இஸ்லாம் குறித்து அமெரிக்காவுக்கு ஏனிந்த அச்சம்?

February 6, 2008

ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி…

கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம் என்று சொல்கிறீர்களா?

பதில்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.

உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.

இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.

அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.

அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.

இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்

இவ்வளவுதானா மலர்மன்னனின் வரலாற்று அறிவு?

January 11, 2008

வரலாற்று திரிபுவாதம் புரிவது சிலருக்கு கைவந்த கலை. சிலருக்கு அதுவே தொழிலாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. அத்தகையோரில் ஒருவர் திண்ணை எழுத்தாளர் மலர்மன்னன் என்பவர். ‘இஸ்லாம்’ ‘முஸ்லிம்’ என்பன இவருக்கு ஆகாத சொற்களாம். ‘முகமதியம்’ முகமதியர்’ என்றுதான் இவர் குறிப்பிடுவாராம். இஸ்லாமின் வரலாற்றை சிறிதளவே அறிந்தவர்கள் கூட இத்தவறைச் செய்ய மாட்டார்கள். இவர் பத்திரிக்கையாளராக இருந்தவராம். இந்துத்துவ சிந்தனை உடையவர்கள் எந்த அளவிற்கு வரலாற்றை திரிப்பார்கள் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாராணம்.

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களை படைத்த அதே இறைவன்தான் முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ். அன்று தோன்றியதுதான் இஸ்லாம். முதல் மனிதருக்கு அன்றைய சூழலுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்கிய இறைவன், தொடர்ந்து தனது தூதர்கள் முலம் வெவ்வேறு காலக்கட்டங்களில் மனிதர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அனுப்பியே வந்திருக்கிறான். நூஹு (அலை), மூசா (அலை), யாக்கூப் (அலை), யூசுப் (அலை), யூனுஸ் (அலை), இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), ஈசா (அலை) என எண்ணற்ற இறைத்தூதர்களை அனுப்பியவன் அந்த இறைவனே. இந்த வரிசையில் இறுதியாக வந்த இறைத்தூதரே முஹம்மது (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர் இப்றாஹிம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்கள்தான் ஈசா (அலை) அவர்களும் முஹம்மது (ஸல்) அவர்களும். இப்றாஹிம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து புணர் நிர்மாணம் செய்த ‘கஃபா’ எனும் இறை ஆலயம் இருக்கும் திசை நோக்கித்தான் முஸ்லிம்கள் தினம் ஐவேளை இறைவனை வணங்குகிறார்கள். ஹஜ்ஜுக்குச் செல்வோர் அந்த ‘கஃபா’வைத்தான் ‘தவாஃப்’ எனும் வலம் வருகின்றனர். இப்றாஹிம் (அலை) அவர்களின் மனைவி அன்னை ஹாஜிரா தனது பச்சிளம் குழந்தை இஸ்மாயில் அவர்களின் தாகம் தணிக்க வேண்டி தண்ணீர் தேடி பரிதவித்து ஓடிய சபா, மர்வா எனும் குன்றுகளுக்கு மத்தியில், அந்நிகழ்வை நினைவு கூரும் வகையில் ஹாஜிகள் ஓடுகிறார்கள். தனது மனதை கெடுக்க முயன்ற சாத்தானை இப்றாஹிம் (அலை) அவர்கள் கல்லெறிந்து விரட்டியதைப் போலவே ஹாஜிகளும் சாத்தானுக்கு கல்லெறிகிறார்கள். இந்த இப்றாஹிம் (அலை) அவர்கள் ‘யூதராகவோ கிருஸ்துவராகவோ இருக்கவில்லை. அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார்’ என குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

இவ்வளவு வரலாற்றையும் புறந்தள்ளிவிட்டு, இஸ்லாம் என்ற மாபெரும் இயக்கத்தை ‘முகமதியம்’ என அழைக்க முற்படுவது, சமுத்திரத்தை சிறு சீசாவுக்குள் அடைப்பது போன்ற நகைப்பிற்குறிய செயல். அதையும் ஒரு முதிர்ந்த பத்திரிக்கையாளராக தன்னை சொல்லிக் கொள்பவர் செய்வது அவரது வரலாற்று அறிவின்மையையே காட்டுகிறது.

இதுபற்றி சகோதரர் வஹ்ஹாபி திண்ணையில் ஒரு அருமையாக கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்

வஹ்ஹாபி

சென்ற வாரத் திண்ணையில் ‘முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்’ என்ற கட்டுரை [சுட்டி-01] படிக்க நேர்ந்தது.

‘தீவிரவாதம்’ மற்றும் ‘பயங்கரவாதம்’ என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு ‘இஸ்லாமிய’ என்பது நிலைமொழியாக நிறுத்தப் படுவதன் அயோக்கியத்தனத்தைக் குறித்துக் கடந்த 04.10.2007 குங்குமம் இதழில் திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமி சுருக்கமாகத் தொட்டு[சுட்டி-02]க் காட்டி விட்டதால், இங்குத் தலையாய பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்ற திரிபுவாதம் மட்டுமே.

சரி, காந்திஜியும் ஹரிஜனும் இங்கெதெற்கு? என்ற கேள்வி வரலாம்.

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்ற பெயரை முதலில் வழங்கியவராக காந்திஜி அறியப் படுகிறார். ஹரிஜன் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் காந்திஜியே கூறுகிறார்:

‘ஹரிஜன்’ என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாகப் பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிகப் பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த நாதியற்ற, நலிவுற்ற, இழிவாகக் கருதப்படுகின்ற ஜனங்களைத்தான் (ஹரிஜன், 11.2.1933).

