இஸ்லாம் குறித்து அமெரிக்காவுக்கு ஏனிந்த அச்சம்?

February 6, 2008

ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி…

கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம் என்று சொல்கிறீர்களா?

பதில்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

November 12, 2007

இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், மலைஜாதியினர், பழங்குடியினரும் இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது மிகச்சிறுபான்மையாக 2.5 சதவீத அளவில் உயர்ஜாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் பிராமணர்களும் வாழ்கின்றனர்.

என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாள்தோறும் அராஜகங்களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன. எவருக்கும் எவ்விதத் தொந்தரவும் கொடுக்காமல், தொழுநோயாளிகளைக் கூடத் தொட்டுத் தூக்கிச் சேவை புரிந்த மருத்துவர் முதல் கர்ப்பத்தில் இருந்தச் சிசு வரை எவ்விதத் தயவுதாட்சண்யமும் இன்றி வெட்டித் துண்டாக்கப் பட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கப்படுகின்றனர். பள்ளியில் சேவை புரியும் கன்னியாஸ்திரிகள் முதல் உலகமே அறியாமல், தான் உண்டு; தன் குடும்பம் உண்டு என்று வாழும் குடும்பப் பெண்கள் வரை நடுத்தெருவில் - பலர் முன்னிலையில் கற்பு சூறையாடப்படுகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. பொருளாதாரம் திட்டமிடப்பட்டுக் களவாடப்படுகின்றன.

பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மதச்சார்பற்ற இந்தியாவின் காவல்துறை, இராணுவம், நீதித்துறை மற்றும் அரசாங்கங்களோ இவற்றையெல்லாம் கண்டுக் கொண்டே கைகட்டி, வாய்பொத்தி எதையும் காணாதவர்களாகவும் கேட்காதவர்களாகவும் இருப்பதோடு மட்டுமின்றி இயன்றவரை வன்முறைக்குத் துணைப் போகவும் செய்கின்றன.

இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட முஸ்லிம், தாழ்த்தப்பட்டச் சமுதாய மக்களோ போதிய உணர்வின்றி, தம் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜங்கள் நடக்கும் பொழுது மட்டும் “அய்யோ, அம்மா, கொல்கிறார்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?” எனக் கதறி அழுவதும் ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களுக்குத் தங்களிடமிருந்தே இருப்பதில் சிறிதைப் பிச்சையாகப் போட்டு விட்டு அதனை அப்படியே மறந்து விடுவதுமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து சாதனைகள் படைத்துக் கொண்டு உலக அரங்கில் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும், சுதந்திரம் அடைந்துச் சுமார் 60 ஆண்டுகளைக் கடந்து 21ஆம் நூற்றாண்டில் பீடு நடை போடும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவ, தாழ்த்தப்பட்ட மக்களின் எதார்த்த நிலை இது தான்.

போலியாக உலக அரங்கின் முன் தலை நிமிர்ந்து நிற்பதாகப் போலிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்தியாவை உண்மையிலேயே உலக அரங்கின் முன் தலை நிமிர வைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட அவலநிலைகள் இந்தியாவிலிருந்துக் களையப்பட வேண்டும்.

அதற்கு என்ன வழி? இதனை ஆராயும் முன் மேற்கண்ட இந்தியக் குடிமக்களின் அவலநிலைகளுக்குரியக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியம்.

பல்வேறு இன, மத, மொழி, கலாச்சார மக்கள் நிறைந்த ஒரு நாடு, உண்மையிலேயே அது ஜனநாயக நாடாக ஆக வேண்டும் எனில், அங்கு வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதார நிலைகள் ஒரே சமச்சீரில் மேன்மையடைய வேண்டும். சமூகத்தில் எந்த இனமும் தாழ்நிலையில் இருக்கக் கூடாது. இயன்றவரை எல்லா இன மக்களின் கல்வி , பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூக நிலைகள் குறைந்தபட்சம் ஒரே நிலைக்கு எட்ட வேண்டும்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், இன்று இந்திய மக்கள் தொகையில் சுமார் வெறும் 2.5 சதவீதத்தினரே இருக்கும் உயர் குடியினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பிராமணச் சமூகம், அரசின் அனைத்து அதிகார உயர்மட்டப் பதவிகளையும் தங்கள் கையில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பிரபல ஊடகங்களிலிருந்து, மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, பாதுகாப்புத்துறை வரை அனைத்து இடங்களிலுள்ள அதிகார உயர்மட்டப் பதவிகளிலும் அவர்களே நிறைந்துக் காணப்படுகின்றனர்.இந்தியாவில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் - கல்வியில் பிந்தங்கியுள்ளனர்; இவர்களுக்கு ஒரு சாதாரண கல் உடைக்கும் தொழிற்சாலையிலிருந்து, அரசு சார் உயர் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் உள்ள உயர் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; சாதாரண கிராமப் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிப் பதவிகளில் இருந்து மாவட்ட, மாநில அரசு அதிகாரிப் பதவிகள் வரை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்கள் வேலை செய்யும் படியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா இடங்களும் உயர்சாதியினரின் கைகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் அதிகாரங்கள் உடைய உயர்பதவிகளை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செல்ல விடாமல் தடுப்பதில் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர் . இதற்காக உண்மையைப் பொய்யுடன் கலந்து அந்தப் பொய்யையும் உண்மையாகச் சமூகத்தில் நம்ப வைக்கும் உத்தியை இவர்கள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஓர் உதாரணத்திற்கு:

கடந்த அக்டோபர் 6-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் எனும் ஆங்கிலச் சஞ்சிகையில், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலையை உயர்த்த முனையும் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தனியார் தொழிற்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை, “இட ஒதுக்கீட்டு முறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என்பது மட்டுமல்லாமல் தொழிற்துறையை அது வெகுவாகப் பாதிக்கும்” என வாதிடுகிறது.

