தருமியிடம் சில கேள்விகள்!

March 2, 2009

அதிரை பாரூக் என்பவரிடமிருந்து வந்த தொடர் மின்னஞ்சல்களால் எரிச்சலடைந்த பதிவர் தருமி, அதைப் பற்றி ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பின்னரும் பாரூக் அவற்றைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது தவறுதான். இடம், பொருள், ஏவலை பாருக் அனுசரிக்க வேண்டும்.

ஆனால் பாருக் செய்ததை விட பெரும் தவறு ஒன்றை தருமி தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார். அவர் அறியாமலேயே அவ்வாறு செய்கிறாரா அல்லது தெரிந்தே செய்கிறாரா என்பதை நான் அறியேன். அவரிடம் சில கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

தருமி அவரது பதிவில் எழுதியது:

//ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கடவுள்களைக் காக்க பிறந்த பிறவிகளாகத் தங்களை நினைத்துக் கொண்டு, தங்கள் மதக் கருத்துக்களே உன்னதமானவை என்ற நினைப்பில் இருக்கும்போது எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது? ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு. ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.//

தருமி, தாம் பிறந்த மதமாகிய கிருஸ்துவத்திலிருந்து வெளியேற நேர்ந்ததைப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறார். அப்பதிவுகளில் அவர் கிருஸ்துவம், இந்து மதம் ஆகியவற்றிலுள்ள சில குறைபாடுகளை எடுத்துச் சொல்லி விட்டு, இஸ்லாம் பற்றிப் பல கேள்விகளை முன்வைத்தார். அவற்றைப் படிப்பவர்களுக்கு, “கிருஸ்துவத்திலிருந்து இவர் வெளியேறியதற்கு இஸ்லாம் எவ்வகையில் காரணமாகும்?” என்ற நியாயமான கேள்வி எழும். ஒருவேளை கிருஸ்துவத்திலிருக்கும் குறைபாடுகள் பிடிக்காமல் அதிலிருந்து வெளியேறி வேறு ஒரு மதத்தில் இணையும் எண்ணத்தில் இவர் இருந்திருக்கலாம். அந்த நோக்கத்தில் அவர் இந்து மதம், இஸ்லாம் ஆகியனவற்றைப் பற்றி அறிய முற்பட்டிருக்கலாம். அந்த முயற்சியில் அவருக்குப் பல கேள்விகள் தோன்றியிருக்கலாம். இதுவரை எல்லாம் சரிதான். ஆனால், அவரது கேள்விகள் அவரைப் பொருத்த மட்டில் வெறும் கேள்விகளாகவே இருக்கையில், ‘எல்லா மதங்களும் குறைபாடு உடையவை’ என்ற உறுதியான(?) முடிவிற்கு அவர் எப்படி வந்தார்?

//மூன்று ‘புத்தகங்களை’ வாசித்துப் பார்க்கச் சொல்லியுள்ளீர்கள். நல்லது; நன்றி. நீங்கள் சொல்லியுள்ளவைகளை ஏதோ கொஞ்சமேனும் வாசித்திருக்கிறேன்.அந்த வாசிப்பிலேயே போதுமென்ற அளவிற்கு எதிர்மறைக் கருத்துக்கள் உருவாகிவிட்டன// - தருமி

அதிரை பாரூக் என்பவர், தாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டு தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது மார்க்கத்தைப் பற்றி மற்றவர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மின்னஞ்சல்கள் அனுப்புகிறார். அது தவறு என்றால், அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி உறுதியான(?) முடிவெடுத்து அதை எல்லோரும் பார்க்கும் வகையில் தனது வலைப்பதிவில் பதிவர் தருமி பதிந்து வைத்திருப்பது பெரும் தவறல்லவா? உதாரணமாக, ரஷ்ய மொழியின் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கும் ஒருவர் ‘அம்மொழியின் இலக்கியங்கள் குறைபாடுடையவை’ என உறுதியாக நம்புவதாக அறிவித்தால் அவரது மனநிலை சந்தேகத்திற்குரியது அல்லது அவருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்ற முடிவிற்கு வருவதுதான் நியாயம்.

