கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்!

March 18, 2007

கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு சேவியர் எழுதிய ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்’. இந்நூலைப் பற்றி நூலாசிரியர் சேவியர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஜோ என்ற வலைப்பதிவர் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி‘ என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

மேலே தொடருமுன் இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்!

அக்டோபர் 2004. வலைப்பதிவுகள் பிரபலமாகியிராத காலம். தமிழ் எழுத்தார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்த மடலாற்குழுக்களைச் சார்ந்திருந்தனர். மரத்தடி, ராயர் காப்பி கிளப் போன்ற மடலாற்குழுக்கள் பிரபலமாக இருந்தன. பா.ராகவன், மாலன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் அந்த விவாதங்களில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது கிழக்கு பதிப்பகம் துவங்கப் பட்டு ஓராண்டு கூட நிறைவடைந்திருக்கவில்லை. அப்போது அவர்கள் வெளியிட்டிருந்த புத்தகங்களுள் ஒன்று நாகூர் ரூமி எழுதிய “இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்”. இந்தப் புத்தகத்தை அவர்கள் நேசகுமார் என்ற புனைப்பெயருடைய, மடலாற்குழுக்களில் கூட அப்போது பிரபலமாகியிராத, இன்று வரை தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத ஒரு நபருக்கு இலவசமாக அனுப்பினார்களாம். காரணம், இந்த நபர் மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தாராம். அவரது தவறான புரிதல்களை தெளிவிக்கவே இந்தப் புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைத்தார்களாம்.

(”இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹ¨ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சேஷாத்ரி பத்ரி, நாகூர் ரூமி பற்றிய எனது ‘தவறான புரிதல்களை ‘ தெளிவிக்க எனக்கு இப்புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்.” - நேசகுமார், Thinnai - October 22nd, 2004)

பிளாஷ்பேக்கை இங்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு இயேசு பற்றிய புத்தகத்திற்கு வருவோம்.

இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை தெளிவிக்க நேசகுமாருக்கு இலவசமாக புத்தகம் அனுப்பிய கிழக்கு பதிப்பகம், இயேசு பற்றிய அரவிந்தன் நீலகண்டனின் தவறான புரிதல்களை தெளிவிக்க ஏன் இந்தப் புத்தகத்தை அவருக்கு இலவசமாக அனுப்பவில்லை?

‘மகாகவி பாரதியின் பகவத் கீதை உரை’ என்ற நூலை பதிப்பித்திருக்கும் கிழக்கு பதிப்பகம், கீதையை ‘தவறாக’ புரிந்து கொண்டதால் ‘கீதையின் மறுபக்கம்’ எழுதிய கி.வீரமணிக்கு ஏன் இலவசப் பிரதி அனுப்பவில்லை?

‘ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள்’ ‘பக்தி இயக்கம்’ போன்ற அவர்களின் புத்தகங்களை பார்ப்பனீயத்தைச் சாடி எழுதிவரும் விடாது கருப்பு போன்ற பதிவர்களுக்கோ, இந்துமதத்தை ‘தவறாக புரிந்து வைத்திருக்கும்’ முஸ்லிம் பதிவர்களுக்கோ ஏன் அனுப்பவில்லை?

ஏன் இந்தப் பாரபட்சம்?

சரி..பிளாஷ்பேக்கை மீண்டும் தொடருவோம்:

கிழக்கு பதிப்பகம் நேசகுமாருக்கு இலவச புத்தகம் அனுப்பியதால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன.

1. குறுகிய காலத்திலேயே அந்தப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ( பத்ரி சேஷாத்ரி, திண்ணை, நவம்பர் 11 2004).

2. இரண்டாவது பின்விளைவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புத்தக விமரிசனம் என்ற பெயரில் நேசகுமார் எழுதிய கட்டுரைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே நேசகுமார் தொடர்ந்து எழுத நேரிட்டது.

(எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். - நேசகுமார்)

அவர் பிடித்த ‘புலி வாலை’ விடமுடியாத நேசகுமார், இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார வலைத்தளங்களிலிருந்து சில ஆதாரமற்ற தகவல்களை எடுத்து வைத்து தனது சப்பைக் கட்டுகளை தொடர்ந்தார். இந்த விவாதங்கள் மடலாற்குழுக்களிலிருந்து, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய சஞ்சிகைகள், பின் வலைப்பதிவுகள் என தொடர்ந்து கொண்டே சென்றது.

இச்சூழலில், நேசகுமாரைத் பின்தொடர்ந்து அவரைப்போலவே ‘முகம் மறைத்த’ வேறு சில ‘விமர்சகர்களும்’ இணையத்தில் தலை காட்டத் தொடங்கினர். தகுதி, தராதரம் எதுவுமில்லாத அவர்கள் ‘இஸ்லாம் பற்றிய விவாதம்’ என்ற பெயரில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினர். ‘நக்குற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன’ என்று ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்றாற்போல் இந்த ‘திடீர் விமர்சகர்கள்’ முஸ்லிம்கள் உயிரென மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியரான முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் கீழ்த்தரமான வார்த்தைகளில் எழுதினர். நேசகுமார் என்பவரும் இந்த முகமூடிகள் சிலரின் எழுத்துக்களை தனது பதிவுகளில் மேற்கோள் காட்டி எழுதினார். டென்மார்க் நாளிதழில் வெளியான கேலிச்சித்திரங்களை தமது பதிவில் வெளியிட்டும் தமது வெறியை தீர்த்துக் கொண்டார். அதுவரை கண்ணியமான முறையில் அவருடன் விவாதங்கள் புரிந்து வந்த முஸ்லிம் பதிவர்கள் அவரது உண்மை உருவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றனர். அன்று தொடங்கி இன்றளவும் தமிழ் இணையத்தில் முழு வீச்சில் நடந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களில் மருந்துக்கு கூட நாகரீகம், கண்ணியம், நேர்மை, போன்ற சொற்களுக்கு இடமில்லை. இந்த ‘கலாச்சாரத்தை’ இணையத்தில் தொடங்கி வைத்த பெருமை நேசகுமார் அவர்களையே சாரும்.

இவ்வளவும் நடந்ததன் ஆரம்பப் புள்ளி அந்த ‘இலவசப் புத்தகம்’தான் என்பதை முஸ்லிம்களால் என்றும் மறக்க வியலாது.

ஒரு இலவசப் புத்தகம் அனுப்பியதன் மூலம் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ விற்றுத் தீர்ந்ததுபோல, அதே ‘வெற்றி பார்முலா’வைப் பின்பற்றி கிழக்கு பதிப்பகம் தாம் வெளியிடும் மற்ற மதங்கள் தொடர்பான புத்தகங்களையும் விரைவிலேயே விற்று முடித்து நிறைய லாபம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! பக்க விளைவுகள் பற்றி யாருக்கு என்ன கவலை?

எ.பி.க: ஒரு கேள்வி!

August 7, 2006

மேத்தா

உன்னுடைய கொடியை
உயர்த்திப் பிடித்துக் கொள்!
எதற்காக
அடுத்தவர் கொடிக்கம்பத்தை
அறுக்கத் துடிக்கிறாய்?

உன்னுடைய மார்க்கத்தில்
பூக்களைத் தூவிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் மார்க்கத்தில்
முட்களைப் பரப்புகிறாய்?

உன்னுடைய படத்தை
ஆணியில் மாட்டிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் படத்தின் மேல்
ஆணி அறைகிறாய்?

உன்னுடைய நிறைகளை
ஊரெங்கும் சொல்லிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் குறைகளை
ஆராய்ச்சி செய்கிறாய்?

உன்னுடைய தோட்டத்தில்
வேலி போட்டுக் கொள்!
எதற்காக
அடுத்தவர் தோட்டத்தில்
அத்து மீறுகிறாய்?

ஊரை எழுதுகிறாய்!
பேரை எழுதுகிறாய்!
எப்போது
உண்மையில் நீ யாரென்று
எழுதப் போகிறாய்?

மதத்தைச் சொல்கிறாய்!
சாதியைச் சொல்கிறாய்!
எப்போது
மனிதன் என்று நீ
சொல்லப் போகிறாய்?

