வக்கிர சிந்தனையும் வரலாற்றுப் புரட்டுகளும்! - 4. கற்பழிப்புக்கு நான்கு சாட்சி!

March 23, 2007

வேதங்களை விளங்கிக் கொள்ள இயலாமல் குர்ஆனுக்கு வியாக்கியானம் சொல்ல வந்த ‘அதிமேதாவி’யைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். ஷரியா சட்டங்களைப் பற்றி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சித்து தனது மூடத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!

இந்த வக்கிர சிந்தனையாளர் எழுதுகிறார்:

சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:

கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

இந்த நபரின் மூடத்தனத்தை சகோ. அப்துல்லா வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்:

ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

இதே நபர் தனது இன்னொரு கட்டுரையில் மேலே உள்ள கூற்றுக்கு மாற்றமாக எழுதியிருப்பதையும் சகோ. அப்துல்லா சுட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 “எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.”

இந்த வக்கிர சிந்தனையாளரை நோக்கி சகோ. அப்துல்லா தொடுத்த கேள்வி:

இவர் சொன்ன “தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை” என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

கேள்விகளின் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது. பதில்கள்தான் வந்த பாடில்லை!

வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 3. யார் முஃமின்?

March 22, 2007

“அரபி மொழியில் ‘அலிஃப், பே ‘ (அகரம்) கூட தெரியாமல் குர்ஆனின் வசனங்களுக்கு அர்த்தம் இப்படித்தான், அப்படித்தான் என்று வாதிடுவதைப் போல ஒரு நேசகுமார்த்தனமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது! திருக்குர்ஆனின் அர்த்தங்களில் சந்தேகம் கொள்பவர்கள் யாராக இருந்தாலும், தெரிந்தவர்களிடம் இப்படித்தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுதான் முறை. அதைவிட்டுவிட்டு, இப்படித்தான் அப்படித்தான் என்று வாதிடுவதற்குக் காரணம் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது திரு. நேசகுமாருக்கு வேறு ஏதாவது நோக்கமிருக்க வேண்டும்.” - நாகூர் ரூமி - திண்ணை - அக்டோபர் 28, 2004

தனது இந்துமத வேதங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக படித்து ‘இது நமக்கு விளங்காத விஷயம். இதன் பக்கமே போகத் தேவையில்லை’ என்று முடிவுக்கு வந்த வக்கிர சிந்தனையாளர், அரபி மொழியிலுள்ள குர்ஆனுக்கு வியாக்கியானம் செய்வதை பாருங்கள்!

“திருக்குரானில் இந்த இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களே, பர்தா முறைக்கு அடித்தளமாக திருக்குரானில் காணப்படுகின்றன. இவையும், ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் இடப்பட்ட கட்டளையோ அல்லது எல்லா முஸ்லீம்களுக்குமான இறைவனின் கட்டளையோ அல்ல. முஃமின்கள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது கூட எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லீம்களை குறிக்கு முகமாக அல்ல, அப்போது முகமது நபிகளின் கூட இருந்த கூட்டத்தாருக்கு அல்லாஹ், இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களின் போது தெரிவித்த போதனைகளே ஆகும்.” - இஸ்லாத்தில் பர்தா - வரலாறும், நிகழ்வுகளும் - திண்ணை 11 நவம்பர் 2004

இந்த அரைகுறையின் பிதற்றல்களுக்கு சகோ.சலாஹுத்தின் தந்த விளக்கம்:

“இறைவன் நபிகளாரின் துணைவிகளுக்கு மட்டும் என்று கட்டளைகளை பிறப்பிக்க நாடினால் வசனம் 33:32ல் உள்ளவாறு ‘நபியின் மனைவிகளே! ‘ என்று நேரடியாக அழைத்திருப்பான். மாறாக ‘மூஃமின்களே ‘ என்று அழைத்தால் அது ஒட்டுமொத்த முஸ்லிம்களைத்தான் குறிக்கும். ‘மூஃமின் ‘ என்ற சொல்லின் பொருள் நம்பிக்கையாளர் என்பதாகும். அதாவது இஸ்லாத்தின் கொள்கைகளின்மீது மனதாற நம்பிக்கைகொண்ட அனைவரையும் இந்த சொல்
குறிக்கும். நீங்கள் சொல்வதுபோல் இந்த சொல் அப்போது நபிகளாரின் கூட இருந்த கூட்டத்தாருக்கு மட்டுமே பொருந்தும் என்றால், குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் ‘மூஃமின்களே! ‘ என்று நம்பிக்கையாளர்களை அழைத்து இறைவன் சொல்லும் கட்டளைகளை என்னவென்று சொல்வீர்கள்?” -
திண்ணை - நவம்பர் 18,2004 - நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா

