கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்!
March 18, 2007கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு சேவியர் எழுதிய ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்’. இந்நூலைப் பற்றி நூலாசிரியர் சேவியர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஜோ என்ற வலைப்பதிவர் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி‘ என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
மேலே தொடருமுன் இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்!
அக்டோபர் 2004. வலைப்பதிவுகள் பிரபலமாகியிராத காலம். தமிழ் எழுத்தார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்த மடலாற்குழுக்களைச் சார்ந்திருந்தனர். மரத்தடி, ராயர் காப்பி கிளப் போன்ற மடலாற்குழுக்கள் பிரபலமாக இருந்தன. பா.ராகவன், மாலன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் அந்த விவாதங்களில் பங்கேற்றிருந்தனர்.
அப்போது கிழக்கு பதிப்பகம் துவங்கப் பட்டு ஓராண்டு கூட நிறைவடைந்திருக்கவில்லை. அப்போது அவர்கள் வெளியிட்டிருந்த புத்தகங்களுள் ஒன்று நாகூர் ரூமி எழுதிய “இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்”. இந்தப் புத்தகத்தை அவர்கள் நேசகுமார் என்ற புனைப்பெயருடைய, மடலாற்குழுக்களில் கூட அப்போது பிரபலமாகியிராத, இன்று வரை தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத ஒரு நபருக்கு இலவசமாக அனுப்பினார்களாம். காரணம், இந்த நபர் மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தாராம். அவரது தவறான புரிதல்களை தெளிவிக்கவே இந்தப் புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைத்தார்களாம்.
(”இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹ¨ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சேஷாத்ரி பத்ரி, நாகூர் ரூமி பற்றிய எனது ‘தவறான புரிதல்களை ‘ தெளிவிக்க எனக்கு இப்புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்.” - நேசகுமார், Thinnai - October 22nd, 2004)
பிளாஷ்பேக்கை இங்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு இயேசு பற்றிய புத்தகத்திற்கு வருவோம்.
இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை தெளிவிக்க நேசகுமாருக்கு இலவசமாக புத்தகம் அனுப்பிய கிழக்கு பதிப்பகம், இயேசு பற்றிய அரவிந்தன் நீலகண்டனின் தவறான புரிதல்களை தெளிவிக்க ஏன் இந்தப் புத்தகத்தை அவருக்கு இலவசமாக அனுப்பவில்லை?
‘மகாகவி பாரதியின் பகவத் கீதை உரை’ என்ற நூலை பதிப்பித்திருக்கும் கிழக்கு பதிப்பகம், கீதையை ‘தவறாக’ புரிந்து கொண்டதால் ‘கீதையின் மறுபக்கம்’ எழுதிய கி.வீரமணிக்கு ஏன் இலவசப் பிரதி அனுப்பவில்லை?
‘ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள்’ ‘பக்தி இயக்கம்’ போன்ற அவர்களின் புத்தகங்களை பார்ப்பனீயத்தைச் சாடி எழுதிவரும் விடாது கருப்பு போன்ற பதிவர்களுக்கோ, இந்துமதத்தை ‘தவறாக புரிந்து வைத்திருக்கும்’ முஸ்லிம் பதிவர்களுக்கோ ஏன் அனுப்பவில்லை?
ஏன் இந்தப் பாரபட்சம்?
சரி..பிளாஷ்பேக்கை மீண்டும் தொடருவோம்:
கிழக்கு பதிப்பகம் நேசகுமாருக்கு இலவச புத்தகம் அனுப்பியதால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன.
1. குறுகிய காலத்திலேயே அந்தப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ( பத்ரி சேஷாத்ரி, திண்ணை, நவம்பர் 11 2004).
2. இரண்டாவது பின்விளைவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புத்தக விமரிசனம் என்ற பெயரில் நேசகுமார் எழுதிய கட்டுரைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே நேசகுமார் தொடர்ந்து எழுத நேரிட்டது.
(எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். - நேசகுமார்)
அவர் பிடித்த ‘புலி வாலை’ விடமுடியாத நேசகுமார், இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார வலைத்தளங்களிலிருந்து சில ஆதாரமற்ற தகவல்களை எடுத்து வைத்து தனது சப்பைக் கட்டுகளை தொடர்ந்தார். இந்த விவாதங்கள் மடலாற்குழுக்களிலிருந்து, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய சஞ்சிகைகள், பின் வலைப்பதிவுகள் என தொடர்ந்து கொண்டே சென்றது.
இச்சூழலில், நேசகுமாரைத் பின்தொடர்ந்து அவரைப்போலவே ‘முகம் மறைத்த’ வேறு சில ‘விமர்சகர்களும்’ இணையத்தில் தலை காட்டத் தொடங்கினர். தகுதி, தராதரம் எதுவுமில்லாத அவர்கள் ‘இஸ்லாம் பற்றிய விவாதம்’ என்ற பெயரில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினர். ‘நக்குற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன’ என்று ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்றாற்போல் இந்த ‘திடீர் விமர்சகர்கள்’ முஸ்லிம்கள் உயிரென மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியரான முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் கீழ்த்தரமான வார்த்தைகளில் எழுதினர். நேசகுமார் என்பவரும் இந்த முகமூடிகள் சிலரின் எழுத்துக்களை தனது பதிவுகளில் மேற்கோள் காட்டி எழுதினார். டென்மார்க் நாளிதழில் வெளியான கேலிச்சித்திரங்களை தமது பதிவில் வெளியிட்டும் தமது வெறியை தீர்த்துக் கொண்டார். அதுவரை கண்ணியமான முறையில் அவருடன் விவாதங்கள் புரிந்து வந்த முஸ்லிம் பதிவர்கள் அவரது உண்மை உருவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றனர். அன்று தொடங்கி இன்றளவும் தமிழ் இணையத்தில் முழு வீச்சில் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களில் மருந்துக்கு கூட நாகரீகம், கண்ணியம், நேர்மை, போன்ற சொற்களுக்கு இடமில்லை. இந்த ‘கலாச்சாரத்தை’ இணையத்தில் தொடங்கி வைத்த பெருமை நேசகுமார் அவர்களையே சாரும்.
இவ்வளவும் நடந்ததன் ஆரம்பப் புள்ளி அந்த ‘இலவசப் புத்தகம்’தான் என்பதை முஸ்லிம்களால் என்றும் மறக்க வியலாது.
ஒரு இலவசப் புத்தகம் அனுப்பியதன் மூலம் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ விற்றுத் தீர்ந்ததுபோல, அதே ‘வெற்றி பார்முலா’வைப் பின்பற்றி கிழக்கு பதிப்பகம் தாம் வெளியிடும் மற்ற மதங்கள் தொடர்பான புத்தகங்களையும் விரைவிலேயே விற்று முடித்து நிறைய லாபம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! பக்க விளைவுகள் பற்றி யாருக்கு என்ன கவலை?