மேலும், ‘மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த சாதிப்பிரிவினைகள் தான் உலகிலேயே மிக அசிங்கமான ஒரு சமூக அமைப்பாக இருக்க முடியும். மனுவின் சட்டப்படி தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பிராமணருக்கு அவர் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொன்னால், கொதிக்க வைக்கப்பட்ட எண்ணை அவரது வாயிலும் காதிலும் ஊற்றப்பட வேண்டும். இதன் காரணத்தினாலோ என்னவோ, சிறந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதியை உயர்சாதியினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் அவை கிடைப்பதே இல்லை.

இந்த நிலைமையைச் சீர் செய்யவே, இந்திய அரசு, 1950-லிருந்தே கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தியது. ஆயினும், சுமார் 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இக்கொள்கை போதிய பலனை நல்கியதா என்றால் இல்லை” என இக்கட்டுரைத் தொடர்கிறது.

இருப்பினும் பல அரசியல் காரணங்களுக்காக அரசு இக்கொள்கையை தனியார் துறையிலும் திணிக்க முயல்கிறது” எனக் குற்றம் சாட்டும் இக்கட்டுரை, “பிரதமர் மன்மோகன் சிங் தலித் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிட்டத்தட்ட மிரட்டியதாகச்” சொல்கிறது. “ஏற்கெனவே பொதுத்துறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு கொள்கையை தனியார் துறையிலும் நடைமுறைப் படுத்த முயல்வது பைத்தியக்காரத்தனம்” எனவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படச் செய்வது தனியார் நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இம்மக்களின் அவலநிலை தொடருவதற்குக் காரணமான உண்மையான குற்றவாளி, அரசாங்கமும் அழுகிப்போன அதன் கல்விக் கொள்கையும்தான்” என்ற அழுத்தமான ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.

கட்டுரையின் ஆரம்பப்போக்கைக் கவனிப்பவர்களை, “இந்தியாவின் கேடுகெட்ட சமூக நிலைக்குக் காரணம் புறந்தள்ளப்பட வேண்டிய மனுதர்மக் கொள்கையின் அடிப்படையிலான உயர்சாதியினரின் செயல்பாடுகளும், அவர்களே உயர் வேலைவாய்ப்புகளில் நிறைந்திருப்பதுமே” என்ற ஆணித்தரமாக எடுத்து வைக்கப்படும் அசைக்க முடியாத உண்மை, அக்கட்டுரையின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்து விடுகின்றது.

தொடர்ந்து, “பொதுத்துறையில் தோல்வியடைந்த ஒரு கொள்கையை அரசு தேவையில்லாமல் தனியார் துறையிலும் திணிக்கப்பார்க்கின்றது” என்றக் குற்றச்சாட்டை வைத்து மக்களின் மனதில் “ஆம், சரி தானே” என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொதுத்துறையில் தோல்வி அடைவதற்கானக் காரணம் என்ன என்பதைக் குறித்துப் பேசாமலேயே தொடர்ந்து, “தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றுக் கூறி மொத்த உண்மைகளையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றது.

கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்த “உயர் சாதியினரின் மனுதர்மக் கொடுமை” என்ற உண்மை, கட்டுரையின் மையக்கருவாகக் கூறியப் பொய்யை உண்மைப்படுத்த கொடுக்கப்பட்ட ஒரு விலை மட்டுமே என்பதை அநேகமாக எவரும் அறிய வாய்ப்பின்றி அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் உண்மையான நிலை என்ன?.

இந்தியத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவரைக் காட்டிலும் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படுகிறது” என அமெரிக்கப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வு ஒன்று உண்மையைப் போட்டு உடைக்கின்றது.

அதே தி எகனாமிஸ்ட் சஞ்சிகையின் அக்டோபர் 20 இதழில், அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள், இக்கட்டுரையில் வைக்கப்பட்ட அந்தப் பொய்களை மறுத்து அவற்றுக்கு எதிராக பதிலளித்துள்ளனர்.

நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இப்பேராசிரியர்கள் கடந்த இரண்டாண்டு காலமாக இந்த ஆய்வை நிகழ்த்தி வந்துள்ளனர். இந்த ஆய்வு, நன்கு படித்தத் தகுதியுள்ள கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மோடி நடத்திய இன ஒழிப்பு அராஜகத்தை எவ்விதம் தெஹல்காவினர் உலகிற்கு வெளிப்படுத்தினரோ, அதே பாணியில் இவர்கள் நடத்திய ஆய்வு முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு ‘விண்ணப்பித்த’ தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் ‘விண்ணப்பதாரர்களின்’ நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.