இதற்கு வந்த பதில்:

“இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய சகோதரர் சலாஹுதீன், முஃமீன்கள் என்ற வார்த்தைக்கு நான் நபிகளாரைச் சுற்றியிருந்த கூட்டத்தாரைக் குறிக்கும் வார்த்தை அது என்று சொன்னதை மறுத்து, அது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையுமே குறிக்கும் என்று வாதிட்டுள்ளார்.

இது குறித்து, விரிவாக ஒரு தனி கட்டுரை எழுதவுள்ளேன். ஏனென்றால், இந்த மூஃமீன்கள் மற்றும் காஃபிர்களுக்கான அர்த்தப் படுத்துதல் பல கோணங்களில் திருக்குரானின் போதனைகளை சிதைத்து, இஸ்லாமியர்களை தொடர்ந்து 1425 வருடங்களுக்கு முன்பிருந்த போரிடும் நிலையிலேயே (war mode) வைத்துள்ளதால், இப்படியான அர்த்தப் படுத்துதலே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தொடர்ந்து அச்சமுதாயத்தில் தோற்றுவித்துக் கொண்டிருக்கும், தோற்றுவாயாக உள்ளது.

எனவே அதிமுக்கியமான இந்த அர்த்தப் படுத்துதலுக்கு தனியே விவரமாக மேற்கோள்களுடன் விரிவான ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
திண்ணை - December 9, 2004 - இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் - II

கட்டுரைக்காக காத்திருந்த சலாஹுத்தின்..

“முஃமின் என்ற வார்த்தையின் பொருள் குறித்து நேசகுமார் தனி கட்டுரை எழுதப்போவதாக சொல்லியிருப்பதால் அந்தக் கட்டுரை வந்ததும் அதற்குறிய விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.”
திண்ணை - December 23, 2004 - நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது! கட்டுரை வந்ததா என்பது தெரியவில்லை!

வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 2. அரசியல் இஸ்லாமும் சிலை வழிபாடும்!

March 21, 2007

கோயபல்ஸ் என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘இன்றைய கோயபல்ஸ்’ என்று பட்டமளிக்க தகுதியானவர் இந்த வக்கிர சிந்தனையாளர். வரலாறுகளை திரிப்பதே தமது முழுநேர தொழிலாக கொண்டிருப்பார் போலிருக்கிறது.

சிலை வணக்கம் உள்ளிட்ட இறைவனுக்கு இணை வைக்கும் எல்லா காரியங்களையும் தடுப்பதை அடிப்படையாக கொண்ட மார்க்கம் இஸ்லாம். ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதே இறைத்தூதர்களின் தலையாய பணி!

இந்த அடிப்படையான விஷயத்திலேயே தனது விஷமத்தை காட்டுகிறார் இந்த நபர் பாருங்கள்!

இந்த வக்கிர சிந்தனையாளர் தனது ‘திண்ணை’ கட்டுரை ஒன்றில் சொல்கிறார்;

“நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது”

(‘நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள்’ - நேசகுமார் - திண்ணை 16/12/2004)

இதைத் தொடர்ந்து, சகோ. அப்துல்லா அவர்கள் இந்த நபரிடம் தொடுத்த கேள்விகள்:

“இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் “நபிகளாரின் காலத்திலேயெ” என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.

பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!”

சகோ. அப்துல்லா அவர்கள் 3 மார்ச் 2005 அன்று கேட்ட இந்த கேள்விகள், இரண்டு ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்ட நிலையிலும் இன்னும் பதிலளிக்கப் பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை வேறு எங்காவது இதற்கு பதிலளிக்கப் பட்டிருந்தால் அதன் சுட்டியை தரும்படியும், இன்னும் பதிலளிக்கப் படாமல் இருந்தால், மேலும் தாமதிக்காமல் உடனடியாக பதிலளிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 1 ஜைனப் (ரலி) திருமணம்!

“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.

இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட முடியாத இந்த அயோக்கிய சிகாமணிகள் பெரும்பாலும் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இரண்டு வகையானவை. 1. நபி (ஸல்) அவர்களின் மீது ஆபாச நடையில் அவதூறுகளை சுமத்தி தங்கள் உள்மன வக்கிரங்களை வெளிப்படுத்திக் கொள்வது. 2. முஸ்லிம்கள் சம்பந்தப் படும் வன்முறைச் சம்பவங்களை பூதாகரப் படுத்தி அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கம் மீதே வன்முறைச் சாயம் பூச முற்படுவது.

இவர்களின் வரலாற்றுப் புரட்டுகள் பல முறை அம்பலப் படுத்தப் பட்டிருக்கும். இவர்களின் அவதூற்றுப் பிரச்சாரங்களுக்கு பல சகோதரர்கள் பல முறை தக்க பதில் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உளறல்களை மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அந்தப் பதிவுகளை இங்கு தொடராக பதிய இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

முதலில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அவற்றிற்கான விளக்கங்களும்.

1. அவதூறு கிளப்பியவர்களிடம் ஆதாரம் வேண்டி..! - சகோ. சலாஹுத்தீனின் திண்ணை கடிதம்

2. மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். - சகோ. அபூமுஹையின் விளக்கப் பதிவு!

3. இந்த வக்கிர சிந்தனையாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்களிலிருந்துதான் தங்கள் ‘ஆதாரங்களை’ காப்பியடிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம்.

4. தபகாத் இப்னு சஅது என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இவர்கள் மேற்கோள் காட்டும் நிகழ்வு ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதற்கான ஆதாரங்கள்

அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசும் இவர்கள் நேர்மையுடையவர்களாக இருந்தால் மேற்கண்ட பதிவுகளில் தெளிவாக விவரிக்கப் பட்டிருக்கும் ஆதாரங்கள் தவறானவை என்பதை முடிந்தால் நிரூபித்து விட்டு மேற்கொண்டு பேசலாம்!

கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்!

March 18, 2007

கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு சேவியர் எழுதிய ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்’. இந்நூலைப் பற்றி நூலாசிரியர் சேவியர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஜோ என்ற வலைப்பதிவர் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி‘ என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

மேலே தொடருமுன் இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்!

அக்டோபர் 2004. வலைப்பதிவுகள் பிரபலமாகியிராத காலம். தமிழ் எழுத்தார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்த மடலாற்குழுக்களைச் சார்ந்திருந்தனர். மரத்தடி, ராயர் காப்பி கிளப் போன்ற மடலாற்குழுக்கள் பிரபலமாக இருந்தன. பா.ராகவன், மாலன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் அந்த விவாதங்களில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது கிழக்கு பதிப்பகம் துவங்கப் பட்டு ஓராண்டு கூட நிறைவடைந்திருக்கவில்லை. அப்போது அவர்கள் வெளியிட்டிருந்த புத்தகங்களுள் ஒன்று நாகூர் ரூமி எழுதிய “இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்”. இந்தப் புத்தகத்தை அவர்கள் நேசகுமார் என்ற புனைப்பெயருடைய, மடலாற்குழுக்களில் கூட அப்போது பிரபலமாகியிராத, இன்று வரை தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத ஒரு நபருக்கு இலவசமாக அனுப்பினார்களாம். காரணம், இந்த நபர் மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தாராம். அவரது தவறான புரிதல்களை தெளிவிக்கவே இந்தப் புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைத்தார்களாம்.

(”இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹ¨ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சேஷாத்ரி பத்ரி, நாகூர் ரூமி பற்றிய எனது ‘தவறான புரிதல்களை ‘ தெளிவிக்க எனக்கு இப்புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்.” - நேசகுமார், Thinnai - October 22nd, 2004)

பிளாஷ்பேக்கை இங்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு இயேசு பற்றிய புத்தகத்திற்கு வருவோம்.

இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை தெளிவிக்க நேசகுமாருக்கு இலவசமாக புத்தகம் அனுப்பிய கிழக்கு பதிப்பகம், இயேசு பற்றிய அரவிந்தன் நீலகண்டனின் தவறான புரிதல்களை தெளிவிக்க ஏன் இந்தப் புத்தகத்தை அவருக்கு இலவசமாக அனுப்பவில்லை?

