நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 2)

May 6, 2008

- கடந்த கால நிகழ்வுகளின் - அனுபவங்களின் தொகுப்பு தான் வரலாறு..!
- இலக்கியங்கள் ‘காலத்தின் கண்ணாடி’ என்று போற்றப்படுகின்றன. வரலாறுகளும் அப்படித்தான்!
- வரலாறு ஓர் அதிசயக் கண்ணாடி. நம்முடைய முகம் நேற்று எப்படி இருந்தது என்பதை இன்றைக்குக் காட்டும் அற்புதக் கருவி அது!

…’முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்’ நூலின் பதிப்புரையில் எச். அப்துர் ரகீப்

சார்பின்மையுடன் பதியப்பட வேண்டிய வரலாற்றின் பக்கங்களை சிலர் கயமைத்தனமாக திரித்து வைத்திருக்கின்றனர் என்பதும் கவலைக்குரியதொரு வரலாற்று உண்மைதான்!

ஜனநாயக விரோத சக்திகள் மக்களிடையே தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும், தமக்கு மாற்றமான கொள்கை உடையவர்களின் புகழையும் செல்வாக்கையும் குலைக்கும் விதத்திலும் பொய்ப் பிரச்சாரங்களை (Propaganda) அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பது அந்த வரலாற்றின் பக்கங்களிலிருந்தே நமக்குப் புலப்படும்.

காலனி ஆதிக்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.க்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தகையப் பங்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனாலும், சங் பரிவாரங்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது ஒரு தேசிய மதிப்பைப் பெற்றுத்தர மிகவும் தேவைப் படுவதால் அதை ஒரு சொத்தாக பயன்படுத்திக் கொள்ள மிகவும் கவனமாக உள்ளன.

“எனவே, காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்ததாக சுதந்திரப் போராட்ட வரலாறு திரித்து எழுதப்படுகிறது. இது அவர்களது தலைவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கவும், மறுபுறத்தில் அவர்களது உண்மையான தோற்றத்தை மறைத்துக் கொள்ளவும் தேவைப்படுகிறது.” - பேராசிரியர் பணிக்கர்.

இது போல, இருட்டான தங்கள் கடந்த கால வரலாற்றை தங்கள் நிகழ்கால, எதிர்கால திட்டங்களுக்கு சாதகமாக இருக்கும்படி பாசிஸ சக்திகள் திருத்தி எழுதுவதுதான் வரலாற்றுத் திரிப்பு. காலகாலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.
கோயபல்ஸ்
ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர் ஜோசப் கோயபல்ஸ். ஹிட்லரின் பிரச்சாரத்துறை அமைச்சராக இருந்த இவர், ‘ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி ‘உண்மை’யாக்குபவர்’ என பிரசித்திப் பெற்றவர். இவரது உத்தரவின்படி ஜெர்மனியில் ஊடகங்கள் அனைத்துமே கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப் பட்டன. பிரச்சாரத்துறை அனுமதித்த செய்திகளை மட்டுமே நாளிதழ்கள் வெளியிட முடியும். அரசிற்கு எதிரான கொள்கையுடையவர்கள் மற்றும் யூதர்கள் எழுதிய புத்தகங்கள் நூலகங்களிலிருந்தும் கடைகளிலிருந்தும் நீக்கப்பட்டுத் தெருவில் போட்டு எரிக்கப்பட்டன.

கோயபல்ஸின் பிரச்சார வலையிலிருந்து பள்ளிச் சிறுவர்களும் தப்பவில்லை. பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டிய பாடங்களை நாஜிகள்தான் முடிவு செய்தனர். நாஜி கொள்கைகளை பள்ளிகளில் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப் பட்டது. பாடங்களில் யூதர்களும் கம்யூனிஸவாதிகளும் மிக மோசமானவர்களாக சித்தரிக்கப் பட்டிருந்தனர். மனித குலத்தினில் இரு வகை இருப்பதாகவும், அதில் ஜெர்மனியர்களின் ஆரிய இனம் உயர்ந்த குலம் என்றும் ஆரியரல்லாத மற்றவர்கள் தாழ்ந்த குலம் என்றும் மாணவர்கள் போதிக்கப் பட்டனர். தாழ்ந்த குலத்தினரெல்லாம் உயர்ந்த குலத்தினரின் அடிமைகளாக இருப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் என்றும் போதிக்கப் பட்டது.