ஆனால், காந்திஜியின் விளக்கங்களுக்கு அன்று முதல் இன்றுவரை எழுந்த எதிர்ப்புக் குரல்கள் ஓயவேயில்லை. அதற்குக் காரணம் இல்லாமலில்லை.

1939இல் நார்சி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞர், தனது நாவலில் கோவிலுக்குப் பெட்டுக் கட்டி விடப் பட்டப் பெண்களையும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் ‘ஹரிஜன்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, தகப்பன் பெயர் தெரியாத தாசிமக்கள் அனைவரும் ‘ஹரிஜன்கள்’ என்று தெளிவாகச் சொல்கிறார். எனவே, ‘ஹரிஜன்’ என்று குறிப்பது கடவுளின் பிள்ளை என்ற பொருளிலன்று; மாறக, தாசிமகன் என்ற பொருளிலாம் என்று அறச் சீற்றம் கொள்கிறார் புனிதப்பாண்டியன். [ ‘தலித் மக்களா? தாசி மக்களா?’ தலித் அரசியல் தொகுப்பு;சுட்டி-03].

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று காந்திஜி பெயரிட்டழைத்ததை டாக்டர் அம்பேத்கர் வெறுத்தார். “தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்த வர்ணத்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா?” என்று அப்போதே எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார்.

குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவேதான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார் [சுட்டி-04].

“காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன்” என்று சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் அமர்வில் உ.பி. முதல்வர் மாயாவதி பேசியது, ‘காந்தி மீதி மாயாவதி பாய்ச்சல்’ என்ற தலைப்புச் செய்தியாகக் கடந்த 28.10.2007இல் வெளியானது [சுட்டி-05].

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் தி.மு.கழகத்திலிருந்து விலகி 1975இல் ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய, மறைந்த சத்தியவாணிமுத்து அம்மையாரும் காந்திஜியை ‘ஹரிஜன்’ பெயர் சூட்டல் காரணத்துக்காகக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் என்று பெயரிட்டு, அதே பெயரில் இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோரே பேசி இருக்கின்றனர்; பாடி இருக்கின்றனர் [சுட்டி-06]; எழுதியுமிருக்கின்றனர்.

“சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும் - அது

தாழ்ந்தவரைக் கை தூக்குமோ”

என்று மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்) என்பவர் பாடல் எழுதினார். அவரெழுதிய நூலுக்குப் பெயரே ‘காந்தி கண்டன கீதம்’ என்பதாகும். (உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, பக்கம்.11) [சுட்டி-07].

“தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் ‘ஆதி தமிழர்’ என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க முடியும்” என்று திருத்தம்(?) கொண்டு வந்திருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார் [சுட்டி-08]. அதாவது, இந்தியா முழுதும் வாழும் ஹரிஜனங்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு ‘ஆதித் தமிழர்’ என்பதுதான் பெயராம்.

சங்கராச்சாரியாரின் திருத்தம்(?) வேடிக்கையாக இருக்கும் அதேவேளை, காந்திஜியின் கதியை நினைத்துப் பார்க்கையில் மத்தளத்து உவமைதான் நினைவுக்கு வருகிறது.

***

தேசப்பிதா என்றழைக்கப் படும் காந்திஜியால் ஒரு சமுதாயத்துக்கு நன்னோக்கில் சூட்டப் பட்டப் பெயருக்கே இவ்வளவு கண்டனங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றவெனில், முஸ்லிம்களின் சமயநெறிப் பெயரான இஸ்லாம் என்பதை ‘முகமதியம்’ என்றும் முஸ்லிம்களை ‘முகமதியர்’ என்றும் திரும்பத் திரும்ப எழுதித் திரிபுவாதம் செய்யும் மலர் மன்னனுக்குக் கண்டனங்கள் பதிவு செய்யப் படவேண்டாவா?

எதைப் பற்றி எழுதினாலும் தொடர்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் ‘முகமதிய மதம்’, ‘முகமதியர்’ பற்றி மறவாமல் கட்டுரைக்குள் குறிப்பு வைத்து விடுவது மலர் மன்னனின் வழக்கமான திரிபுவாத உத்தியாகும். இதை நான் மிகைப்பட எழுதுவதாக யாரும் நினைத்தால் திண்ணையின் தேடுபொறியில் ‘முகமதிய’ என்ற சொல்லை இட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

திண்ணையில் நான் தேடிப் பார்த்த வகையில் மலர் மன்னனுக்கு அடுத்தபடியாக வருபவர் முஸ்லிம்களைத் ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து, மலர் மன்னனுக்கு முன்னோடியாக எழுதி வைத்த பாரதியார்.

//பாரதி எழுதுகிறார் ‘திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்’

ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.

திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்.

1791இல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ:

‘There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offence like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. ‘

இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான்.

பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து.

இவ்வெறுப்பின் உச்சத்தை ‘சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ‘ பாடலில் பரக்கக் காணலாம்.// -கற்பக வினாயகம் அவர்களின் திண்ணைப் பதிவிலிருந்து [சுட்டி-09].

சென்ற திண்ணை இதழில் மலர் மன்னனது டெக்னிக், கட்டுரைத் தலைப்பிலேயே இடம் பிடித்து விட்டதால் அவருடைய திரிபுவாதத்துக்கு எதிர்வினையாற்றுவது எனக்குக் கடமையானது.

இஸ்லாத்தை ‘முகமதிய மதம்’ என்றும் முஸ்லிம்களை ‘முகமதியர்’ என்றும் குறிப்பது குடி முழுகி விடும் தவறா? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக் கூடும்.