****
“மனிதனைத் தேடி..” - மு. மேத்தா
கவிதா பதிப்பகம், சென்னை-17

ஆறு புத்தகங்கள்!

July 10, 2006

நண்பர் நல்லடியார் ஆறு விஷயங்களைப் பற்றி எழுதும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவருக்கு நன்றி சொல்லி, சமீபத்தில் எனது கவனத்தை ஈர்த்த ஆறு புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.

1. படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்: ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

நான் படிக்கும் சுந்தர ராமசாமியின் முதல் புத்தகம் இது. மனிதருக்கு நன்றாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது. நாகர்கோவில் வட்டார வழக்கு உரையாடல்கள் கதைக்கு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்துகின்றன. சாம்பிளுக்கு கொஞ்சம்…

‘.. உங்களுக்குக் கதை தெரியாதா? நல்ல தமிழிலேயே சொல்றேனே. அவருக்கும் அவரு பெஞ்சாதிக்கும் சண்டை வந்திற்று. அவ “கெழவா எப்படியும் போக்களிஞ்சு போ. நான் போறேன் என் மக்கமாருகிட்டே”ன்னு சொல்லி சிலோனுக்கு கம்பி நீட்டிப்போட்டா. அங்கே பொண்ணும் பிள்ளைகளும் அந்தஸ்தாட்டு இருக்குது. இவரு இங்கே பிரஸ்ஸிலேயே அடுப்பை மூட்டிக் கஞ்சிப் போட்டுக்கிட்டு, தலையங்கம் எழுதறேன்னு காகிதத்தைப் பறண்டிக்கிட்டு இருந்தாரு. அப்பம் ஒரு செரங்கு வந்து…’

‘யாருக்கு?’

‘அவருக்குத்தான். முதுகிலே, மொரட்டுச் செரங்கு. அதுக்கு ஒரு நா இவளைக் கூப்பிட்டு மருந்துப் போடச் சொல்லியிருக்காரு…’

‘யாரெ?’

‘கேட்டுக்கிட்டே வாங்களேன்… அவ அந்தாலெ பெருக்கிக் கிட்டிருந்தவ வாரியல மூலையில சாத்திப்போட்டுச் சிரங்குக்கு மருந்து போட்டா.’

காதர் லேசாகச் சிரித்தான்.

இசக்கிக்கு உற்சாகம் கிளம்பி விட்டது.

‘சிரங்குக்கு மருந்து போடுதுக்கு வந்தவா சிரங்கு ஆறினதும் கையெ எடுக்கணுமா வேண்டாமா? எடுத்தாளில்லே. அப்புறம் நான் ஒரு நா பிரிண்டர் சாமுவேலுகிட்டே, “என்ன சாமுவேல் அண்ணேய், இவ கையெ எடுக்க மாட்டேங்காளே” அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அவன் “இசக்கி அண்ணாச்சி, அது எடுக்குதுக்கு வெச்ச கையில்லே”ன்னு நச்னு சொல்லிப் போட்டான்.’ (பக்கம் 180-181)

இப்புத்தகத்தைப் பற்றி ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட விமரிசனம் இந்தச் சுட்டியில் இருக்கிறது.

2. கேட்டுக் கொண்டிருக்கும் புத்தகம்: ரஹீக் - அஷ்ஷைக் ஸஃபியுர்ரஹ்மான் - தமிழில் அ. உமர் ஷரீஃப்

மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் Muslim World League என்ற இஸ்லாமிய நிறுவனம் நடத்திய உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்நூல், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரபூர்வமாக விவரிக்கிறது. அரபி மொழியில் எழுதப்பட்ட இந்நூலை அ. உமர் ஷரீஃப் தமிழில் மொழி பெயர்த்து ‘தாருல் ஹுதா’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘தாருல் ஹூதா’ இந்நூலை MP3 சி.டி.க்களாக வெளியிட்டிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில் இப்புத்தகம் படிக்கப் படுவதை காதில் வாங்கிக் கொண்டே புத்தகத்திலும் கண்களை ஓட விடுவது ஒரு வித்தியாசமான வாசிப்பனுவத்தை தருகிறது.