வரலாற்றைத் திரிப்பு மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் புரிவோருக்கு சுலபமான இலக்கு பள்ளிச் சிறுவர்கள் தான்; பள்ளிச்சிறார்கள் மிகப் பயனளிக்கும் இலக்கும் கூட. குழந்தைகளுக்கு வரலாற்றுடன் அறிமுகம் ஏற்படுவது பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் மூலமாகத்தான். பள்ளிகளில் போதிக்கப்படும் பாடங்களை குழந்தைகள் அப்படியே நம்பி விடுவர். அது பொய்யாக இருக்குமோ என்ற சிந்தனை கூட தோன்றாத பருவம் அது. சிறார்களின் கள்ளங்கபடமற்ற மனதில் நஞ்சைத் தடவுவதைப்போல பொய்யான கருத்துக்களை விதைக்கின்றனர் வரலாற்றுத் திரிப்புவாதிகள்.

வரலாற்றுத் திரிப்பு என்பது பெரும்பாலும் இரண்டு வகையாகச் செய்யப் படுகிறது;

1. உண்மையான நிகழ்வு ஒன்றை மறைப்பது, அல்லது அதனை எதிர்மறையாக மாற்றிப் பதிவது. உதாரணமாக, இந்து ராணி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்த ஔரங்கசீப் மீது ‘கோவிலை இடித்தார்’ என்று பழி சுமத்தப்படுவதைக் குறிப்பிடலாம்.

2. நடக்காத ஒன்றை நடந்ததாகப் பதிவது. உதாரணமாக, திப்புசுல்தான் முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கட்டுக்கதையைச் சொல்லலாம்.

இந்திய வரலாற்றில் இது போன்ற கட்டுக்கதைகளைச் ‘செருகிய’ பெருமை ஆங்கிலேயர்களையே சாரும். கோயபல்ஸின் காலத்திற்கு நூறாண்டுகள் முன்பாகவே ஆங்கிலேயர்கள் இத்’திருப்பணி’யைத் தொடங்கி விட்டனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

பகுதி - 1

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

முஹம்மது (ஸல்) அவர்களின் திருமணம் பற்றிய அவதூறு!

May 2, 2008

“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.

இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட முடியாத இந்த அயோக்கிய சிகாமணிகள் பெரும்பாலும் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இரண்டு வகையானவை.

1. நபி (ஸல்) அவர்களின் மீது ஆபாச நடையில் அவதூறுகளை சுமத்தி தங்கள் உள்மன வக்கிரங்களை வெளிப்படுத்திக் கொள்வது.

2. முஸ்லிம்கள் சம்பந்தப் படும் வன்முறைச் சம்பவங்களை பூதாகரப் படுத்தி அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கம் மீதே வன்முறைச் சாயம் பூச முற்படுவது.

இவர்களின் வரலாற்றுப் புரட்டுகள் பல முறை அம்பலப் படுத்தப் பட்டிருக்கும். இவர்களின் அவதூற்றுப் பிரச்சாரங்களுக்கு பல சகோதரர்கள் பல முறை தக்க பதில் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உளறல்களை மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அந்தப் பதிவுகளை இங்கு தொடராக பதிய இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

முதலில் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும் அவற்றிற்கான விளக்கங்களும்.

1. அவதூறு கிளப்பியவர்களிடம் ஆதாரம் வேண்டி..! - சகோ. சலாஹுத்தீனின் திண்ணை கடிதம்

2. மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். - சகோ. அபூமுஹையின் விளக்கப் பதிவு!

3. இந்த வக்கிர சிந்தனையாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத் தளங்களிலிருந்துதான் தங்கள் ‘ஆதாரங்களை’ காப்பியடிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம்.