கிருத்துவம் தோன்றி 2007 ஆண்டுகளே ஆகின்றன என்பதைக் கிருத்துவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடும். இஸ்லாம் தோன்றி 1430 ஆண்டுகளே ஆகின்றன என்ற கருத்தில் சில அரை வேக்காடுகள் புலம்பி வைக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் அதை ஒப்புக் கொள்ள மாட்டான்; ஒப்புக் கொண்டால் வரலாற்றின் குடி முழுகித்தான் போகும்.

“சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது ‘முகமதிய மத’மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:31, 007:025]” என்று நான் ஏற்கனவே திண்ணையில் பொதுவாக எழுதி [சுட்டி-10] இருந்ததைப் படிக்க மலர் மன்னனுக்கு வாய்த்திருக்காது.

வாய்த்திருந்தாலும் தனது தவறான கருத்தை நிறுவுவதற்கு, ‘முகமதிய மதம்’, ‘முகமதியர்’ என்று திரிபுவாதத்தை வேண்டுமென்றே மலர் மன்னன் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவு..

“என்னது? வேண்டுமென்றே செய்கிறாரா?” என்ற ஐயம் வாசகர்களுக்கு எழலாம்.

வேண்டுமென்றேதான் செய்து கொண்டிருக்கிறார்:

//”There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quarrels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharanpur the Mussalmans looted houses, broke open safes and, in one case, a Hindu woman’s modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice.”

“Hindu-Muslim Tension: Its Cause and Cure”, Young India, 29/5/1924; Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.

மலர் மன்னனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு:

(முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையிலான) பெரும்பாலான சண்டை சச்சரவுகளில் ஹிந்துக்கள் இரண்டாம் இடத்தைத்தான் வகிக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சொல்லிவைத்தாற்போல் ஒரு முகமதியன் அடாவடிப் பேர்வழியாகவும், ஒரு ஹிந்து கோழையாகவுமே இருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவப்பூர்வமாகவே அறிந்துள்ளேன். அது ரயிலானாலும் சரி, பொதுவான சாலையானாலும் சரி, நான் தீர்த்துவைக்கும் சண்டை சச்சரவானாலும் சரி, நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஒரு ஹிந்து தனது கோழைத்தனத்திற்காக முகமதியனை ஏன் குறைகூறவேண்டும்? எங்கு கோழைகள் இருக்கிறார்களோ அங்கு அடாவடிப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். சஹாரன்பூரில் முகமதியர் (ஹிந்துக்களின்)வீடுகளைச் சூறையாடியதாகவும், பெட்டகங்களை உடைத்ததாகவும், ஒரு இடத்தில் ஒரு ஹிந்துப் பெண்மணி மானபங்கம் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது யாருடைய தவறு? தங்களுடைய அத்துமீறிய நடத்தைக்கு முகமதியர்களால் சமாதானம் சொல்ல இயலாது என்பது உண்மைதான். ஆனால் ஒரு ஹிந்து என்கிற முறையில், முகமதியரின் அடாவடிச் செயலுக்காக அவர்கள் மீது ஆத்திரம் வருவதைவிட ஹிந்துக்களின் கோழைத்தனத்தைக் கண்டு எனக்கு வெட்கம்தான் வருகிறது. பறிகொடுத்த (ஹிந்துக்களான)வீட்டுச்சொந்தக்காரர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரிழக்காதது ஏன்? தங்கள் சகோதரி மானபங்கம் செய்யப்பட்ட சமயத்தில் அவளுடைய உறவினர்கள் எங்கு போயிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் பொறுப்பு ஏதும் இல்லையா? என்னுடைய அஹிம்சைக் கொள்கை ஆபத்துக் காலத்தில் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய அன்பிற்குரியோரை அம்போவென விட்டுவிட்டு ஓடிப் போவது அல்ல. வன்முறையா, கோழைத்தனமாக ஓடிப் போதலா, இரண்டில் எதைத் தேர்வது என்கிற கேள்வி எழுமானால் கோழைத்தனத்தைக் காட்டிலும் வன்முறையினையே நான் தேர்ந்தெடுப்பேன்.//

ஆங்கில மூலத்திலுள்ள சொற்களான ‘Muslim’ மற்றும் காந்திஜி பயன் படுத்திய Mussalman ஆகிய சொற்களைத் தமிழில் எழுத வேண்டுமானால் முஸ்லிம்கள் என்றல்லவா மொழி பெயர்க்க வேண்டும்? மலர் மன்னன் எந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார் [சுட்டி-11] என்பதைக் கவனித்தால் அவருடைய டெக்னிக் அல்லது திருகுதாளம் தெளிவாகத் தெரிய வரும்.

கொஞ்சம்போல் இந்தி மொழி தெரிந்தவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் “ஹிந்தி ஹம் ஹை” என்ற உருதுக் கவிஞர் இக்பாலின் கவிதைக்கு “நாம் இந்தியர்கள்” என்று செம்மாந்துச் சொல்லும் தமிழ்ப் பொருள் கொள்ளலாகாதாம். மாறாக, “நாம் இந்துக்கள்” என்பதுதான் அஸ்லீ தர்ஜுமாவாம் [சுட்டி-12] இந்தியா முழுக்கச் சுற்றி வந்த செய்தியாளர் மலர் மன்னன் சொல்கிறார்.

காந்திஜியின் ‘முஸல்மான்’ என்ற சொல்லையே ‘முகமதியர்’ என்று மொழி பெயர்த்தவருக்கு, கவி இக்பாலின் ஹிந்தி’யை ‘இந்து’வாக்குவது பெரிய வித்தையா என்ன?