இப்புத்தகம் இந்த இணணயத் தளத்தில் முழுமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

3. படிக்கவிருக்கும் புத்தகம்: நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்

அறிமுகம் தேவையில்லாத அளவிற்கு பிரபலமான புத்தகம். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தபோதே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு யூதராகவோ, கிருஸ்துவராகவோ, முஸ்லிமாகவோ அல்லாத பா.ராகவனின், பாலஸ்தீன் பற்றிய நடுநிலைக் கண்ணோட்டத்திலான ஒரு ஆய்வு நூல். தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள்தான் படிக்க முடிந்தது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இப்புத்தகத்தை அடுத்து படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கிறேன்.

இந்த வலைப்பதிவிலும் இத்தொடர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

4. படிக்கவிருக்கும் புத்தகம்: நான் புரிந்து கொண்ட நபிகள் - அ. மார்க்ஸ்

ஜூன் இரண்டாம் வாரம் தஞ்சை அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக் கழக ஏற்பாட்டில் நடந்த புத்தக் கண்காட்சியில் கண்ணில் பட்டது இந்த புத்தகம். மார்க்ஸியவாதியான அ.மார்க்ஸ் இஸ்லாம் பற்றியும் நபிகள் பற்றியும் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் புத்தகத்தை வாங்கி வந்தேன். பிரித்துப் படிக்க இன்னும் வேளை வரவில்லை.

இப்புத்தகம் பற்றிய மதிப்புரை இங்கே.

5. பாதி படித்த புத்தகம்: இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா

திமுக சார்பில் மருங்காபுரி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கவிஞர் சல்மா எழுதிய புத்தகம் இது. வெளியூர் சென்றிருந்தபோது உறவினர் ஒருவரிடம் இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். பாதி படிப்பதற்குள் ஊருக்கு புறப்பட வேண்டியதாகி விட்டது. வேறு யாரிடமாவது ‘ஓசி’க்கு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப் படுத்திய நாகூர் ரூமியின் விமரிசனம் இங்கே.

6. மறுவாசிப்பு செய்யவிருக்கும் புத்தகம்: எங்கே பிராமணன்? - சோ

சில வருடங்களுக்கு முன் படித்த புத்தகம். கருத்துக்கள் எதுவும் நினைவிலில்லை. மறுவாசிப்பிற்காக தூசி தட்டி எடுத்து வைத்திருக்கிறேன்.

இப்புத்தகம் பற்றி கண்ணில் பட்ட திண்ணைக் கட்டுரை ஒன்று.

புத்தக விமரிசனம்: ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’

July 7, 2006

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய கொள்கைகளை விமரிசித்து எழுதி வரும் வேளையில், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் இவரை ஆதரித்து பாராட்டி, தூபமிட்டு அதில் குளிர் காய்ந்து வரும் சூழ்நிலையில் இவரது நூலாகிய ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ மிகுந்த கவனத்தை பெறுகிறது. இந்நூல் குறித்த ஒரு சிறு விமரிசனமே இக்கட்டுரை.

இப்புத்தகம் எழுத வேண்டிய அவசியத்தை ஹெச்.ஜி.ரசூல் தனது முன்னுரையில் (பக்.3) இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும், திருமறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது…. இந்நிலையில் திருக்குர்ஆனிலும் ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை பிரதானப் படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு’ மிகத் தேவையாக உள்ளது’.

இது வரவேற்கத்தக்க ஒரு அணுகுமுறை என்பதில் சந்தேகம் இல்லை. காலங்காலமாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரான மார்க்கம்’ என நிறுவ முயன்று வருகின்றனர். இஸ்லாத்தின் கொள்கைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றை குருட்டாம்போக்கில் நடைமுறைப் படுத்தும் சில முஸ்லிம்களின் செயல்பாடுகளைத்தான் இவர்கள் ஆதாரங்களாக கொள்கின்றனர். அவ்வாறில்லாமல், ரசூல் மிகச்சரியாக குறிப்பிட்டிருப்பதைப் போல, இஸ்லாமியக் கொள்கைகளை முறையாக விளங்கிக் கொள்வதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஹதீசுகள்தான் சரியான உரைகற்கள். முஸ்லிம்களின் செயல்பாடுகளை இந்த உரைகற்களைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, இவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கைகளை விளங்க முயற்சிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