இந்திய இஸ்லாமியச் சமுதாயத்திற்கு கவலையளிக்கக் கூடிய வகையில், அசைக்கவியலா ஆதாரங்களுடன் இந்த ஆய்வறிக்கை சொல்லும் கருத்து, தனியார் துறைகளின் உயர்பதவிகளில் புகுந்துக் கொண்டு உயர்சாதியினர் நிகழ்த்தும் தகிடுதத்தங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

மேற்கூறப்பட்ட உதாரணம், இந்தியாவில் உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொள்ளும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள பிராமணச் சமூகத்தினர் உயர் அதிகாரப் பதவிகள் அனைத்தையும் தொடர்ந்துத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளில் மிகச் சாதாரணமான ஒரு யுத்தி மட்டுமே.

தகுந்த ஆதாரங்களுடன் ஹிந்துத்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்த தெஹல்காவைப் போன்று, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தனியாரில் உயர்சாதியினரின் ஆக்ரமிப்பையும் தாழ்த்தப்பட்ட, முஸ்லிம்களுக்கான பாரபட்சத்தையும் தோலுரித்த அமெரிக்கப் பேராசிரியர்களின் செயல்கள் ஊக்கமளிக்கின்றன. ஆனால், இவை இந்தியச் சமூகத்தை மேல்மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், அனைவருக்கும் சமநீதி கிடைத்து உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கவும் போதாது.

அதற்கு, இந்தியாவின் அனைத்து அதிகார உயர்பதவிகளிலும் பாரபட்சமில்லாத அளவிற்கு அனைத்து மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய நீதித்துறை, உளவுத்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளிலும், அரசு தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரப் பதவிகளிலும் உரிய அளவில் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மக்களுக்கும் நாட்டுக்கும் மிகுந்த பயனளிக்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட முற்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, தானாக முன்வந்து கண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிப் பின்வாங்க வைத்த பாரபட்சமில்லாத நீதி நடைமுறைப்படுத்த வேண்டிய இந்திய உச்ச நீதிமன்றம், அசைக்க முடியாத வீடியோ ஆதாரங்களின் மூலம் இந்தியாவில் நிலைகொண்டு விட்ட ஹிந்துத்துவத்தின் முகமூடியை தெஹல்கா கிழித்து எறிந்தப் பின்னரும் இதுவரை அதனைக் குறித்து வாயைத் திறக்காதது மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தப் பின்னரும் எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாக இருப்பதிலிருந்து மேற்கூறப்பட்டதற்கான அவசியம் மேலும் உறுதியாகின்றது.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்ட தாய்லாந்து பிரதமர்

November 5, 2006

தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரமளான் மாதத்தில் ஒரு நாள் (அக்டோபர் 25, 2004) ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தென் தாய்லாந்தின் காவல் நிலையம் ஒன்றின் அருகில் கூடினர். அவர்களில் பெரும்பாலோர் ஆர்வமிகுதியால் வேடிக்கை மட்டுமே பார்க்க வந்தவர்கள்.

தகுந்த ஆதாரமின்றி கைது செய்யப்பட்டிருந்த ஆறு பேரை விடுவிக்கக் கோரி அந்தக் கூட்டத்தினரில் சிலர் கோஷம் எழுப்பினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட ராணுவம் திடீரென அந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது. ராணுவத்தினர், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்கள் மேற்சட்டை கழற்றப் பட்டவர்களாக கைகள் பின்புறம் பிணைக்கப்பட்ட நிலையில் சாலைகளில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

ராணுவத்தின் பிடியில் தாய்லாந்து முஸ்லிம்கள்

அதன் பிறகு நடந்ததுதான் மிகக் கொடூரம். கைது செய்யப்பட்டவர்களை ராணுவம் சிறு சிறு ராணுவ வண்டிகளில் புளி மூட்டைகளை திணிப்பது போல திணித்து, சுமார் 5 மணி நேர பயண தூரத்திலிருந்த ராணுவ முகாம் ஒன்றிற்கு அனுப்பியது. ஒருவர் மேல் ஒருவராக மூன்று அல்லது நான்கு அடுக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடுக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு உயிருடன் அனுப்பப்பட்ட பலர் அந்த ராணுவ முகாமை அடைந்தபோது பிணமாகி இருந்தனர். ஆம். அவர்களில் 78 பேர் மூச்சுத் திணறியே மரணமடைந்து விட்டனர்.