ஆனால், உண்மை நிலை வேறாகவன்றோ இருக்கிறது? இந்தியர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக ‘இந்து’ என்று குறிப்பிட்டுத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் ‘இந்துத்துவா’க்கள், தம் தெற்குத் தஞ்சைப் பகுதிச் சுற்றுப் பயணத்தின்போது, “நான் இந்துவல்ல; மனிதன்” என்று முகத்திலறையும் அறிவிப்புப் பலகைகள் தொங்கும் வீடுகளைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

நன்றி: திண்ணை, வஹ்ஹாபி

“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

November 12, 2007

இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், மலைஜாதியினர், பழங்குடியினரும் இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது மிகச்சிறுபான்மையாக 2.5 சதவீத அளவில் உயர்ஜாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் பிராமணர்களும் வாழ்கின்றனர்.

என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாள்தோறும் அராஜகங்களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன. எவருக்கும் எவ்விதத் தொந்தரவும் கொடுக்காமல், தொழுநோயாளிகளைக் கூடத் தொட்டுத் தூக்கிச் சேவை புரிந்த மருத்துவர் முதல் கர்ப்பத்தில் இருந்தச் சிசு வரை எவ்விதத் தயவுதாட்சண்யமும் இன்றி வெட்டித் துண்டாக்கப் பட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கப்படுகின்றனர். பள்ளியில் சேவை புரியும் கன்னியாஸ்திரிகள் முதல் உலகமே அறியாமல், தான் உண்டு; தன் குடும்பம் உண்டு என்று வாழும் குடும்பப் பெண்கள் வரை நடுத்தெருவில் - பலர் முன்னிலையில் கற்பு சூறையாடப்படுகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. பொருளாதாரம் திட்டமிடப்பட்டுக் களவாடப்படுகின்றன.

பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மதச்சார்பற்ற இந்தியாவின் காவல்துறை, இராணுவம், நீதித்துறை மற்றும் அரசாங்கங்களோ இவற்றையெல்லாம் கண்டுக் கொண்டே கைகட்டி, வாய்பொத்தி எதையும் காணாதவர்களாகவும் கேட்காதவர்களாகவும் இருப்பதோடு மட்டுமின்றி இயன்றவரை வன்முறைக்குத் துணைப் போகவும் செய்கின்றன.

இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட முஸ்லிம், தாழ்த்தப்பட்டச் சமுதாய மக்களோ போதிய உணர்வின்றி, தம் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜங்கள் நடக்கும் பொழுது மட்டும் “அய்யோ, அம்மா, கொல்கிறார்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?” எனக் கதறி அழுவதும் ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களுக்குத் தங்களிடமிருந்தே இருப்பதில் சிறிதைப் பிச்சையாகப் போட்டு விட்டு அதனை அப்படியே மறந்து விடுவதுமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து சாதனைகள் படைத்துக் கொண்டு உலக அரங்கில் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும், சுதந்திரம் அடைந்துச் சுமார் 60 ஆண்டுகளைக் கடந்து 21ஆம் நூற்றாண்டில் பீடு நடை போடும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவ, தாழ்த்தப்பட்ட மக்களின் எதார்த்த நிலை இது தான்.

போலியாக உலக அரங்கின் முன் தலை நிமிர்ந்து நிற்பதாகப் போலிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்தியாவை உண்மையிலேயே உலக அரங்கின் முன் தலை நிமிர வைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட அவலநிலைகள் இந்தியாவிலிருந்துக் களையப்பட வேண்டும்.

அதற்கு என்ன வழி? இதனை ஆராயும் முன் மேற்கண்ட இந்தியக் குடிமக்களின் அவலநிலைகளுக்குரியக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியம்.

பல்வேறு இன, மத, மொழி, கலாச்சார மக்கள் நிறைந்த ஒரு நாடு, உண்மையிலேயே அது ஜனநாயக நாடாக ஆக வேண்டும் எனில், அங்கு வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதார நிலைகள் ஒரே சமச்சீரில் மேன்மையடைய வேண்டும். சமூகத்தில் எந்த இனமும் தாழ்நிலையில் இருக்கக் கூடாது. இயன்றவரை எல்லா இன மக்களின் கல்வி , பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூக நிலைகள் குறைந்தபட்சம் ஒரே நிலைக்கு எட்ட வேண்டும்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், இன்று இந்திய மக்கள் தொகையில் சுமார் வெறும் 2.5 சதவீதத்தினரே இருக்கும் உயர் குடியினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பிராமணச் சமூகம், அரசின் அனைத்து அதிகார உயர்மட்டப் பதவிகளையும் தங்கள் கையில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பிரபல ஊடகங்களிலிருந்து, மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, பாதுகாப்புத்துறை வரை அனைத்து இடங்களிலுள்ள அதிகார உயர்மட்டப் பதவிகளிலும் அவர்களே நிறைந்துக் காணப்படுகின்றனர்.இந்தியாவில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் - கல்வியில் பிந்தங்கியுள்ளனர்; இவர்களுக்கு ஒரு சாதாரண கல் உடைக்கும் தொழிற்சாலையிலிருந்து, அரசு சார் உயர் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் உள்ள உயர் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; சாதாரண கிராமப் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிப் பதவிகளில் இருந்து மாவட்ட, மாநில அரசு அதிகாரிப் பதவிகள் வரை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்கள் வேலை செய்யும் படியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா இடங்களும் உயர்சாதியினரின் கைகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் அதிகாரங்கள் உடைய உயர்பதவிகளை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செல்ல விடாமல் தடுப்பதில் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர் . இதற்காக உண்மையைப் பொய்யுடன் கலந்து அந்தப் பொய்யையும் உண்மையாகச் சமூகத்தில் நம்ப வைக்கும் உத்தியை இவர்கள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஓர் உதாரணத்திற்கு:

கடந்த அக்டோபர் 6-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் எனும் ஆங்கிலச் சஞ்சிகையில், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலையை உயர்த்த முனையும் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தனியார் தொழிற்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை, “இட ஒதுக்கீட்டு முறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என்பது மட்டுமல்லாமல் தொழிற்துறையை அது வெகுவாகப் பாதிக்கும்” என வாதிடுகிறது.

