என்பவரிடம் தெரிவித்ததைத்தான் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
Comment by இப்னு பஷீர் — October 17, 2006 @ 4:25 am
அன்பின் இப்னு பஷீர் அவர்களே,
உங்களின் இத்தனை தெளிவான விளக்கம் இருந்தும் கூட - வரலாற்று அறிவுமிக்க மாற்றாரும், நபிகளின் சமகால கடும் விரோதிகளாக இருந்த குறைஷிக் காஃபிர்களும் மறுக்க இயலாத/முடியாத தூதுத்துவம் பற்றி எழில் என்பவர் ஒரு புரட்டு வாதத்தை வைத்து குதர்க்கம் செய்கிறார்.
நபியவர்களின் முதுகில் இருந்த ‘நபித்துவ முத்திரை’யை கண்ணால் பார்த்தாலும் இவர்கள் தம் குதர்க்கத்தை விட மாட்டார்கள் என்பது திண்ணம்.
‘தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவனை எழுப்பமுடியாது’ என்பதை எழில் நிரூபிப்பதால், இனி அவருடன் மல்லுக்கட்டாமல், தொடர்ந்து உங்களின் விழிப்புணர்வு ஆக்கங்களை எங்களுக்காகத் தந்து வாருங்கள். நன்றி.
Comment by Raj — October 17, 2006 @ 10:06 pm
தங்கள் கருத்திற்கு நன்றி ராஜ். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகுதான் சகோதரர் எழில் அவர்களின் பதிவைப் பார்த்தேன். விரைவில் அதற்கு பதில் சொல்வேன் இன்ஷா அல்லாஹ்.
Comment by இப்னு பஷீர் — October 18, 2006 @ 5:52 am