வெளியே வெளிச்சம்!

July 23, 2008

இருட்டு!
காரிருள்!
அருகில் சில சலனங்கள்!
மனித உடல்களின் வாடை!
குழப்பமான குரல்கள்!
தட்டுத் தடுமாறி,
முட்டல் மோதலுடன்
நகர்கிறேன்.

முன்னேற்றமா பிற்போக்கா?
யாருக்குத் தெரியும்?

இருள் பழகி விட்டது!
எனக்கெனெ ஒரு பாதையும்
தோன்றி விட்டது!

என்னைப் போலவே பலர்!
எனக்குத் தோன்றியதை
அவர்களுக்கும் சொல்கிறேன்.
குழப்பமான குரல்களுடன்
என் குரலும் இணைந்து கொண்டது!

திடுமெனக் கேட்டது
உறுதியானதொரு குரல்!
“கண்ணைத் திற!”

என் இமைகள் அழுந்திக் கிடப்பதை
அப்போதுதான் உணர்ந்தேன்.
திறப்பது மிக கடினமாயிருந்தது.
இமைகளுக்கு மேல் ஒரு கரம்
அழுத்திக் கொண்டிருந்தது!

மீண்டும் அக்குரல்
“கண்ணைத் திற!” என்றது.

உள்ளுணர்வு உந்தித் தள்ளியது.
என் கண்களை மூடிக் கொண்டிருக்கும்
கரத்திற்குச் சொந்தக்காரன் யார்?

அந்தோ!

அக்கரங்கள்
என் தோள்களுடன்
இணைந்திருந்தன!
வெட்கமடைந்து
அக்கரங்களை
விலக்கினேன்.

இமைகளுக்கு வெளியே
வெளிச்சம் தெரிந்தது.

இமைகளையும் திறக்க,
வெள்ளமென பாய்ந்தது
வெளிச்சம்!

ஆகா!
உலகம் எவ்வளவு அழகாய் இருக்கிறது!

ஆனால்,
இந்த வெளிச்சம்
அச்சம் கொடுக்கிறது!
அது என் கண்களை பறித்திடுமோ?

பயத்துடன் இமைகளை மூடி
கரங்களால் பொத்திக் கொண்டேன்.

இந்த இருளே எனக்கு பழகி விட்டது!
எனக்கெனெ ஒரு பாதையும்
இங்கே இருக்கிறது.

*****