மேலும், ‘மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த சாதிப்பிரிவினைகள் தான் உலகிலேயே மிக அசிங்கமான ஒரு சமூக அமைப்பாக இருக்க முடியும். மனுவின் சட்டப்படி தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பிராமணருக்கு அவர் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொன்னால், கொதிக்க வைக்கப்பட்ட எண்ணை அவரது வாயிலும் காதிலும் ஊற்றப்பட வேண்டும். இதன் காரணத்தினாலோ என்னவோ, சிறந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதியை உயர்சாதியினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் அவை கிடைப்பதே இல்லை.

இந்த நிலைமையைச் சீர் செய்யவே, இந்திய அரசு, 1950-லிருந்தே கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தியது. ஆயினும், சுமார் 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இக்கொள்கை போதிய பலனை நல்கியதா என்றால் இல்லை” என இக்கட்டுரைத் தொடர்கிறது.

இருப்பினும் பல அரசியல் காரணங்களுக்காக அரசு இக்கொள்கையை தனியார் துறையிலும் திணிக்க முயல்கிறது” எனக் குற்றம் சாட்டும் இக்கட்டுரை, “பிரதமர் மன்மோகன் சிங் தலித் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிட்டத்தட்ட மிரட்டியதாகச்” சொல்கிறது. “ஏற்கெனவே பொதுத்துறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு கொள்கையை தனியார் துறையிலும் நடைமுறைப் படுத்த முயல்வது பைத்தியக்காரத்தனம்” எனவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படச் செய்வது தனியார் நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இம்மக்களின் அவலநிலை தொடருவதற்குக் காரணமான உண்மையான குற்றவாளி, அரசாங்கமும் அழுகிப்போன அதன் கல்விக் கொள்கையும்தான்” என்ற அழுத்தமான ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.

கட்டுரையின் ஆரம்பப்போக்கைக் கவனிப்பவர்களை, “இந்தியாவின் கேடுகெட்ட சமூக நிலைக்குக் காரணம் புறந்தள்ளப்பட வேண்டிய மனுதர்மக் கொள்கையின் அடிப்படையிலான உயர்சாதியினரின் செயல்பாடுகளும், அவர்களே உயர் வேலைவாய்ப்புகளில் நிறைந்திருப்பதுமே” என்ற ஆணித்தரமாக எடுத்து வைக்கப்படும் அசைக்க முடியாத உண்மை, அக்கட்டுரையின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்து விடுகின்றது.

தொடர்ந்து, “பொதுத்துறையில் தோல்வியடைந்த ஒரு கொள்கையை அரசு தேவையில்லாமல் தனியார் துறையிலும் திணிக்கப்பார்க்கின்றது” என்றக் குற்றச்சாட்டை வைத்து மக்களின் மனதில் “ஆம், சரி தானே” என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொதுத்துறையில் தோல்வி அடைவதற்கானக் காரணம் என்ன என்பதைக் குறித்துப் பேசாமலேயே தொடர்ந்து, “தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றுக் கூறி மொத்த உண்மைகளையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றது.

கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்த “உயர் சாதியினரின் மனுதர்மக் கொடுமை” என்ற உண்மை, கட்டுரையின் மையக்கருவாகக் கூறியப் பொய்யை உண்மைப்படுத்த கொடுக்கப்பட்ட ஒரு விலை மட்டுமே என்பதை அநேகமாக எவரும் அறிய வாய்ப்பின்றி அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் உண்மையான நிலை என்ன?.

இந்தியத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவரைக் காட்டிலும் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படுகிறது” என அமெரிக்கப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வு ஒன்று உண்மையைப் போட்டு உடைக்கின்றது.

அதே தி எகனாமிஸ்ட் சஞ்சிகையின் அக்டோபர் 20 இதழில், அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள், இக்கட்டுரையில் வைக்கப்பட்ட அந்தப் பொய்களை மறுத்து அவற்றுக்கு எதிராக பதிலளித்துள்ளனர்.

நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இப்பேராசிரியர்கள் கடந்த இரண்டாண்டு காலமாக இந்த ஆய்வை நிகழ்த்தி வந்துள்ளனர். இந்த ஆய்வு, நன்கு படித்தத் தகுதியுள்ள கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மோடி நடத்திய இன ஒழிப்பு அராஜகத்தை எவ்விதம் தெஹல்காவினர் உலகிற்கு வெளிப்படுத்தினரோ, அதே பாணியில் இவர்கள் நடத்திய ஆய்வு முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு ‘விண்ணப்பித்த’ தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் ‘விண்ணப்பதாரர்களின்’ நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.