அப்போதைய தாய்லாந்து பிரதமராக இருந்த தக்சின் ஷினவட்ரா ராணுவத்தினரின் செய்கையை தற்காத்து பேசியதோடு, அவர்களின் மனிதாபிமானமற்ற செய்கையை நியாயப்படுத்தும் விதமாக ‘முஸ்லிம்கள் நோன்பு இருந்ததனால், ‘வீக்’காக இருந்திருப்பார்கள். அதனால்தான் மரணமடைந்திருப்பார்கள்’ என்று பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு ஏற்கனவே வெந்து போயிருந்த முஸ்லிம்களின் மனதில் ஈட்டியைப் பாய்ச்சியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தாய்லாந்தில் அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. பிரதமர் தக்சின் மீது தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இறுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதே ரமளான் மாதத்தில் தக்சின் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தாய்லாந்தில் காலடி எடுத்து வைத்தால் ஊழல் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் தக்சின் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ராணுவத்தின் ஆதரவுடன் தற்காலிக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு தாய்லாந்தின் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த நல்லிணக்க முயற்சியால் தென் தாய்லாந்தில் அமைதி திரும்பும் சாத்தியம் தோன்றியிருக்கிறது.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

November 3, 2006

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

- 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 32.4 விழுக்காடாக இருக்கிறது.

- புதுதில்லி மக்கட்தொகையில் 11.7 விழுக்காடு உள்ளவர்கள் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சிறையிலிருக்கும் முஸ்லிம்களோ 27.9 விழுக்காட்டினர்.

- 9.1 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட குஜராத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் 25.1 விழுக்காட்டினர்.

இந்த எண்ணிக்கையில் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப் பட்டவர்களோடு விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களும் அடங்குவர்.

இந்தப் புள்ளி விவரங்களோடு ஒப்புநோக்குகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு சிறு விழுக்காட்டையே முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எதில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்தாலும், சிறையை நிரப்புவதில் அரசுகள் பாகுபாடின்றி இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள்தொகை வீதத்தை விட மிக அதிகப் பங்கு தருகிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் இந்த பரிதாபமான நிலைக்கு யார் அல்லது எது காரணம்?

- வறுமைதான் முஸ்லிம்களில் பெரும் விழுக்காட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

- காவல் துறையினரின் பாரபட்சமான செயல்பாடுகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான சட்ட உதவி கிடைக்காமலிருப்பதும் பல அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணங்களாக இருக்கின்றன. “ஏதேனும் குற்றச் செயல்களில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தால், ஒருவரை கைது செய்யவேண்டிய இடத்தில் பத்து பேரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில், தேவையில்லாத போதும் பல அப்பாவிகள் கைது செய்யப் படுகிறார்கள். கடைசியில் இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படுவதில்லை” என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஷஹாபுத்தீன்.

ஒரு முஸ்லிம் மீது போலீசாரால் ஏதாவது ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட உடனேயே அவரை குற்றவாளியாகக் கருதிக் கொண்டு சமூகம் ஒட்டுமொத்தமாக அவரைப் புறக்கணிப்பதும் சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் பெருமளவு நீதி கிடைக்காமல் அடைபட்டிருக்க காரணமாகின்றது. இந்த அதிர்ச்சி தரும் உண்மையை சமூகம் இனிமேலாவது கண்டுகொள்ள வேண்டும். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் காவல் துறையின் வலுவிழந்த ஆதாரங்களால் குற்றம் நிரூபணம் செய்யப்படாமல் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டால் இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் இந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, ஏழை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டியது மிக அவசியம். இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்களும் பண வசதி படைத்த முஸ்லிம்களும் இச்சேவைக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

ஏமாந்த நரிகள்!

September 17, 2006

கிருஸ்த்துவ மதத் தலைவர் 16-ம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டார். கிருஸ்த்துவ மதத்தின் உயர்ந்த பதவி வகிக்கும் போப் அவர்கள் இஸ்லாம் குறித்து இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். சில முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் போப் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தனர். இரு தரப்பிலும் உஷ்ணம் அதிகரிக்க, விவகாரம் பெரிதாக வெடித்து, இது உலகின் இரு பெரும் கலாச்சாரங்களுக்கிடையிலான போராக மாறிவிடுமோ என அனைவரும் அஞ்சும் சூழ்நிலை நிலவியது.

இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலின் பேட்டி:

“இஸ்லாம் மதம் குறித்து விமர்சிருத்திருப்பதன் மூலம் புதிய போரை ஆரம்பித்து வைத்துள்ளார் போப். வரும் நாட்களில் அது பற்றி எரியப் போகிறது.

இந்த விஷயம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலானது. இதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வி.எச்.பி.க்கு இதில் தொடர்பு இல்லை.

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நாம் அமைதியாக அதை பார்ப்போம்.”

இதைப் படித்தபோது நான் முன்பு எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,
சில தூண்டி விடப்பட்டு..
சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்
கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!

போப் அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் அசோக் சிங்கால்களின் ஆசையில் மண்ணள்ளிப் போடப்பட்டுள்ளது.

எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..! - கமலா சுரையா

September 15, 2006

கமலா சுரையா சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத துணிச்சலான பெண்மணி. அவர் மாதவிக்குட்டியாக இருந்தபோதிலிருந்தே, அவரது எழுத்து, செயல் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவர் இஸ்லாமை வேறு தழுவி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் மற்றும் இந்துத்துவ சக்திகளின் அக்னிப் பார்வைக்கும் இலக்காகியிருக்கிறார்.