4. தபகாத் இப்னு சஅது என்ற நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இவர்கள் மேற்கோள் காட்டும் நிகழ்வு ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதற்கான ஆதாரங்கள்

அன்னை ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசும் இவர்கள் நேர்மையுடையவர்களாக இருந்தால் மேற்கண்ட பதிவுகளில் தெளிவாக விவரிக்கப் பட்டிருக்கும் ஆதாரங்கள் தவறானவை என்பதை முடிந்தால் நிரூபித்து விட்டு மேற்கொண்டு பேசலாம்!

பின் குறிப்பு: சென்ற ஆண்டு மார்ச் மாதம் எழுதிய பதிவு இது! அதே அவதூறு ஒரு வருடம் கழித்து மீண்டும் வேறு பெயர்களில் தலைக் காட்டி இருப்பதால், இது மீள் பதிவு செய்யப் படுகிறது!

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1)

April 15, 2008

“(ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை.” - இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன. - பேராசிரியர் பி.என். பாண்டே பாராளுமன்ற மேல்சபையில் 29 ஜூலை 1977-ல் ஆற்றிய உரையிலிருந்து…

பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர்.

1927-28-ல் பேரா. பாண்டே, அலகாபாத்தில் திப்பு சுல்தான் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ஒருநாள், ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் அக்”கல்லூரியின் வரலாற்றுச் சங்கத்தை துவக்கி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு அவரைச் சந்திக்க வந்திருந்தனர். கல்லுரியிலிருந்து நேராக வந்திருந்த அவர்களின் கைகளில் அவர்களின் வரலாற்றுப் பாட புத்தகங்கள் சில இருந்தன.

அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டிய பாண்டேவின் கண்கள் ஒரு பக்கத்தில் நிலைகுத்தி நின்றன. ‘திப்பு முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்‘ என்ற அந்த வரிகள், திப்புவைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த திரு. பாண்டேவுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.

அந்தப் புத்தகத்தை எழுதியவர் கல்கத்தா பல்கலைக் கழக சமஸ்கிருதப் பிரிவின் தலைவரான டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர். திரு. பாண்டே உடனே டாக்டர் சாஸ்திரியைத் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தைத் தரும்படி கோரினார். பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகு, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட்டின் பிரதி அலகாபாத்திலோ கல்கத்தா இம்பீரியல் நூலகத்திலோ இல்லாததால் திரு. பாண்டே மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு டாக்டர் சாஸ்திரியின் கூற்றை உறுதிப் படுத்தும்படி கேட்டார். துணை வேந்தரின் சார்பில், அச்சமயம் மைசூர் கெசட்டின் புதிய பதிப்பைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரிகந்தையா திரு. பாண்டேவுக்கு பதில் எழுதினார். ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை’, என்று தெளிவு படுத்தியது அவரது பதில்!

அக்காலத்தில், டாக்டர் சாஸ்திரியின் இந்தப் புத்தகம் வங்காளம், அஸ்ஸாம், பீஹார், ஒரிஸ்ஸா, உ.பி, ம.பி, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்று பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டு கல்லூரி பாடங்களில் இணைக்கப்பட்டிருந்தது. திரு. பாண்டே கல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் தந்து, அந்தத் தவறான தகவலைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடக் கோரினார். அவற்றை ஆய்ந்து உண்மையை அறிந்த துணை வேந்தர் அந்தப் புத்தகத்தையே பாடப் புத்தங்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டதாக பதில் எழுதினார்.

திரு. பாண்டே அவர்கள் அன்று இந்த மகத்தான செயலைச் செய்திருக்கவில்லை எனில், ஒருவேளை இன்று “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்” என்ற இஸ்லாமிய எதிரிகளின் ஆயிரம் டன் பொய்யினை இந்தியாவில் நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக சாகாக்களில் இது எடுத்தாளப்பட்டிருக்கும்.

சென்ற மாதம் (மார்ச் 2008) சென்னையில் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவோடு முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய ஓவியக்கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஔரங்கசீப்பின் உத்தரவின்படி இந்துக் கோவில்களை இடித்துப் பள்ளிவாசல்கள் கட்டப்படுவது போன்ற ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தனர். மதத் துவேஷத்தைப் பரப்பும் இக்கண்காட்சிக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் உடனே அது மூடப்பட்டது.