*****

இவ்வாறு தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகத்தில் முதல் ஓரிரண்டு அத்தியாயங்களிலேயே கருத்துக்கள் பிசிறடித்து முரண்பாடுகள் பல்லிளிக்கத் தொடங்கி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு சில:

“ஆண் நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி பெண்ணை விவாகரத்து செய்துவிடலாம்.” (பக்கம் 5)
“இஸ்லாமிய வாழ்க்கை முறையில் தலாக் என்பது மனைவியை நினைத்த நேரத்தில் கணவன் மணவிலக்கு செய்யும் மண முறிவு நிகழ்வாகும்.” (பக்கம் 8 )

என்று கூறும் ரசூல், பக்கம் 9 முழுக்கவே கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்களை தீர்க்க திருக்குர்ஆன் கூறும் தலாக்கின் முன்நிலை நடவடிக்கைகளையும், தலாக் சொல்லுதலில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளையும் விவரிக்கிறார். மேலும் பக்கம் 10-ல் முத்தலாக் சொன்னபிறகு அதே கணவன் மனைவி சேர்ந்து வாழ விரும்பினால் அதற்கான விதிமுறை வெகு கடுமையாக வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்த வழிமுறைகளும் விதிமுறைகளும், தலாக் என்பது குறிப்பிட்ட கால அவகாசங்களை அனுஷ்டித்து, பின்விளைவுகளைப்பற்றி நன்கு யோசித்து, இரு குடும்பத்தாரின் முக்கிய நபர்களை கலந்தாலோசித்து, ‘வேறு வழியே இல்லை’ எனும் பட்சத்தில் தீர்மானிக்க வேண்டிய ஒரு முடிவு என்பதை தெளிவு படுத்துகின்றன. உண்மை இவ்வாறிருக்க, இஸ்லாம் ஏதோ ஆண்களுக்கு நினைத்த மாத்திரத்தில் தலாக் செய்யும் உரிமையை வழங்கியிருக்கிறது என்கிற தொனியில் ரசூல் குறிப்பிட்டிருப்பது மிகத்தவறானது.

ஒரு பெண் எவ்வாறு ‘நினைத்த நேரத்தில்’ பிள்ளை பெற்றுக் கொள்ள இயலாதோ, அதேபோல இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஒரு ஆண் ‘நினைத்த நேரத்தில்’ தலாக் சொல்லவும் முடியாது என்பதுதான் உண்மை.

*****

‘பலதார மணம்’ என்ற அத்தியாயத்தில், “திருமறை வசனத்தில் தங்களுக்கு தேவையான ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து ஆண்கள் தங்கள் ஆதிக்க கருத்தியலுக்கு ஏற்ப இவற்றை வடிவமைத்து நடைமுறைப் படுத்திவிடுகிறார்கள்” என்பது ரசூலின் குற்றச்சாட்டு. (பக்கம் 5)

பல முஸ்லிம்களிடையே இஸ்லாமிய வாழ்வு நெறிமுறைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாமையும், அவற்றை உள்ளது உள்ளபடி விளங்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையின்மையுமே இதன் காரணங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை உடையவர்கள் அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி நீதமாக நடக்க வேண்டும் என்ற திருமறையின் கடுமையான நிபந்தனையையும் ‘மனைவியருக்கிடையே சமமாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் முடியாது (4:129) ‘ என்ற எச்சரிக்கையையும் பார்க்கும்போது, அவ்வாறு நடந்து கொள்ள முடிந்தவர்களுக்கு மட்டுமே பலதார மணத்திற்கான அனுமதி என்பது விளங்கும்.

*****
“இவைகள் அனைத்துமே கணவனுக்கு மாறு செய்யும் பெண்ணை தண்டிக்கவே கூறப்பட்டுள்ளன. ஆனால் மனைவிக்கு மாறு செய்யும் கணவனுக்கு என்ன விதமான தண்டனை என்பது குறித்து அதிக பட்சமும் மௌனமே பதிலாக கிடைக்கிறது” என ஐயத்தை கிளப்புகிறார் ரசூல். அதற்கான பதில் அவரது புத்தகத்திலேயே இருப்பதை, பாவம் ரசூல் அறியவில்லை போலும்.

“விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள் (அந்நூர் அத்தியாயயம் 24, வசனம்:2)” - பக்கம் 33

“திருமணத்திற்கு பிறகு முறை தவறிய பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு ரஜ்ம் என்னும் கல்லெறித் தண்டனை விதிக்கப் படுகிறது” - பக்கம் 34

இவை ரசூல் தனது புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கும், மனைவிக்கு மாறுசெய்த கணவர்களுக்கான தண்டனைகள்.

*****

“திருக்குர்ஆனிலும் ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை பிரதானப் படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு’ மிகத் தேவையாக உள்ளது” என்று தொடங்கிய ரசூல், ‘தர்கா கலாச்சாரம்’ என்ற அத்தியாயத்தில் தடுமாறி தடம் புரண்டு நிற்கிறார்.

“குடும்பம், வீடு என்கிற நிறுவனத்திற்குள் அன்றாடம் கட்டுண்டு கிடக்கும் இஸ்லாமியப் பெண்ணுக்கு தர்காக்கள் சமூக அளவில் வரையறுக்கப்பட்ட விடுதலையை உருவாக்கும் கேந்திரமாக செயல்படுகின்றன” என தர்காவிற்காக கொடி பிடிக்கிறார் ரசூல். திருக்குர்ஆனிலோ ஹதீசுகளிலோ அனுமதிக்கப்படாத இது, தனது சொந்தச் சரக்கு என்பதை ரசூல் குறிப்பிட மறந்துவிட்டார் போலும்.

தர்கா சியாரத் என்னும் பழக்கம், ‘வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே’ என்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும் ‘இணை வைத்தல்’ என்னும் கொடிய பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லும் அபாயகரமான பாதை என்பதையும் ரசூல் வசதியாக மறந்து விட்டார், அல்லது மறைத்து விட்டார்.

திருமறை வசனங்களை தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப மாற்றி பொருள் கொள்வது எவ்வளவு பெரிய தவறோ, அதே அளவிற்கு இஸ்லாத்தில் இல்லாத, அதன் அடிப்படை கொள்கைகளுக்கு மாற்றமான ‘தர்கா சியாரத்’ போன்ற வழக்கங்களுக்கு இஸ்லாமிய முலாம் பூசுவதும் தவறுதான். முன்னதை கடுமையாக தாக்கும் ரசூல் பின்னதை வலியுறுத்துவது விந்தையே!

*****
‘சாட்சி’ என்ற அத்தியாயம் (பக்கம் 14) போன்ற ஒரு சில இடங்களில் ரசூல் சரியான கருத்துக்களை முன்வைத்திருப்பினும், பொதுவாகவே இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் தெளிவில்லாமலும், பிரச்னைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மழுப்பலாகவும் தெரிகின்றன. பிறகொரு சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுமேயானால், ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே!’ என நிலையை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

திருக்குர்ஆன் மற்றும் ஹதீசுகள் சார்ந்த இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிம்களின் சில தவறான செயல்பாடுகளும் சரியான முறையில் வித்தியாசப்படுத்தி காட்டப்படாமல், இத்தகைய செயல்பாடுகள் இஸ்லாத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன என்பது போன்ற ஒரு தவறான மனப்பிம்பத்தை இப்புத்தகம் ஏற்படுத்த முயல்கிறது.

சுருக்கமாக, ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ என்பதற்கு சரியான விளக்கத்தை இப்புத்தகம் தரத் தவறிவிட்டது!

நன்றி: திண்ணை

‘கன்வர்ட்’ எனும் சொல்லே குர்ஆனில் இல்லை!

July 5, 2006

கல்லூரி அரங்கு ஒன்றில் தொலைக்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது!