தஸ்லிமா நஸ்ரினை ஆதாரமாக காட்டி, கமலா சுரையா ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் இன்னும் இஸ்லாமில் ‘மாட்டிக் கொண்டிருப்பது’ போல நேசக்குமார் என்பவர் (திண்ணையில்) எழுதியிருந்தார். ‘அப்படி எந்த நிர்ப்பந்தமோ கட்டாயமோ இல்லை’ என்பதையும் பத்திரிக்கைக்காரர்களின் திரிபுவாதம்தான் அது என்பதை சுரையாவே நேரடியாக விளக்கியதை தேஜஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. (இக்கட்டுரை அபூசுமையாவின் தமிழாக்கத்தில் திண்ணையில் வெளி வந்திருக்கிறது)

இது தவிர, ஆனந்த விகடன் 02-07-06 தேதியிட்ட இதழில் கமலா சுரையாவின் நேரடியான பேட்டி வெளியாகி இருக்கிறது.

அதில் “எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்“. என்கிறார் சுரையா.

சுரையா1

‘இஸ்லாம் மதம் மடுத்து’ என்பதுதான் அவரது உண்மை நிலைப்பாடாக இருந்தால் இந்துத்துவ சக்திகள் அவரைக் கொல்ல ஏன் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்? மாறாக அவருக்கு போதிய பாதுகாப்பளித்து அவரை இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்திருக்கலாமே?

இனி அவரது ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து…

வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ். கடுமையான பாதுகாப்பு. தொலைபேசி அழைப்புகள்கூட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உள்ளே… ஏராளமான புத்தகங்களுக்கு நடுவில், மும்முரமாக எழுதிக்-கொண்டு இருக்கிறார் கமலாதாஸ்.

‘என் கதை’ என்கிற சுயசரிதையின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த இந்த மலையாளப் பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதால், நீதிமன்றம் இவருக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. மாதவிக்குட்டி என்கிற பெயரில் இருந்து கமலாதாஸாக மாறியவர், பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறி, இப்போது கமலா சுரையா!

‘’நான் பரபரப்புக்காக எழுதுவதில்லை. என் எழுத்தும் பேச்சும் பரபரப்பாக்கப் படுகிறது. நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. அதனால்தான் என் பேனாவின் தாக்குதலை ஆயுதங்களால் எதிர்கொள்கிறார்கள்.

வீட்டுக்குள் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தாலும், என் எண்ணங்களும், எழுத்துக்களும் ஒரு நதியைப் போலப் பாய்ந்துகொண்டே இருக்கின்றன. மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாக என்னை இந்தத் தலைமுறை மதிக்கிறது. இருபது வயதாகும் ஓர் இளம் பெண் எழுத்தாளர், என் கைரேகையைப் பதித்து, அதையே என் அணிந்துரையாக நினைத்துச் சந்தோஷப்படுகிறாள்.

நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்திய மான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்.'’

சுரையா2

‘’உங்கள் எழுத்துக்களால் நிறைய பேர் காயமடைகிறார்களே?'’

‘’யார் காயப்படுகிறார்கள்? பலவீனமானவர்கள் காயப்படுகிறார்கள். பிறரைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் உடையவர்கள் காயப்படுகிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் திருந்தட்டும். அதுதான் அவர்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது.'’

‘’இஸ்லாம் மதத்துக்கு நீங்கள் மாறிய பிறகு, நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களே?'’

‘’நான் என் வாழ்நாள் முழுவதுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறேன். உண்மையைத் தீவிரமாகப் பேசுகிற யாரும் எதிர்ப்புகளைச் சந்தித்தாக வேண்டும். எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். அதனால், முஸ்லிம் தரப்பிலும் நிறைய எதிரிகளைச் சம்பாதித் திருக்கிறேன். இன்னொரு பக்கம் இந்துத்துவ சக்திகளும் என்னைக் கொல்ல தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், என் சுதந்திர எண்ணங்களைப் பதிவு செய்யாமல் எதற்காக நான் வாழ வேண்டும்? ‘’

‘’இந்த எதிர்ப்புகளுக்கு இடையில் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?'’

‘’நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு வருகிற எதிர்ப்புகள்தான் நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தும் உரைகல்.

சுரையா3

‘’குடும்ப அமைப்பும் சிதையக் கூடாது; ஆனால், பெண் விடுதலையும் அவசியம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதே முரண்பாடு என்று பெண்ணிய வாதிகள் பேசுகிறார்களே?'’

‘’பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, ‘கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்’ என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது.

தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்.'’

நன்றி: ஆனந்த விகடன், திண்ணை

தீவிரவாதத்திற்கான தீர்வு!