இந்திய இஸ்லாமியச் சமுதாயத்திற்கு கவலையளிக்கக் கூடிய வகையில், அசைக்கவியலா ஆதாரங்களுடன் இந்த ஆய்வறிக்கை சொல்லும் கருத்து, தனியார் துறைகளின் உயர்பதவிகளில் புகுந்துக் கொண்டு உயர்சாதியினர் நிகழ்த்தும் தகிடுதத்தங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

மேற்கூறப்பட்ட உதாரணம், இந்தியாவில் உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொள்ளும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள பிராமணச் சமூகத்தினர் உயர் அதிகாரப் பதவிகள் அனைத்தையும் தொடர்ந்துத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளில் மிகச் சாதாரணமான ஒரு யுத்தி மட்டுமே.

தகுந்த ஆதாரங்களுடன் ஹிந்துத்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்த தெஹல்காவைப் போன்று, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தனியாரில் உயர்சாதியினரின் ஆக்ரமிப்பையும் தாழ்த்தப்பட்ட, முஸ்லிம்களுக்கான பாரபட்சத்தையும் தோலுரித்த அமெரிக்கப் பேராசிரியர்களின் செயல்கள் ஊக்கமளிக்கின்றன. ஆனால், இவை இந்தியச் சமூகத்தை மேல்மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், அனைவருக்கும் சமநீதி கிடைத்து உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கவும் போதாது.

அதற்கு, இந்தியாவின் அனைத்து அதிகார உயர்பதவிகளிலும் பாரபட்சமில்லாத அளவிற்கு அனைத்து மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய நீதித்துறை, உளவுத்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளிலும், அரசு தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரப் பதவிகளிலும் உரிய அளவில் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மக்களுக்கும் நாட்டுக்கும் மிகுந்த பயனளிக்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட முற்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, தானாக முன்வந்து கண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிப் பின்வாங்க வைத்த பாரபட்சமில்லாத நீதி நடைமுறைப்படுத்த வேண்டிய இந்திய உச்ச நீதிமன்றம், அசைக்க முடியாத வீடியோ ஆதாரங்களின் மூலம் இந்தியாவில் நிலைகொண்டு விட்ட ஹிந்துத்துவத்தின் முகமூடியை தெஹல்கா கிழித்து எறிந்தப் பின்னரும் இதுவரை அதனைக் குறித்து வாயைத் திறக்காதது மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தப் பின்னரும் எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாக இருப்பதிலிருந்து மேற்கூறப்பட்டதற்கான அவசியம் மேலும் உறுதியாகின்றது.

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

வக்கிர சிந்தனையும் வரலாற்றுப் புரட்டுகளும்! - 4. கற்பழிப்புக்கு நான்கு சாட்சி!

March 23, 2007

வேதங்களை விளங்கிக் கொள்ள இயலாமல் குர்ஆனுக்கு வியாக்கியானம் சொல்ல வந்த ‘அதிமேதாவி’யைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். ஷரியா சட்டங்களைப் பற்றி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சித்து தனது மூடத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!

இந்த வக்கிர சிந்தனையாளர் எழுதுகிறார்:

சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:

கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

இந்த நபரின் மூடத்தனத்தை சகோ. அப்துல்லா வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்:

ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

இதே நபர் தனது இன்னொரு கட்டுரையில் மேலே உள்ள கூற்றுக்கு மாற்றமாக எழுதியிருப்பதையும் சகோ. அப்துல்லா சுட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 “எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.”

இந்த வக்கிர சிந்தனையாளரை நோக்கி சகோ. அப்துல்லா தொடுத்த கேள்வி:

இவர் சொன்ன “தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை” என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

கேள்விகளின் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது. பதில்கள்தான் வந்த பாடில்லை!

வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 3. யார் முஃமின்?

March 22, 2007

“அரபி மொழியில் ‘அலிஃப், பே ‘ (அகரம்) கூட தெரியாமல் குர்ஆனின் வசனங்களுக்கு அர்த்தம் இப்படித்தான், அப்படித்தான் என்று வாதிடுவதைப் போல ஒரு நேசகுமார்த்தனமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது! திருக்குர்ஆனின் அர்த்தங்களில் சந்தேகம் கொள்பவர்கள் யாராக இருந்தாலும், தெரிந்தவர்களிடம் இப்படித்தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுதான் முறை. அதைவிட்டுவிட்டு, இப்படித்தான் அப்படித்தான் என்று வாதிடுவதற்குக் காரணம் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது திரு. நேசகுமாருக்கு வேறு ஏதாவது நோக்கமிருக்க வேண்டும்.” - நாகூர் ரூமி - திண்ணை - அக்டோபர் 28, 2004

தனது இந்துமத வேதங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக படித்து ‘இது நமக்கு விளங்காத விஷயம். இதன் பக்கமே போகத் தேவையில்லை’ என்று முடிவுக்கு வந்த வக்கிர சிந்தனையாளர், அரபி மொழியிலுள்ள குர்ஆனுக்கு வியாக்கியானம் செய்வதை பாருங்கள்!