இந்துக்களின் விரோதி என்றே இந்திய வரலாற்றுப் பாட நூல்களில் சித்தரிக்கப் பட்டிருப்பவர் ஔரங்கசீப். இவர் மீது சுமத்தப்படும் பிரபலமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவர் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்தார் என்பதாகும். இக்குற்றச்சாட்டையும் பேராசிரியர் பாண்டே ஆதாரங்களுடன் மறுக்கிறார்.

ஔரங்கசீப்பின் படை வங்காளத்தை நோக்கிச் செல்லும் வழியில் வாரணாசி வந்தடைந்தது. அவரது படையில் இடம் பெற்றிருந்த இந்து மன்னர்கள், “வாரணாசியில் ஒருநாள் தங்கிச் சென்றால் தங்கள் ராணிகள் கங்கையில் முழுகி விஸ்வநாதரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என ஔரங்கசீப்பிடம் விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

ராணிகள் கங்கை நதியில் முழுகி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் அவர்களுடன் சென்ற கட்ச் மகாராணி மட்டும் திரும்பவில்லை. தகவல் அறிந்து கோபமடைந்த ஔரங்கசீப் ராணியைத் தேடிக் கண்டுபிடிக்க தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தார். இறுதியில் அவர்கள் விஸ்வநாதர் கோவில் சுவற்றில் இருந்த ஒரு சிலை நகரும் வகையில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டனர். அச்சிலையை நகர்த்தியபோது அதன் கீழே பாதாள அறை ஒன்றிற்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்தன. கட்ச் ராணி அந்த அறையில்தான் மானபங்கம் செய்யப்பட்டு அழுது கொண்டிருந்தார். அந்த அறை விஸ்வநாதர் சிலை இருந்த இடத்திற்கு நேர் கீழே இருந்தது.

அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாகவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.

டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்! - 2

February 15, 2008

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?

சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

*************

‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28

திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.

***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

நன்றி: திண்ணை

ஆதாரச் சுட்டிகள்:

Dr. K. Hussain - http://www.sabrang.com/cc/comold/june99/forum.htm
Prof Sheik Ali - http://www.tipusultan.org/index.htm
About Dewan Purniah - http://www.kamat.com/jyotsna/blog/purnaiah.htm
Dr. K.L. Kamat - http://www.kamat.com/kalranga/itihas/tippu.htm
விடுதலை - http://viduthalai.com/20080106/news10.html
கோபா வலைப்பதிவு - http://blackboards.blogspot.com/2007/01/blog-post_16.html
சமண/பௌத்த மதங்களை அழித்த சைவம் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=16188&mode=threaded

குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா? தொடரும் பொய்ப் பிரச்சாரங்கள்!

February 8, 2008

இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள். குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அந்த இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. இதை பல முஸ்லிம்களை விட நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள். இந்த நம்பிக்கையை எப்படியாவது தகர்த்து விட்டால் இஸ்லாமின் அடிப்படையையே தகர்த்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருக்கிறது போலும். அதனாலேயே ‘குர்ஆன் இறைவாக்கு அல்ல’ குர்ஆன் முஹம்மது நபியால் எழுதப் பட்டது’ ‘குர்ஆன் மாற்றம் செய்யப்பட்டது’ என்பன போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் அவ்வப்போது முடுக்கி விடப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு வலைப்பதிவு கண்ணில் பட்டது. அதில் இப்படி எழுதியிருந்தார்கள்:

“ஏமனில் 1972இல் ஒரு குரான் குகைக்குள் ஏராளமான பழங்கால குரான்களை ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த குரான்கள் கிமு 700இலிருந்து இந்த குகைக்குள் கிடக்கின்றன (அந்த கால வழக்கப்படி பழைய குரான்களை எரிப்பதோ அழிப்பதோ இல்லை. அவற்றை ஒரு குகைகுள் பூட்டி வைத்துவிடுவார்கள்). இந்த குரான்களை மைக்ரோபிலிமில் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஜெர்மனி சென்று இந்த குரான்களில் இருக்கும் ஏராளமான வித்தியாசங்களள ஆராய்ந்து வருகின்றனர் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள். இவ்ர்களிடம் 35000 மைக்ரோபிலிம் காப்பிகள் இருக்கின்றன. ஏமன் அரசாங்கம் இவர்கள் எடுத்தது அறிந்து இந்த குகையை மூடிவிட்டது. பல்வேறு வகை குரான்கள் இருந்திருக்கின்றன என்று தெரியவந்தால், இஸ்லாமுக்கு ஆபத்து என்று இந்த குகை மூடப்பட்டதாக தெரிகிறது.”

இந்தப் பிரச்சாரகர்களின் பயனற்ற முயற்சிகளைக் கண்டு இவர்கள் மேல் பரிதாபம்தான் மேலிடுகிறது. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? இயேசு கிருஸ்துவின் காலத்திற்குப்பின், அதாவது கி.பி.யில் தோன்றியவரே முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்களின் 40 வயதிலிருந்து சுமார் 23 ஆண்டு காலக்கட்டத்தில் சிறு சிறு பகுதிகளாக இறக்கப் பட்டது குர்ஆன். இது சரித்திர உண்மை. ஆனால் மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம். கி.பி-யைச் சேர்ந்த குர்ஆன் எப்படி கி.மு-வுக்கு சென்றது? குகையை எப்படி பூட்டுவார்கள்? 1972-ல் இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் 35 ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் இன்றைய குர்ஆனுக்குமிடையில் என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அந்த வலைப்பதிவில் விடையில்லை.

ஏதோ ஒரு வலைப்பதிவில் யாரோ ஒருவர் எழுதிய அபத்தமான ஒரு கட்டுக்கதையை நான் ஏன் திண்ணையில் எழுத வேண்டும் என்றால், அதற்கு காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கட்டுக்கதையை ஆதாரமாகக் கொண்டு, சென்ற வார திண்ணையில் நேசக்குமார் இப்படி எழுதுகிறார்.

“குரான் முஹம்மதின் மறைவுக்கு மிகவும் பிற்காலத்தில் பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பல முக்கியமான மாற்றங்கள் குரானில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் சரியோ தவறோ ஒரு குரானை மட்டுமே அரசு அதிகாரபூர்வமான குரானாக அறிவித்து ஏனைய குரான்களை எரித்துவிட்டதாலும், அதற்குப் பின்பும் குரான் தொடர்ந்து அடித்து திருத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதை அரபு நாட்டு மசூதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் சுவடிகளை ஆய்ந்து பார்க்கும்போது கண்டுபிடித்திருப்பதையும் இன்று செய்திகளில் பார்க்க முடிகிறது.”

முந்திய கதையில் ஏமன் நாட்டு குகையாக இருந்தது பிந்திய கதையில் அரபு நாட்டு மசூதியாகியிருக்கிறது. ‘ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள்’ ‘இன்றைய ஆய்வாளர்களாக’ மாற்றம் பெற்றிருக்கிறார்கள். மற்றபடி கதையென்னவோ அதேதான். இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மாற்றங்கள் என்னென்ன? எந்த நாட்டு அரசு ஒரு குரானை மட்டும் அதிகாரபூர்வமானதாக அறிவித்தது? அதற்குப் பிறகும் குரானின் எந்தெந்த வசனங்களெல்லாம் அடித்து திருத்தப் பட்டன? அவற்றை அடித்துத் திருத்தியவர்கள் யார்? கேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில்தான் வந்தபாடில்லை!