நாம் அறிந்திராத விஷயங்களில் சந்தேகங்கள், கேள்விகள் எழுவது மனித இயல்பு. அது நமக்கு ஆர்வமுடைய துறையாக இருந்தால் அதற்கான பதில்களைத் தேடிப்பெற முனைவோம். இல்லையேல் அவற்றை மறந்து விட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவோம். இஸ்லாம் பற்றி இத்தனை கேள்விகளை முன்வைத்த தருமி, அதற்கான பதில்கள் பல சகோதரர்களால் விளக்கமாகச் சொல்லப்பட்ட போது, அவற்றைப் படித்திருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான். அவர் தன் கேள்விகளுக்கு பதில் தேடுபவராக இருந்து, சொல்லப்பட்ட பதில்களில் திருப்தி அடையாமலிருந்தால் அதைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை விடுத்து, பதில் விளக்கங்கள் அளிக்கப் பட்ட போதெல்லாம் அதைப் பற்றி விவாதிக்காமல் மவுனமாக இருந்து விட்டு, சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே கேள்விகளைத் தூசு தட்டிக் கடை பரப்பினால் அவரது நோக்கம் என்னவாக இருக்கும்? கேள்விகள் வெறும் கேள்விகளாகவே சுற்றிக் கொண்டிருக்கட்டும் என்ற எண்ணமா? வெறும் கேள்விகளை மட்டுமே வைத்து அவர் எதை நிரூபித்தார்?

தருமி கேட்ட கேள்விகளுள் பலவற்றிற்கு பதிவர்கள் அபூமுஹை, நல்லடியார், சுல்தான் மற்றும் சிலர் தெளிவாகவே ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கின்றனர்.

அபூமுஹையின் பதிவுகள்:

மதமாற்றம் ஏன்? - 1

மதமாற்றம் ஏன்? - 2

மதமாற்றம் ஏன்? - 3

மதமாற்றம் ஏன்? - 4

மதமாற்றம் ஏன்? - 5

நல்லடியாரின் பதிவுகள்:

ஒரு பயணியின் குழப்பம்

தட்டுங்கள் திறக்கப்படும்

யாகாவா ராயினும் நாகாக்க - 1

எண்ணங்கள்

தருமி வாங்கிய Nokia போன்

ஒற்றைச்சாளர வீடும், வீடில்லாத சாளரங்களும்.

மதங்களும் பெண்ணியமும்.

சுல்தானின் பதிவுகள்:

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி

இவ்வளவு நடந்த பிறகும் தருமி, “வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு” என்று சொல்வது நகைப்பிற்குரியதல்லவா? கண்ணை மூடிக் கொண்டிருந்தால் எல்லாமே இருட்டாகத்தானே அய்யா தெரியும்?

தான் இருந்த மதத்தை விட்டு வெளியேறுவதோ புதியதொரு மதத்தைத் தழுவுவதோ, ஒருவரது வாழ்வின் திருப்புமுனை என்று சொல்லத்தக்க அதி முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வு. ஆனால் வெறும் கேள்விகளை மட்டுமே வைத்து தருமி தனது மதத்தை விட்டு வெளியேறியதாகச் சொல்வது பொருத்தமாகத் தெரியவில்லை. கிருஸ்துவத்தைப் பற்றிக்கூட அவர் முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை போலும். கிருஸ்துவம் தொடர்பாக பகுத்தறிவாளர் என்ற பதிவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்குக்கூட முறையாக பதிலளிக்காமல் தருமி நழுவுவதிலிருந்து இது தெளிவாகிறது.

எனினும் தருமி அவர் சார்ந்திருந்த மதத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது சொந்த முடிவு. அவர் எந்த உண்மையான காரணத்திற்காக வெளியேறினார் என்பதும் நமக்குத் தேவையில்லாத ஒன்று. அதேபோல், தான் அரைகுறையாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு கொள்கையைப் பற்றி நக்கலாகப் பதிவெழுதுவது நிச்சயமாக அவருக்குத் தேவையில்லாத ஒன்று! இதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படி ஒரு தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தருமி, அதிரை பாருக்கின் தொடர் மின்னஞ்சல் படையெடுப்பைக் குற்றம் சொல்லும் தகுதியையும் இழந்து விடுகிறார்.

“இது ஓர் எரிதம்” என்ற சிறிய அடையாளச் சொடுக்களைப் புரிந்து கொள்ளும் மின்னஞ்சல்களின் எளிய வசதியைப் பயன் படுத்திக் கொள்ளாமல் பாரூக்கின் படையெடுப்புக்காக ஒரு பதிவெழுதி அவருக்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார் பதிவர் தருமி.

கல்லூரி மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு பதில் விளக்கம் அளித்து அவர்களின் அறிவுக்கண்ணை திறந்துவிடும் ஒரு பேராசிரியராகப் பணி புரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர், தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கள் வரும்போது தன் மனக்கதவுகளை பூட்டி வைத்துக் கொள்வது விந்தையிலும் விந்தைதான். இந்த நிலையில் அவர் இருக்கும்வரை எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவரிடம் எப்படி ஏற்படப் போகிறது?