September 1, 2006

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமுதாயத்தவர் எதிர்நோக்கும் கேள்விதான் இது! இக்கேள்விக்கு விடை காண முற்படுமுன், இப்பிரச்னையின் மூல காரணிகளையும் அவற்றின் பிண்ணனியைப் பற்றியும் சிறிது ஞாபகப் படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

2001 செப்டம்பர் 11-க்கு முன் ஒசாமா பின்லேடன் என்ற சவுதி அரேபியரைப் பற்றி உலக முஸ்லிம்களிலேயே பெரும்பான்மையினர் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இவரைக் குறிப்பிட்டு அமெரிக்கா குற்றம் சுமத்தியபோதுதான் இவரது பெயரை முழு உலகமும் அறிந்தது. ஆனால் இந்நிகழ்வுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவரை நன்கு அறிந்து, இவரது நடவடிக்கைகளை கண்காணித்து, ஊக்கமூட்டி, நிதி உதவி செய்து, ரஷ்யாவிற்கு எதிராக கொம்புசீவி இவரை வளர்த்து விட்டது, வேறு யாருமல்ல, அதே அமெரிக்காதான். அவர்கள் ‘வளர்த்த கடா’ தான் அவர்கள் மார்பை பதம் பார்த்தது.

இத்தாக்குதல் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும், ‘அமெரிக்க அரசு வேண்டு மென்றே தாக்குதல் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தது’ என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்கிறது ‘Confronting the Evidences’ என்ற டாக்குமென்ட்டரி படம். இந்தப் படத்தை தயாரித்து, ‘வலி நிறைந்த கேள்விகள் - செப்டம்பர் 11 தாக்குதல் - ஓர் ஆய்வு’ (Painful Questions: An analysis of the September 11th Attack) என்கிற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டவர் எரிக் ஹஃப்ஸ்மித் (Eric Hufschmid) என்கிற அமெரிக்க புலனாய்வுச் செய்தியாளர்.

ஒசாமா பின்லாடனை அரசியல் காரணங்களுக்காக ஒரு போராளியாக வளர்த்து விட்ட அமெரிக்காதான், அவர் தங்களையே திருப்பி தாக்கியதும் அவரை ஒரு பயங்கரவாதியாக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அதன் பிறகு நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும்தான் உலக முஸ்லிம் சமுதாயத்தின் மீது இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக இருக்கும். செப்-11 தாக்குதலுக்கு முன்பு வரை பெரும்பான்மை முஸ்லிம்களால் யாரென்றே அறியப்பட்டிராத ஒசாமா, ஏதோ உலக முஸ்லிம்களின் தலைவர் போலவும், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பிரதிநிதி போலவும், உலக முஸ்லிம்கள் அனைவரின் நலனை பாதுகாப்பதற்காகவே அவர் இந்த தாக்குதலை நடத்தியது போலவும் ஊடகங்களில் சித்தரிக்கப் பட்டார். அந்தத் தாக்குதல், அமெரிக்காவின் முந்தைய அரசியல் செயல்பாடுகளின் பின்விளைவுதான் என்ற உண்மை மறைக்கப்பட்டு, ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொல்லாடலின் மூலம் அனைத்திற்கும் காரணம் இஸ்லாம் தான் என்ற மாயை உருவாக்கப் பட்டது. உலகெங்கிலும் முஸ்லிம்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப் பட்டனர். முஸ்லிம்கள் மீதான தேவையற்ற அச்சமும், வெறுப்புணர்வும், துவேஷமும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தூபமிட்டு வளர்க்கப் பட்டன. ஊடகங்களும் இதற்கு பெருமளவில் துணை புரிந்தன. யார் யாருடைய சதிச் செயலுக்காகவோ இஸ்லாம் மார்க்கமும் உலக முஸ்லிம் சமுதாயமும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பட்டனர். சுருக்கமாக சொல்வதென்றால், இஸ்லாமோஃபோபியா முழுவீச்சில் பெருகியது.

இந்த நிகழ்வுகளால் உலகெங்கிலும் அப்பாவி முஸ்லிம்கள் அல்லல் படுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சிறிதும் பெரிதுமாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் யாரும் மறுக்கவியலாது. சரி, இதற்கு தீர்வுதான் என்ன?

மிகச் சிக்கலாக வளர்ந்துவிட்ட இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, சிலர் எண்ணுவது போல இதற்கு தீர்வு காணும் பொறுப்பு இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமே உள்ள கடமை அல்ல. பல தரப்பினரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் மட்டுமே இதை சாதிக்க முடியும். வன்முறைச் செயல்களுக்கு ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ எனப் பெயர் சூட்டி, பிரச்சினைகளுக்கான பழியை இஸ்லாம் மீது தூக்கிப் போடுவது எந்த வித தீர்வையும் தராது என்பதோடு, அத்தகைய அணுகுமுறை மேலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்தி அவற்றின் உண்மைக் காரணங்களை பாரபட்சமின்றி அலசி ஆராய்ந்து தீர்வு காண முயலுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

வித்தியாசமானதொரு அணுகுமுறையைக் கையாண்டு யெமன் நாடு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. ஒசாமா பின்லாடனின் மூதாதையர்களின் நாடான இது, பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்தின் மற்றொரு பெயராக இருந்தது. தீவிரவாதிகளின் தலைமையகமாக இந்நாடு உருவாகக் கூடிய அறிகுறிகள் இருந்தன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

நீதிபதி ஹிதார் என்பவரது தலைமையில் இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு, தீவிரவாத செயல்களில் பங்கு பெற்று சிறையிலிருந்த இளைஞர்களை சந்தித்தது. “உங்கள் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் குர்ஆனிலிருந்து நீங்கள் ஆதாரம் காட்டுவீர்களெனில், உங்களது போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். அப்படி இல்லாமல், நாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை நாங்கள் ஆதாரபூர்வமான நிரூபித்து விட்டால், நீங்கள் அனைவரும் வன்முறையை விட்டொழித்து விட வேண்டும்” என ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, அவர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது இக்குழு.