குர்ஆன் வசனங்கள் சிறு சிறு பகுதிகளாக இறங்கிக் கொண்டிருந்த பொழுதிலேயே, இறைத்தூதர் அவர்களின் காலத்திலேயே, ஓலைச் சுவடிகளிலும் ஏடுகளிலுமாக பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. அண்ணலாரின் மறைவுக்கு மறு ஆண்டு, உமர் அவர்களின் ஆலோசனையின்படி, அப்போதைய கலிஃபா அபூபக்கர் அவர்களின் காலத்தில் இறை வசனங்கள் மிகுந்த கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டு குர்ஆனின் முதல் முழு எழுத்துப் பிரதி உருவாக்கப் பட்டது. இவ்வாறு ஒன்று சேர்த்து எழுதப்பட்ட முதல் குர்ஆன் பிரதி இன்றும் இருக்கிறது. குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என வாதிடுபவர்கள் இந்த முதல் குர்ஆன் பிரதியோடு ஒப்பிட்டு மாறுபடுவதை விளக்கமாக எடுத்து வைத்து எழுதலாம்.

ஒலி வடிவில் இருந்த குர்ஆன் எழுத்து வடிவில் ஆக்கப் பட்டதை வைத்து ‘குர்ஆன் மாறுதலடைந்தது’ என்று கூட சிலர் வாதிடுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப் பட்ட பதில் திண்ணையில் இந்தச் சுட்டியில் இருக்கிறது.

திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!

குர்ஆன் தொகுக்கப் பட்டதையும் மாற்றங்கள் எதுவுமின்றி பாதுகாக்கப் பட்டிருப்பதையும் பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்களுக்கு இந்தச் சுட்டியில் உள்ள நூலை பரிந்துரைக்கிறேன்.

வான்மறை குர்ஆன் ஓர் அறிமுகம்

நன்றி: திண்ணை

இஸ்லாம் குறித்து அமெரிக்காவுக்கு ஏனிந்த அச்சம்?

February 6, 2008

ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி…

கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம் என்று சொல்கிறீர்களா?

பதில்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

February 2, 2008

1 பிப்ரவரி 08 ‘திண்ணை’ இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.

***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.

சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, ‘பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்’ என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி ‘ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது’ என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'’ என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.

சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற ‘அவசியம்’ ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!

திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் ‘சம்பவத்தை’ தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த ‘ஆதாரம்’ பற்றி விசாரித்தபோது, ‘கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை’ என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?

மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!

********************
வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம்.

அன்றைய பாரதியும் இன்றைய சுஜாதாவும் அச்சு ஊடகங்களில் செய்ததை, திரிபுவாதமே நோக்கமாக கொண்ட சிலர் இணையப் பக்கங்களில் செய்து வருகின்றனர். கூலிக்கு மாரடிப்பவர்களைப் போல அற்ப பிரதிபலன்களுக்காக எதை வேண்டுமானாலும் எழுத தயாராக உள்ள அனாமதேயங்களும் இவர்களுள் அடக்கம். எதையாவது எழுதி வைப்பதும் அவற்றிற்கான விளக்கம் கோரப்படும்போதும் ஆதாரங்கள் கேட்கப்படும்போதும் ஓடி ஒளிந்து கொள்வதும் இவர்களின் அடையாளம். விளக்கமளிக்கப்படாத இவர்களின் வார்த்தைகள், தொடர்பற்ற சங்கிலி வளையங்களைப் போல இணைய வெளியில் சுற்றி வருகின்றன. அச்சு ஊடகங்களைப் போலன்றி, இணையத்தில் இவர்கள் பொய்களை உலவ விடும்போதெல்லாம் அதற்கான எதிர்ப்புகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதில் விளக்கங்கள்தான் வந்தபாடில்லை!

குஜராத் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களின் ஆவிகள் நரேந்திர மோடியை இன்னும் விரட்டுவதாக கரண் தாப்பர் ‘Devil’s Advocate’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோடியை பேட்டி கண்டபோது குறிப்பிட்டார். ‘ஆவிகள்’ என அவர் குறிப்பிட்டது அந்தப் படுகொலைகள் தொடர்பாக மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையே! அந்த ‘ஆவி’களைப் போலவே இந்த இணைய திரிபுவாதிகளின் வார்த்தைகளும் இன்னும் இவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் வரை அவை விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி: திண்ணை

இவ்வளவுதானா மலர்மன்னனின் வரலாற்று அறிவு?