“திருக்குரானில் இந்த இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களே, பர்தா முறைக்கு அடித்தளமாக திருக்குரானில் காணப்படுகின்றன. இவையும், ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் இடப்பட்ட கட்டளையோ அல்லது எல்லா முஸ்லீம்களுக்குமான இறைவனின் கட்டளையோ அல்ல. முஃமின்கள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது கூட எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லீம்களை குறிக்கு முகமாக அல்ல, அப்போது முகமது நபிகளின் கூட இருந்த கூட்டத்தாருக்கு அல்லாஹ், இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களின் போது தெரிவித்த போதனைகளே ஆகும்.” - இஸ்லாத்தில் பர்தா - வரலாறும், நிகழ்வுகளும் - திண்ணை 11 நவம்பர் 2004

இந்த அரைகுறையின் பிதற்றல்களுக்கு சகோ.சலாஹுத்தின் தந்த விளக்கம்:

“இறைவன் நபிகளாரின் துணைவிகளுக்கு மட்டும் என்று கட்டளைகளை பிறப்பிக்க நாடினால் வசனம் 33:32ல் உள்ளவாறு ‘நபியின் மனைவிகளே! ‘ என்று நேரடியாக அழைத்திருப்பான். மாறாக ‘மூஃமின்களே ‘ என்று அழைத்தால் அது ஒட்டுமொத்த முஸ்லிம்களைத்தான் குறிக்கும். ‘மூஃமின் ‘ என்ற சொல்லின் பொருள் நம்பிக்கையாளர் என்பதாகும். அதாவது இஸ்லாத்தின் கொள்கைகளின்மீது மனதாற நம்பிக்கைகொண்ட அனைவரையும் இந்த சொல்
குறிக்கும். நீங்கள் சொல்வதுபோல் இந்த சொல் அப்போது நபிகளாரின் கூட இருந்த கூட்டத்தாருக்கு மட்டுமே பொருந்தும் என்றால், குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் ‘மூஃமின்களே! ‘ என்று நம்பிக்கையாளர்களை அழைத்து இறைவன் சொல்லும் கட்டளைகளை என்னவென்று சொல்வீர்கள்?” -
திண்ணை - நவம்பர் 18,2004 - நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா

இதற்கு வந்த பதில்:

“இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய சகோதரர் சலாஹுதீன், முஃமீன்கள் என்ற வார்த்தைக்கு நான் நபிகளாரைச் சுற்றியிருந்த கூட்டத்தாரைக் குறிக்கும் வார்த்தை அது என்று சொன்னதை மறுத்து, அது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையுமே குறிக்கும் என்று வாதிட்டுள்ளார்.

இது குறித்து, விரிவாக ஒரு தனி கட்டுரை எழுதவுள்ளேன். ஏனென்றால், இந்த மூஃமீன்கள் மற்றும் காஃபிர்களுக்கான அர்த்தப் படுத்துதல் பல கோணங்களில் திருக்குரானின் போதனைகளை சிதைத்து, இஸ்லாமியர்களை தொடர்ந்து 1425 வருடங்களுக்கு முன்பிருந்த போரிடும் நிலையிலேயே (war mode) வைத்துள்ளதால், இப்படியான அர்த்தப் படுத்துதலே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தொடர்ந்து அச்சமுதாயத்தில் தோற்றுவித்துக் கொண்டிருக்கும், தோற்றுவாயாக உள்ளது.

எனவே அதிமுக்கியமான இந்த அர்த்தப் படுத்துதலுக்கு தனியே விவரமாக மேற்கோள்களுடன் விரிவான ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
திண்ணை - December 9, 2004 - இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் - II

கட்டுரைக்காக காத்திருந்த சலாஹுத்தின்..

“முஃமின் என்ற வார்த்தையின் பொருள் குறித்து நேசகுமார் தனி கட்டுரை எழுதப்போவதாக சொல்லியிருப்பதால் அந்தக் கட்டுரை வந்ததும் அதற்குறிய விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.”
திண்ணை - December 23, 2004 - நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது! கட்டுரை வந்ததா என்பது தெரியவில்லை!

வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 2. அரசியல் இஸ்லாமும் சிலை வழிபாடும்!

March 21, 2007

கோயபல்ஸ் என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘இன்றைய கோயபல்ஸ்’ என்று பட்டமளிக்க தகுதியானவர் இந்த வக்கிர சிந்தனையாளர். வரலாறுகளை திரிப்பதே தமது முழுநேர தொழிலாக கொண்டிருப்பார் போலிருக்கிறது.

சிலை வணக்கம் உள்ளிட்ட இறைவனுக்கு இணை வைக்கும் எல்லா காரியங்களையும் தடுப்பதை அடிப்படையாக கொண்ட மார்க்கம் இஸ்லாம். ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதே இறைத்தூதர்களின் தலையாய பணி!

இந்த அடிப்படையான விஷயத்திலேயே தனது விஷமத்தை காட்டுகிறார் இந்த நபர் பாருங்கள்!

இந்த வக்கிர சிந்தனையாளர் தனது ‘திண்ணை’ கட்டுரை ஒன்றில் சொல்கிறார்;

“நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது”

(‘நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள்’ - நேசகுமார் - திண்ணை 16/12/2004)

இதைத் தொடர்ந்து, சகோ. அப்துல்லா அவர்கள் இந்த நபரிடம் தொடுத்த கேள்விகள்:

“இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் “நபிகளாரின் காலத்திலேயெ” என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.

பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!”

சகோ. அப்துல்லா அவர்கள் 3 மார்ச் 2005 அன்று கேட்ட இந்த கேள்விகள், இரண்டு ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்ட நிலையிலும் இன்னும் பதிலளிக்கப் பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை வேறு எங்காவது இதற்கு பதிலளிக்கப் பட்டிருந்தால் அதன் சுட்டியை தரும்படியும், இன்னும் பதிலளிக்கப் படாமல் இருந்தால், மேலும் தாமதிக்காமல் உடனடியாக பதிலளிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்!

March 18, 2007

கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு சேவியர் எழுதிய ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்’. இந்நூலைப் பற்றி நூலாசிரியர் சேவியர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ஜோ என்ற வலைப்பதிவர் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி‘ என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

மேலே தொடருமுன் இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்!