மாணவர் ஒருவர் எழுந்து வினா தொடுத்தார்..
“என்னுடைய கேள்வி சற்றுக் கடுமையாக இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. விளக்கம் பெறவே இந்தக் கேள்வி. மதமாற்றத்தை இஸ்லாம் விரும்புகிறதா? கட்டாயமாக பிறரை மதம் மாற்றுங்கள் எனக் குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதாமே? இது ஏன்? இது சரியா? இஸ்லாம் இதனை ஊக்கப்படுத்துகிறதா?” படபடவென வினாக்களை பொழிந்து விட்டு மாணவர் அமர்ந்தார்.

விளக்கம் சொல்ல எழுந்த அறிஞரின் முகத்தில் வசீகரப் புன்னகை.

“நண்பர் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார். போலித்தனமோ, பாசாங்கோ இல்லாமல் அவர் வெளிப்படையாக தம் மனதில் இருப்பதை கேட்டுள்ளார். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். மதமாற்றத்தைக் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தை சுருக்கமாகச் சொல்கிறேன்.

நான் குர்ஆனை முழுமையாக ஓதி உணர்ந்தவன். குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் ‘கன்வர்ட்’ (Convert) - மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் ‘கன்வே’ (Convey) - எடுத்துரைத்தல் - அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது.

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிறருக்கு எடுத்துரைக்கலாம்; ஆனால் மதம் மாறும்படி வற்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை” என்ற அந்த மார்க்க அறிஞர், தொடர்ந்து ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

அந்த விளக்கங்களை பொறுமையுடன் கேட்ட அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், “இஸ்லாம் குறித்து வெகுநட்களாக என் உள்ளத்தில் இருந்த தவறான கருத்து, உங்கள் விளக்கத்தின் மூலம் நீங்கி விட்டது. குர்ஆனின் பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டேன்!”

‘இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள்’ என்று அந்தக்காலம் முதல், ‘அரேபியப் பணத்தைக் கொண்டு மதம் மாற்றுகிறார்கள்’ என்று இந்தக்காலம் வரை, இஸ்லாத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் சுமத்தப்பட்டு வரும் சூழலில், அவற்றிற்கெல்லாம் ஆணித்தரமான விளக்கத்தை எளிய முறையில் தருகிறது ‘நெஞ்சோடு’ என்னும் நூல்.

‘சமரசம்’ இதழின் பொறுப்பாசிரியர் சிராஜுல் ஹஸன், ‘திணமணி’ நாளிதழின் இணைப்பான ‘வெள்ளிமணி’யில் எழுதிய இஸ்லாமியக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கும் இந்நூல் ஒவ்வொன்றிலும் 25 கட்டுரைகள் இருக்கின்றன. இக்கட்டுரைகள் நூலாசிரியரின் வெவ்வேறு விதமான அனுபவங்களை விவரிக்கிறது.

கவர்ந்திழுக்கும் தலைப்புகள், எளிமையாக கதை சொல்வது போன்ற எழுத்து நடை, இயல்பான உரையாடல்கள், சுற்றி வளைக்காமல் சொல்ல வரும் கருத்தை நேரடியாக சொல்லும் பாங்கு ஆகியவை இந்நூலின் சிறப்பம்சங்களாக மிளிர்கின்றன.

அந்தக் கல்லூரி மாணவருக்கு இருந்த சந்தேகத்தைப் போல இஸ்லாம் குறித்து நிலவும் பல்வேறு ஐயங்களுக்கு எளிமையான விளக்கம் அளிக்கும் வகையில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு சில கட்டுரைத் தலைப்புகள்:

* இறைவனுக்கு எதற்கு இடைத்தரகர்கள்?

* பள்ளிவாசலில் மட்டும்தான் இறைவனா?

* முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளா?

* தர்கா சென்றால் நோய் தீருமா?

* இந்துக்கள் குர்ஆன் படிக்கலாமா?

* இயேசு அழைத்த இறைவன்

* இரண்டு கடவுள்கள் இருந்தால் என்ன தப்பு?

* நீங்கள் வணங்குவது அக்பரைத் தானே?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகமில்லை.

நூல்: நெஞ்சோடு
ஆசிரியர்: சிராஜுல் ஹஸன்
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
இணையம்: www.iftchennai.org
விலை: ரூ 25.00