January 11, 2008

வரலாற்று திரிபுவாதம் புரிவது சிலருக்கு கைவந்த கலை. சிலருக்கு அதுவே தொழிலாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. அத்தகையோரில் ஒருவர் திண்ணை எழுத்தாளர் மலர்மன்னன் என்பவர். ‘இஸ்லாம்’ ‘முஸ்லிம்’ என்பன இவருக்கு ஆகாத சொற்களாம். ‘முகமதியம்’ முகமதியர்’ என்றுதான் இவர் குறிப்பிடுவாராம். இஸ்லாமின் வரலாற்றை சிறிதளவே அறிந்தவர்கள் கூட இத்தவறைச் செய்ய மாட்டார்கள். இவர் பத்திரிக்கையாளராக இருந்தவராம். இந்துத்துவ சிந்தனை உடையவர்கள் எந்த அளவிற்கு வரலாற்றை திரிப்பார்கள் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாராணம்.

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களை படைத்த அதே இறைவன்தான் முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ். அன்று தோன்றியதுதான் இஸ்லாம். முதல் மனிதருக்கு அன்றைய சூழலுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்கிய இறைவன், தொடர்ந்து தனது தூதர்கள் முலம் வெவ்வேறு காலக்கட்டங்களில் மனிதர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அனுப்பியே வந்திருக்கிறான். நூஹு (அலை), மூசா (அலை), யாக்கூப் (அலை), யூசுப் (அலை), யூனுஸ் (அலை), இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), ஈசா (அலை) என எண்ணற்ற இறைத்தூதர்களை அனுப்பியவன் அந்த இறைவனே. இந்த வரிசையில் இறுதியாக வந்த இறைத்தூதரே முஹம்மது (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர் இப்றாஹிம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்கள்தான் ஈசா (அலை) அவர்களும் முஹம்மது (ஸல்) அவர்களும். இப்றாஹிம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து புணர் நிர்மாணம் செய்த ‘கஃபா’ எனும் இறை ஆலயம் இருக்கும் திசை நோக்கித்தான் முஸ்லிம்கள் தினம் ஐவேளை இறைவனை வணங்குகிறார்கள். ஹஜ்ஜுக்குச் செல்வோர் அந்த ‘கஃபா’வைத்தான் ‘தவாஃப்’ எனும் வலம் வருகின்றனர். இப்றாஹிம் (அலை) அவர்களின் மனைவி அன்னை ஹாஜிரா தனது பச்சிளம் குழந்தை இஸ்மாயில் அவர்களின் தாகம் தணிக்க வேண்டி தண்ணீர் தேடி பரிதவித்து ஓடிய சபா, மர்வா எனும் குன்றுகளுக்கு மத்தியில், அந்நிகழ்வை நினைவு கூரும் வகையில் ஹாஜிகள் ஓடுகிறார்கள். தனது மனதை கெடுக்க முயன்ற சாத்தானை இப்றாஹிம் (அலை) அவர்கள் கல்லெறிந்து விரட்டியதைப் போலவே ஹாஜிகளும் சாத்தானுக்கு கல்லெறிகிறார்கள். இந்த இப்றாஹிம் (அலை) அவர்கள் ‘யூதராகவோ கிருஸ்துவராகவோ இருக்கவில்லை. அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார்’ என குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

இவ்வளவு வரலாற்றையும் புறந்தள்ளிவிட்டு, இஸ்லாம் என்ற மாபெரும் இயக்கத்தை ‘முகமதியம்’ என அழைக்க முற்படுவது, சமுத்திரத்தை சிறு சீசாவுக்குள் அடைப்பது போன்ற நகைப்பிற்குறிய செயல். அதையும் ஒரு முதிர்ந்த பத்திரிக்கையாளராக தன்னை சொல்லிக் கொள்பவர் செய்வது அவரது வரலாற்று அறிவின்மையையே காட்டுகிறது.

இதுபற்றி சகோதரர் வஹ்ஹாபி திண்ணையில் ஒரு அருமையாக கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்

வஹ்ஹாபி

சென்ற வாரத் திண்ணையில் ‘முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்’ என்ற கட்டுரை [சுட்டி-01] படிக்க நேர்ந்தது.