அக்டோபர் 2004. வலைப்பதிவுகள் பிரபலமாகியிராத காலம். தமிழ் எழுத்தார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்த மடலாற்குழுக்களைச் சார்ந்திருந்தனர். மரத்தடி, ராயர் காப்பி கிளப் போன்ற மடலாற்குழுக்கள் பிரபலமாக இருந்தன. பா.ராகவன், மாலன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் அந்த விவாதங்களில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது கிழக்கு பதிப்பகம் துவங்கப் பட்டு ஓராண்டு கூட நிறைவடைந்திருக்கவில்லை. அப்போது அவர்கள் வெளியிட்டிருந்த புத்தகங்களுள் ஒன்று நாகூர் ரூமி எழுதிய “இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்”. இந்தப் புத்தகத்தை அவர்கள் நேசகுமார் என்ற புனைப்பெயருடைய, மடலாற்குழுக்களில் கூட அப்போது பிரபலமாகியிராத, இன்று வரை தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத ஒரு நபருக்கு இலவசமாக அனுப்பினார்களாம். காரணம், இந்த நபர் மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தாராம். அவரது தவறான புரிதல்களை தெளிவிக்கவே இந்தப் புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைத்தார்களாம்.

(”இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹ¨ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான் நாகூர் ரூமிக்கு சில கேள்விகளை முன்வைக்கவே, இப்புத்தகத்தை பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சேஷாத்ரி பத்ரி, நாகூர் ரூமி பற்றிய எனது ‘தவறான புரிதல்களை ‘ தெளிவிக்க எனக்கு இப்புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்.” - நேசகுமார், Thinnai - October 22nd, 2004)

பிளாஷ்பேக்கை இங்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு இயேசு பற்றிய புத்தகத்திற்கு வருவோம்.

இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை தெளிவிக்க நேசகுமாருக்கு இலவசமாக புத்தகம் அனுப்பிய கிழக்கு பதிப்பகம், இயேசு பற்றிய அரவிந்தன் நீலகண்டனின் தவறான புரிதல்களை தெளிவிக்க ஏன் இந்தப் புத்தகத்தை அவருக்கு இலவசமாக அனுப்பவில்லை?

‘மகாகவி பாரதியின் பகவத் கீதை உரை’ என்ற நூலை பதிப்பித்திருக்கும் கிழக்கு பதிப்பகம், கீதையை ‘தவறாக’ புரிந்து கொண்டதால் ‘கீதையின் மறுபக்கம்’ எழுதிய கி.வீரமணிக்கு ஏன் இலவசப் பிரதி அனுப்பவில்லை?

‘ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள்’ ‘பக்தி இயக்கம்’ போன்ற அவர்களின் புத்தகங்களை பார்ப்பனீயத்தைச் சாடி எழுதிவரும் விடாது கருப்பு போன்ற பதிவர்களுக்கோ, இந்துமதத்தை ‘தவறாக புரிந்து வைத்திருக்கும்’ முஸ்லிம் பதிவர்களுக்கோ ஏன் அனுப்பவில்லை?

ஏன் இந்தப் பாரபட்சம்?

சரி..பிளாஷ்பேக்கை மீண்டும் தொடருவோம்:

கிழக்கு பதிப்பகம் நேசகுமாருக்கு இலவச புத்தகம் அனுப்பியதால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன.

1. குறுகிய காலத்திலேயே அந்தப் புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ( பத்ரி சேஷாத்ரி, திண்ணை, நவம்பர் 11 2004).

2. இரண்டாவது பின்விளைவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புத்தக விமரிசனம் என்ற பெயரில் நேசகுமார் எழுதிய கட்டுரைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே நேசகுமார் தொடர்ந்து எழுத நேரிட்டது.

(எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். - நேசகுமார்)

அவர் பிடித்த ‘புலி வாலை’ விடமுடியாத நேசகுமார், இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார வலைத்தளங்களிலிருந்து சில ஆதாரமற்ற தகவல்களை எடுத்து வைத்து தனது சப்பைக் கட்டுகளை தொடர்ந்தார். இந்த விவாதங்கள் மடலாற்குழுக்களிலிருந்து, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய சஞ்சிகைகள், பின் வலைப்பதிவுகள் என தொடர்ந்து கொண்டே சென்றது.

இச்சூழலில், நேசகுமாரைத் பின்தொடர்ந்து அவரைப்போலவே ‘முகம் மறைத்த’ வேறு சில ‘விமர்சகர்களும்’ இணையத்தில் தலை காட்டத் தொடங்கினர். தகுதி, தராதரம் எதுவுமில்லாத அவர்கள் ‘இஸ்லாம் பற்றிய விவாதம்’ என்ற பெயரில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினர். ‘நக்குற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன’ என்று ஒரு சொலவடை உண்டு. அதற்கேற்றாற்போல் இந்த ‘திடீர் விமர்சகர்கள்’ முஸ்லிம்கள் உயிரென மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியரான முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் கீழ்த்தரமான வார்த்தைகளில் எழுதினர். நேசகுமார் என்பவரும் இந்த முகமூடிகள் சிலரின் எழுத்துக்களை தனது பதிவுகளில் மேற்கோள் காட்டி எழுதினார். டென்மார்க் நாளிதழில் வெளியான கேலிச்சித்திரங்களை தமது பதிவில் வெளியிட்டும் தமது வெறியை தீர்த்துக் கொண்டார். அதுவரை கண்ணியமான முறையில் அவருடன் விவாதங்கள் புரிந்து வந்