இரண்டு வருடங்கள் கழித்து, இரு தரப்பினருக்குமே வெற்றி கிடைத்தது. ஆம்.. நீதிபதி ஹிதார் குழுவினர் முன்வைத்த கருத்துக்களை ஒப்புக் கொண்டதன் வாயிலாக 364 இளைஞர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டு நேர்வழிக்கு திரும்பினர். “டிசம்பர் 2002-க்கு பிறகு இங்கு எந்த தீவிரவாத சம்பவங்களும் நடக்கவில்லை.” என்கிறார் நீதிபதி ஹிதார். இவர்களில் யாருமே சண்டையிடுவதற்காக வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை என்றும் அவர் அறிவிக்கிறார்.

யெமன் நாட்டின் இந்த அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மார்க்கம் குறித்த தவறான புரிதல்கள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களால் வன்முறைப் பாதையில் பயணிக்கும் இளைஞர்களை, பொறுப்புணர்வுள்ள மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை கொண்டு நேர்வழிக்கு திருப்பிவிட முடியும் என்பதுதான்.

இந்தியா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள், தம் இளைய சமுதாயத்தினரின் மனதில் தீவிரவாத எண்ணங்கள் தலைதூக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு அந்தந்த நாட்டு பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு இருக்கிறது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தீயச் செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் அவனைத் திருத்தும் நடவடிக்கைகளில் அந்தக் குடும்பத்தினருக்கு அவர்களின் அக்கம்பக்கத்தவரும் உதவ வேண்டும். மாறாக, அந்த ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து, அந்த இளைஞனின் செயல்களுக்காக அவனது குடும்பம் முழுவதையும் குற்றம் சுமத்தி அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் என்றால் பிரச்சினைக்கு எந்த வித தீர்வும் ஏற்படாது. இக்குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட முற்படுவார்களேயல்லாது, தம் குடும்பத்து இளைஞனை நேர்வழிப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த இயலாமல் போகும்.

சிறுபான்மை முஸ்லிம்கள் தம் சமுதாய இளைஞர்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதை தடுத்து அவர்களை நேர்வழிக்கு சொண்டு வரும் முயற்சியில் பெரும்பான்மைச் சமுதாயம் தமது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவினை சக்திகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையினரின் புரிந்துணர்வுடனான பங்களிப்பு இருந்தால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் தமது பங்கை சரிவர நிறைவேற்ற முடியும்.

இத்தகைய நல்லிணக்கமான சூழலை உருவாக்குவதில், அரசாங்கத்தின் பங்கும் இன்றியமையாதது. அரசாங்கம் இதில் எவ்வாறு பங்காற்றலாம் என்பதற்கு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் ரவிசங்கர் சுக்லாவிற்கு 20 மார்ச் 1954-ல் எழுதிய இக்கடிதம் விளக்கமளிக்கிறது.

என் அன்பான சுக்லாஜி,

மத்தியப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் எழுதியுள்ள ஜனவரி 27 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. உடனடியாக பதில் எழுதாமைக்கு வருந்துகிறேன்.

இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு விதமான போக்குகள் இருக்கின்றன. அவற்றில் சில கண்டிக்கத் தக்கவையாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. எனினும் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது என நான் நினைக்கிறேன். பலதரப்பட்ட சூழல்களையும் நாம் ரொம்பவும் புறவயமாக மதிப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பொதுவில் மகிழ்ச்சியற்றும் திருப்தியற்றும் இருக்கிறார்கள் என்றால் தவறு நம் தரப்பில்தானே ஒழிய அவர்கள் தரப்பில் இல்லை. எந்த ஒரு பெருங்குழுவிற்கும் இது பொருந்தும். நாட்டுப் பிரிவினையாலும் அதன் பின்விளைவுகளாலும் இந்திய முஸ்லிம்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாதான் அவர்களின் சொந்த நாடு, அவர்களின் நலன்கள் இங்குதான் உள்ளன என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவது முழுக்க முழுக்க நம்முடைய பொறுப்பு. அதை நாம் செய்யத் தவறும்போது, முஸ்லிம்கள் அவர்களின் தலைவர்கள் சிலரால் தவறாக வழி நடத்திச் செல்லப்படுகிறார்கள் என நாம் சொல்வதில் அர்த்தம் இல்லை.

இந்திய முஸ்லிம்களின் சிந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு விரக்தி குடிகொண்டுள்ளது என்பது உண்மைதான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி நான் பேசவில்லை. அவ்வாறு நிறையப் பேரும் இல்லை. ஆனால் பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் மீது அழுத்தம் தொடர்ந்து ஏற்படுகிற மாதிரியான சூழல் இங்கு உருவாகியுள்ளது. அகில இந்திய அளவிலும், மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய இடமளிப்பது குறித்த பிரச்னை உள்ளது. கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவது குறித்த பிரச்சினை கூட உள்ளது. வணிகம் செய்வதிலும் அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எனவே எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மையை அவர்கள் உணர்வதில் வியப்பில்லை.