‘தீவிரவாதம்’ மற்றும் ‘பயங்கரவாதம்’ என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு ‘இஸ்லாமிய’ என்பது நிலைமொழியாக நிறுத்தப் படுவதன் அயோக்கியத்தனத்தைக் குறித்துக் கடந்த 04.10.2007 குங்குமம் இதழில் திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமி சுருக்கமாகத் தொட்டு[சுட்டி-02]க் காட்டி விட்டதால், இங்குத் தலையாய பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்ற திரிபுவாதம் மட்டுமே.

சரி, காந்திஜியும் ஹரிஜனும் இங்கெதெற்கு? என்ற கேள்வி வரலாம்.

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்ற பெயரை முதலில் வழங்கியவராக காந்திஜி அறியப் படுகிறார். ஹரிஜன் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் காந்திஜியே கூறுகிறார்:

‘ஹரிஜன்’ என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாகப் பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிகப் பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த நாதியற்ற, நலிவுற்ற, இழிவாகக் கருதப்படுகின்ற ஜனங்களைத்தான் (ஹரிஜன், 11.2.1933).

ஆனால், காந்திஜியின் விளக்கங்களுக்கு அன்று முதல் இன்றுவரை எழுந்த எதிர்ப்புக் குரல்கள் ஓயவேயில்லை. அதற்குக் காரணம் இல்லாமலில்லை.

1939இல் நார்சி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞர், தனது நாவலில் கோவிலுக்குப் பெட்டுக் கட்டி விடப் பட்டப் பெண்களையும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் ‘ஹரிஜன்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, தகப்பன் பெயர் தெரியாத தாசிமக்கள் அனைவரும் ‘ஹரிஜன்கள்’ என்று தெளிவாகச் சொல்கிறார். எனவே, ‘ஹரிஜன்’ என்று குறிப்பது கடவுளின் பிள்ளை என்ற பொருளிலன்று; மாறக, தாசிமகன் என்ற பொருளிலாம் என்று அறச் சீற்றம் கொள்கிறார் புனிதப்பாண்டியன். [ ‘தலித் மக்களா? தாசி மக்களா?’ தலித் அரசியல் தொகுப்பு;சுட்டி-03].

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று காந்திஜி பெயரிட்டழைத்ததை டாக்டர் அம்பேத்கர் வெறுத்தார். “தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்த வர்ணத்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா?” என்று அப்போதே எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார்.

குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவேதான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார் [சுட்டி-04].

“காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன்” என்று சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் அமர்வில் உ.பி. முதல்வர் மாயாவதி பேசியது, ‘காந்தி மீதி மாயாவதி பாய்ச்சல்’ என்ற தலைப்புச் செய்தியாகக் கடந்த 28.10.2007இல் வெளியானது [சுட்டி-05].

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் தி.மு.கழகத்திலிருந்து விலகி 1975இல் ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய, மறைந்த சத்தியவாணிமுத்து அம்மையாரும் காந்திஜியை ‘ஹரிஜன்’ பெயர் சூட்டல் காரணத்துக்காகக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் என்று பெயரிட்டு, அதே பெயரில் இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோரே பேசி இருக்கின்றனர்; பாடி இருக்கின்றனர் [சுட்டி-06]; எழுதியுமிருக்கின்றனர்.

“சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும் - அது

தாழ்ந்தவரைக் கை தூக்குமோ”

என்று மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்) என்பவர் பாடல் எழுதினார். அவரெழுதிய நூலுக்குப் பெயரே ‘காந்தி கண்டன கீதம்’ என்பதாகும். (உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, பக்கம்.11) [சுட்டி-07].

“தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் ‘ஆதி தமிழர்’ என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க முடியும்” என்று திருத்தம்(?) கொண்டு வந்திருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார் [சுட்டி-08]. அதாவது, இந்தியா முழுதும் வாழும் ஹரிஜனங்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு ‘ஆதித் தமிழர்’ என்பதுதான் பெயராம்.

சங்கராச