‘மகாகவி பாரதியின் பகவத் கீதை உரை’ என்ற நூலை பதிப்பித்திருக்கும் கிழக்கு பதிப்பகம், கீதையை ‘தவறாக’ புரிந்து கொண்டதால் ‘கீதையின் மறுபக்கம்’ எழுதிய கி.வீரமணிக்கு ஏன் இலவசப் பிரதி அனுப்பவில்லை?

‘ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள்’ ‘பக்தி இயக்கம்’ போன்ற அவர்களின் புத்தகங்களை பார்ப்பனீயத்தைச் சாடி எழுதிவரும் விடாது கருப்பு போன்ற பதிவர்களுக்கோ, இந்துமதத்தை ‘தவறாக புரிந்து வைத்திருக்கும்’ முஸ்லிம் பதிவர்களுக்கோ ஏன் அனுப்பவில்லை?

ஏன் இந்தப் பாரபட்சம்?

சரி..பிளாஷ்பேக்கை மீண்டும் தொடருவோம்:

கிழக்கு பதிப்பகம் நேசகுமாருக்கு இலவச புத்தகம் அனுப்பியதால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன.

1. குறுகிய காலத்திலேயே அந்தப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ( பத்ரி சேஷாத்ரி, திண்ணை, நவம்பர் 11 2004).

2. இரண்டாவது பின்விளைவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புத்தக விமரிசனம் என்ற பெயரில் நேசகுமார் எழுதிய கட்டுரைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே நேசகுமார் தொடர்ந்து எழுத நேரிட்டது.

(எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். - நேசகுமார்)

அவர் பிடித்த ‘புலி வாலை’ விடமுடியாத நேசகுமார், இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார வலைத்தளங்களிலிருந்து சில ஆதாரமற்ற தகவல்களை எடுத்து வைத்து தனது சப்பைக் கட்டுகளை தொடர்ந்தார். இந்த விவாதங்கள் மடலாற்குழுக்களிலிருந்து, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய சஞ்சிகைகள், பின் வலைப்பதிவுகள் என தொடர்ந்து கொண்டே சென்றது.

இச்சூழலில், நேசகுமாரைத் பின்தொடர்ந்து அவரைப்போலவே ‘முகம் மறைத்த’ வேறு சில ‘விமர்சகர்களும்’ இணையத்தில் தலை காட்டத் தொடங்கினர். தகுதி, தராதரம் எதுவுமில்லாத அவர்கள் ‘இஸ்லாம் பற்றிய விவாதம்’ என்ற பெயரில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினர். ‘நக்குற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன’ என்று ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்றாற்போல் இந்த ‘திடீர் விமர்சகர்கள்’ முஸ்லிம்கள் உயிரென மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியரான முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் கீழ்த்தரமான வார்த்தைகளில் எழுதினர். நேசகுமார் என்பவரும் இந்த முகமூடிகள் சிலரின் எழுத்துக்களை தனது பதிவுகளில் மேற்கோள் காட்டி எழுதினார். டென்மார்க் நாளிதழில் வெளியான கேலிச்சித்திரங்களை தமது பதிவில் வெளியிட்டும் தமது வெறியை தீர்த்துக் கொண்டார். அதுவரை கண்ணியமான முறையில் அவருடன் விவாதங்கள் புரிந்து வந்த முஸ்லிம் பதிவர்கள் அவரது உண்மை உருவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றனர். அன்று தொடங்கி இன்றளவும் தமிழ் இணையத்தில் முழு வீச்சில் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களில் மருந்துக்கு கூட நாகரீகம், கண்ணியம், நேர்மை, போன்ற சொற்களுக்கு இடமில்லை. இந்த ‘கலாச்சாரத்தை’ இணையத்தில் தொடங்கி வைத்த பெருமை நேசகுமார் அவர்களையே சாரும்.

இவ்வளவும் நடந்ததன் ஆரம்பப் புள்ளி அந்த ‘இலவசப் புத்தகம்’தான் என்பதை முஸ்லிம்களால் என்றும் மறக்க வியலாது.

ஒரு இலவசப் புத்தகம் அனுப்பியதன் மூலம் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ விற்றுத் தீர்ந்ததுபோல, அதே ‘வெற்றி பார்முலா’வைப் பின்பற்றி கிழக்கு பதிப்பகம் தாம் வெளியிடும் மற்ற மதங்கள் தொடர்பான புத்தகங்களையும் விரைவிலேயே விற்று முடித்து நிறைய லாபம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! பக்க விளைவுகள் பற்றி யாருக்கு என்ன கவலை?