உருது மொழி குறித்த முஸ்லிம்களின் கோரிக்கை பற்றியும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இது ரொம்பவும் முக்கியமான விசயம். வேறெதையும் விட முஸ்லிம்களை உளவியல் ரீதியில் பாதிக்கக் கூடிய விசயம். நமது கல்விக் கொள்கையின்படி உருது மொழியைக் கற்றுக் கொள்வதற்கான முழு வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். இப்படிச் செய்வது இந்தி மொழிக்கு எதிரானது அல்ல. தேசிய மொழி என்கிற வகையில் இந்திக்கு உறுதியான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. நமது நடைமுறைக் கொள்கை நாம் அறிவித்துள்ள கல்விக் கொள்கையுடன் பொருந்தாமலிருப்பதன் விளைவுதான் முஸ்லிம்கள் மனதில் ஆழமான விரக்தியுணர்வை ஏற்படுத்தியிருக்குமோ என நான் அஞ்சுகிறேன்.

இந்த நாட்டு மக்களில் முஸ்லிம்கள் ஒரு பெருந்தொகையினர் என்பதையும், அவர்களின் நல்லெண்ணத்தை நாம் எவ்வாறு பெறுவது என்பது ஒரு பெரிய பிரச்சினை என்பதையும் நாம் மறந்து விட்டது போலத் தோன்றுகிறது. பெரிய அளவில் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் எதிர்வினையைப் பொறுத்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்றுள்ள தேர்தல் ஒரு புதிய சூழலைப் பாகிஸ்தானில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கு வழிவகுப்பதாக அது உள்ளது. பாகிஸ்தான் மக்களின் பொதுவான உணர்வுகள் இந்தியாவுடன் நட்பு பாரட்டுவதாகவே உள்ளன. இந்தியாவில் உள்ள முஸ்லிம் குடிமக்களை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம் உள்ளது.

உங்கள் உண்மையுள்ள
ஜவஹர்லால் நேரு

(நன்றி: ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ - அ. மார்க்ஸ்)

தீவிரவாதம் மதங்களை கடந்த ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை கவனத்தில் கொண்டு, அதை ஒழிப்பதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் தங்கள் பங்கை செலுத்த முன்வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நன்றி: திண்ணை August 31, 2006

இக்கட்டுரைத் தொடரின் முந்திய பகுதிகள்:

பகுதி-1 குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
பகுதி-2 இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
பகுதி-3 ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!
பகுதி-4 தீவிரவாதத்திற்கான தீர்வு!

ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!

August 18, 2006

‘இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்’ என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? இவர்கள் சொல்வது போல், இஸ்லாம் வன்முறையை தூண்டும் மார்க்கமா?

குர்ஆன் என்ன சொல்கிறது?

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” (குர்ஆன் 5:32). அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒரு உதாரணம்.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது’ என்கிற தமது துவேஷப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதற்காக அடிக்கடி எடுத்துக்காட்டும் திருமறை வசனங்களிள் ஒன்று, அத்தியாயம் 9-ன் 5-ம் வசனம். “முஷ்ரிக் (எனப்படும் இறைவனுக்கு இணைவைப்பவர்)களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்” எனும் இந்த வசனத்தை பிரபல பத்திரிக்கையாளர் அருண் ஷோரி கூட தனது ‘ஃபத்வாக்களின் உலகம்’ என்ற நூலில் பக்கம் 572-ல் மேற்கோள் காட்டி இஸ்லாம் மீது அவதூறு சுமத்தியிருக்கிறறர். இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள், இதே வசனத்திற்கு முன்புள்ள 9:4-ஐயும் பின்புள்ள 9:6-ஐயும் கவனமாக தவிர்த்து விடுவார்கள். அருண் ஷோரியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

இந்த வசனம் எந்தச் சூழலில் யாரைக் குறித்து சொல்லப் பட்டது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த அத்தியாயத்தை முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டியது அவசியம். அதோடு இந்த வசனம் இறங்கியதன் பிண்ணனியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாதவர்களில் சில பிரிவினர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, அதற்கு மாறு செய்யாமலும், முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவி செய்யாமலும் இருக்கும் கூட்டத்தினருடன் ‘அந்த உடன்படிக்கையை பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என வசனம் 9:4 மூலம் நபி அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். அந்த ஒப்பந்தத்திற்கு மாறு செய்பவர்களுடன் சண்டையிடும்படி வசனம் 9:5-ல் கூறும் அதே நேரத்தில், அவர்களில் யாரேனும் புகலிடம் தேடி வந்தால் அவர்களுக்கு அபயமளிக்கும்படியும் வசனம் 9:6-ல் இறைவன் அறிவுறுத்துகிறான்.

இந்த உண்மையான விளக்கத்தை மறைத்து, சண்டையிடும்படி சொல்லும் வசனம் 9:5-ஐ மட்டும் out of context-ல் எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஜிஹாத் என்றால் என்ன?

இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக