இறைத்தூதர்கள் பற்றிய விவாதம்!

October 31, 2006

சகோதரர் எழில் அவர்கள் அபூமுஹை அவர்களின் பதிவில் இறைத்தூதர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?

இந்தக் கேள்விக்கு இரண்டே வரியில் இப்படி பதில் சொல்லியிருக்கலாம்..
“இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பிய தூதர் குறைகளுடையவராக இருக்க மாட்டார். அதனால் ஒரு சில குறைகளை உடைய அந்த நான்கு பேரும் உண்மையான இறைத்தூதராக இருக்க முடியாது.”

அல்லது, ஒரு நண்பர் சொன்னது போல ‘ரொம்ப ஸிம்பிளான’ ஒரு பதில் இருக்கிறது.
“நால்வரையும் விருந்துக்கு அழைப்பேன். ‘விருந்து’க்கு பின் உயிரோடு உள்ளவரை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்வேன்”

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்தது இந்த பதில். ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து, அதில் விஷமிடப்பட்ட உணவை பரிமாறினாள். நபியவர்கள் அதிலிருந்து ஒரு இறைச்சித் துண்டை எடுத்து கடித்து விட்டு பின் அதை விழுங்காமல் துப்பி விட்டார்கள். ‘இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப் பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது’ என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் ஒரு இறைச்சித் துண்டை முழுமையாக சாப்பிட்ட நபித்தோழர் ஒருவர் மரணித்து விட்டார். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரித்தபோது, அவள் ‘நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு உண்மை தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்’ என்று கூறினாள்.

சகோதரர் எழில் அவர்களின் கேள்விக்கு இதுபோல சுருக்கமாக பதிலளிப்பதற்கு பதிலாக, அபூமுஹை, நான், சுவனப்பிரியன், சுல்தான் ஆகியோர் 6-க்கும் மேற்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் போதிய விளக்கமளித்திருக்கிறோம். ஆனால், சகோ.எழில் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் இவற்றில் கிடைக்கவில்லை போலும். இதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எனது முந்திய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்;

“எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஒரு முன் முடிவோடு அணுகினால், அதன் உண்மை நிலவரம் உங்களுக்கு புரிபடாமலேயே போய் விடும். ‘இறைத்தூதர் என்ற கருத்தே தவறு’ என்ற உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், நான் எவ்வளவு அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் காட்டினாலும் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை. என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என நானும் உங்களை வற்புறுத்தவில்லை. ‘இது முஸ்லிம்களின் நம்பிக்கை’ என்ற அளவில் இக்கருத்துக்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும்.”

சகோ.எழில் அவர்கள் இறைத்தூதர்கள் பற்றிய அவரது கேள்வியை கேட்குமுன்பாகவே, இறைத்தூதர்கள் பற்றிய அவரது கருத்தை முன்வைத்திருந்தார். “இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.” என்று சொன்னபிறகே எழில் அவர்கள், இறைத்தூதர்கள் பற்றிய தனது கேள்வியை கேட்டிருந்தார்.

அவரது கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்களை இத்தகைய முன்முடிவோடு அவர் அணுகும்போது, அந்த வரிகளுனூடாக தனது கருத்திற்கு சாதகமான அம்சங்களைத்தான் அவர் தேடிக் கொண்டிருப்பார். அப்படி எதுவும் கிடைக்காத பட்சத்தில் மேலும் எதிர் கேள்விகளைக் கேட்டு விவாதத்தை இழுத்தடிக்கவே அவர் மனம் விரும்பும். இது சராசரி மனித இயல்புதானே?

இறைத்தூதர்கள் பற்றிய இந்த விவாதமும் இவ்வாறாக இழுத்தடிக்கப்பட்டு நீர்த்துப் போய் விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

சகோ. எழில் அவர்களின் இந்தக் கேள்வி, இதுவரை அறியாமல் இருந்த பல விஷயங்களை அறியத் தூண்டியது. அதற்காகவும், இதுவரை நாகரீகமான முறையில் விவாதித்ததற்காவும் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.